29/6/09

3. தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை - செல்வமணியன்


மனிதன் இயற்கையின் ஆளுமையாளன்

இப்படி நீண்ட நெடிய வரலாற்று வாழ்வின் போராட்டத்தோடு வளர்ச்சியுற்ற மனிதன் விலங்கினத்திலிருந்து எவ்வாறு பிரித்துக் கொண்டான் என்பதையும், மனிதனையும் விலங்கையும் தனித்தனியே பிரித்து வைத்த இறுதி வேறுபாடு எவ்வாறு வெளியிடப்பட்டது என்பதையும் மார்க்சியப் பேரறிஞர் எங்கெல்சு பின் வருமாறு.
” விலங்குகள் தங்களுடைய செயல்களால், மனிதனைப் போலவே – அவனளவிற்கு இல்லாவிடினும் தமது சுற்றுச் சார்புகளை மாற்றவே செய்கின்றன. இப்படி எழும் மாற்றங்கள் அவைகளின் முறைக்கு அவற்றை ஏற்படுத்தியவர்கள் மீது எதிர் செயலாற்றுகின்றன இப்படி இருபுற மாற்றங்கள் தொடர்கின்றன…….என்றாலும் எல்லா விலங்குகளும் அவற்றின் எல்லா திட்மிட்ட செயல்களும் ஒன்று சேர்ந்தாலும் கூட இயற்கையை மாற்றுவதில் பெருவெற்றி அடையவில்லை. அவை மெல்லவே தொழிற்பட்டன. ஆனால் தனது வெற்றியின் முத்திரையை விரைவாகப் பதிக்கும் வாய்ப்பை முதன் முதலாக மனிதனே பெற்றான். இதனை இப்படி சுருக்கிக் கூறலாம். ஒரு விலங்கு தனது சுற்றுச் சார்பை வெறுமனே பயன்படுத்த மட்டுமே செய்தது. அது தனது இருத்தலால் தனது சுற்றுச் சார்பில் மாற்றங்களை மட்டுமே உண்டாக்கியது. ஆனால் மனிதனோ தனது சுற்றுச் சார்பை மாற்றுவதோடு மட்டுமின்றி, அதனைத் தன் குறிக்கோள்களுக்கு கீழ்ப்படிய வைத்து ஊழியம் செய்யவும் வைக்கிறான். அதனின் ஆளுமையாளனாகவும் மாறுகிறான்.
மனிதனுக்கும் பிற விலங்கினத்திற்கும் இடையிலான வேறுபாட்டின் செறிவு மிகுந்த உள்ளடக்கம் இதுவே! இந்த வேறுபாட்டை வெளிப்படையாக்கியது உழைப்பே என்பதை மீண்டும் ஒரு முறை நாம் இங்கு கூறலாம்(1)
என மன வளர்ச்சியையும் அதற்கு அடிப்படையான குறிக்கோள்களையும் சுட்டக் காட்டி மார்க்சியப் பேரறிஞர் எங்கெல்சு விளக்குகிறார். இப்படி தெளிவான வகையில் இயங்கியலின் அடிப்படையில் பல இலக்கக் கணக்கான ஆண்டு காலம் தொடர்ந்து நடந்தேறிய வளர்ச்சி மாறுபாடுகளைத் தற்கால மனிதர் இனம் தனக்குள்ளேயே பொதித்து வைத்திருப்பதைப் பேரறிஞர் எங்கெல்சு சுட்டிக் காட்டும் பகுதி மிகவும் சுவை பொருந்தியதாகும். மனித இன உயிரியல் வளர்ச்சியைக் கண்டறிவதில் முதன்மையான முத்தாய்ப்பு உடையதாகும். அப்பகுதி இதோ!
”தாயின் கருவில் இருக்கும் (ஒரு மனிதக் குழந்தையின் தற்கால வளர்ச்சியானது) கருவின் வளர்ச்சி வரலாறானது பல பத்து இலக்கம் (இலட்சம்) ஆண்டுகளாக நடந்தேறி வந்த நமது மூதாதையர்களின் புழு உடலத்திலிருந்து தொடங்கிய உடல் திரிவாக்கத்தின் சுருக்கமான (விரைவான) மறுநிகழ்வேயாகும். இதனைப் போலவே அம்மனிதக் குழந்தையின் மன வளர்ச்சியும் அதே மூதாதையரின் – அவர்களுள் குறைந்தளவு பிற்காலத்தவரின் – அறிவுத்துறை வளர்ச்சியின் சுருக்கமான ஆனால் கூடுதலான மறு நிகழ்வேயாகும்”(1)
இன்றைய உலகம் மற்றும் அதில் வாழும் உயிரினங்கள் பற்றிய அறிவியல் அறிஞர்களின் கருத்துக்களையும், மனிதரை உருவாக்கியதில் உழைப்பின் பங்கு குறித்த மார்க்சியப் பேரரறிஞர் எங்கெல்சின் கருத்துக்களையும் கொண்டு நாம் மனிதர் இனத்தின் உலக வாழ்வியல் பற்றி கீழ்க்கண்ட முடிவுகளை வந்தடையலாம்.
1. உலகில் உள்ள பெரும் உயிர் வாழ்வினங்கள் இயற்கையைச் சார்ந்தே உருப்பெற்றும் ஒன்றிலிருந்தே மற்றொரு வகை வாழ்வினத்தை உருவாக்கியும் உள்ளன. இதனாலேயே அவை தங்களுக்கிடையே இயற்கையின் சார்புத்தன்மையைப் பெற்றும் வாழ்கின்றன. இந்த இயற்கைச் சார்பின் காரணமாகவே அவை ஒன்றின் தேவையை மற்றொன்று நிறைவு செய்வதன் மூலம் வாழ்வை மேற்கொள்கின்றன.
2. உலக பெரும் உயிர் வாழ்வினங்களுள் அறிவுத்துறையிலும், ஆளுமைத்துறையிலும் சிறந்தும் உயர்ந்தும் நிற்பது மனிதரினமே ஆகும். மனிதரினம் இயற்கையின் மீது மேற்கொண்ட தொடர் உழைப்பே அதனை இந்த நிலைக்கு உயர்த்தியது. உழைப்பே மனிதரை மற்ற உயிர் வாழ்வினங்களிலிருந்து வேறுபடுத்திப் பிரித்து தனி வகை இனமாக்கியது. இதனால் உழைப்பின்றி மனிதன் இல்லை. மனித வளர்ச்சியுமில்லை.
3. வாழ்வைப் பகுத்துணரவும், இயற்கையை வாழ்விற்கேற்ப ஆளுமை செய்யவும் வல்லதாக மனிதரினம் வளர்ந்திருப்பதாலேயே, வரலாறு நெடுகிலும் கூட்டு உழைப்பும் சமுதாய உணர்வும் மக்களை இணைத்தும் பிரித்தும் தொடர்ந்தும் நின்று நிலவுகின்றன. சமுதாய உணர்வை கூட்டு உழைப்பு உருவாக்கியும், கூட்டு உழைப்பைச் சமுதாய உணர்வும் நெறிப்படுத்தியும் வந்துள்ளன. இந்த இணைப்பும் பகுப்பும் நெறிப்படுத்தலும் ஒன்று கலந்து மேலோங்கிய நிலையிலேயே இன்றைய உலகம் பல்வேறு தேசங்களாகவும், வேறுபட்ட அரசுகளாகவும், வேற்றுமை கொண்ட மக்களினங்களாகவும் பிரிந்தும் ஒன்றுபட்டும் நிற்கின்றது.
இந்த முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே உலகில் உள்ள மக்களினங்களின் வாழ்முறைகளையும் அவற்றை உருவகப் படுத்தும் உழைப்பு மற்றும் உற்பத்தி முறைகளையும், வேறுபாடுகளையும் இனம் கண்டு கொள்ள வேண்டும். சமுதாயத்தின் வளர்ச்சி வரலாற்றை கண்டறியவும் வேண்டும். இதுவே அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறையாக அமையும். சமுதாய வளர்ச்சியில் உழைப்பின் பங்கை, உற்பத்தியின் ஒழுங்கமைவைப் புறக்கணிக்கும் வேறு எந்தவகை அணுகுமுறையும் கற்பனையானதாகவே அமையும்.

(1) மார்க்சியப் பேரரறிஞர் எங்கெல்சின் ”மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய வகையில் உழைப்பின் பங்கு” எனும் நூலிலிருந்து
(தொடரும்)

26/6/09

இருண்டகாலத் திரை கிழித்துத் தலைநிமிரும் களப்பிறர் வரலாறு! – செல்வமணியன்


1.எழுத்தில் நெளியும் வக்கிர வன்மம்
”ஏடறிந்த வரலாறெல்லாம் வகுப்புப் போராட்டத்தின் வரலாறே” என்கிறது மார்க்சியம். இது அந்த ஏடறிந்த வரலாற்றின் இண்டு இடுக்குகளில் சிக்கிச் சிதைந்து சினந்து நிற்கும் முரண்பாடுகளை எல்லாம் முச்சந்திக்கு இழுத்து வந்து தீர்வு காண்பதன் மூலம் முன்னேறுவதே வரலாற்றுப் புரட்சிகள் என்கிறது.
ஆக, புரட்சிக்கு வரலாற்றின் பார்வை மிகவும் இன்றியமையாததாகும். முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதோ புரட்சியை முன்னேற்றுவதற்குரிய வழிமுறையாகும்.

மார்க்சியம் கண்டறிந்து இண்டு இடுக்குகளிலிருந்து வெளியே இழுத்து வந்து முச்சந்தியில் நிறுத்திய, எழுதப்பட்ட வரலாற்றுக்கும் இதனுள் எழுதப்படாமல் அலை மோதும் அழிக்கப்பட்ட வரலாற்றுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கும், மோதல்களுக்கும் தமிழக வரலாறு விதிவிலக்குப் பெற்றதல்ல.

தமிழகத்தின் வரலாறும் அத்தகு வரலாற்று மறைப்புகளை – அழித்தொழிப்புகளை ஆதிக்க வெறியில் மேற்கொண்டு வளர்ந்து வந்ததுதானாகும். அப்போக்குக்கு முதலுரிமையும் உடையதுமாகும்.
இது தம்மால் அழிக்கப்பட்ட மக்களின் வாழ்வு உண்மைகளை-உரிமைகளைப் பறித்தெடுத்தும்,வேரறுத்தும், திரித்துப் புரட்டியும், இருட்டிப்புச் செய்தும், சமரசப் படுத்தியும், தன்வயப்படுத்தியும் தனக்குரிமையுடையது என்று சொல்லிக் கொண்டும் வளர்ந்தது தானாகும். அறிவுக் களவாடல் – இலக்கியக் களவாடல் செய்தது தானாகும். ஆனால் இப்போக்குகளும், மறைப்பு முயற்சிகளும் மற்ற நாடுகளின் வரலாற்றைப் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு துகள்களாக்கப்பட்டு மறைந்து கிடக்கவில்லை. மாறாக, வெளிப்படையாகவே ஒரு மூட்டைக் கட்டி மூடி மறைக்கப்பட்ட நிலையில் தேங்கியும், திட்டுத் திட்டாக முட்டிக் கொண்டும் கிடக்கிறது.
தமிழக வரலாறெழுதிகளோ தேங்கிக் கிடக்கும் அவ்வரலாற்றை ”முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயல்வது போல்” என மக்கள் தம் வழக்கு மொழியில் சொல்வார்களே, அதனைப் போல் தங்களால் அழிக்கப்பட்டோரின் வரலாற்றைத் “தமிழ்“ என்ற மொழிச் சொல்லுக்குள் அடைத்து மறைத்து இருட்டிப்பு செய்ய முயன்று வருகின்றனர். தமிழகத்தின் வரலாறு முழுவதிலும் அவ்வாறே செய்து வந்துள்ளனர்.
அறிவியல் ஆய்வுகள் பெருத்துப் போயுள்ள தற்காலத்திலும் கூட, இதில் தமிழ் மொழியின் இலக்கிய-இலக்கணப் “பெருமை“ பேசும் புலவர்கள் தொடங்கி, மார்க்சியத்தால் தமிழரை விடுதலை செய்ய “ஆய்வு“ நடத்தும் ஆய்வாளர்கள் வரை இம்மறைப்புப் பணியில் தங்களுக்குள் கைகுலுக்கிக் கொண்டு ஒற்றுமையாய் ஓர் அணியாய் நிற்கின்றனர்.
அவர்களின் எழுத்துக்களில் அழிக்கப்பட்டோர் மீதான வக்கிர வன்மம் நெளிந்து நிமிர்ந்து வளைந்து குழைந்து கிடக்கின்றது.

எழுத்தில் கட்டமைக்கப்பட்ட தமிழகத்தின் வரலாறு “சங்க காலம்” எனச் சொல்லப்படும் காலம் தொடங்கி தமிழகத்தின் மீது அய்ரோப்பிய பிரித்தானியர் ஆட்சி செலுத்திய காலம் வரையிலான நெடியதும் பல்வேறு காலப் பகுப்புகளைத் தனக்குள் கொண்டதுமாகும்.
வரலாறெழுதிகள் பலரும் அவற்றைப் பல்வேறு வகைகளில் வகைப்படுத்தியுள்ளனர். அவற்றுள் பொதுவானதாகக் கொள்ளப்படும் வரிசை முறையை நாம் இங்கு பார்வைக்காகப் பின்வருமாறு முன்வைக்கலாம்.
1.சங்க காலம். 2.சங்கம் மருவிய அல்லது அழிந்த காலம் அல்லது களப்பிறர் காலம் அல்லது இருண்ட காலம். 3.பல்லவர்கள் மற்றும் பக்தி இயக்கத் தொடக்கக் காலம். 4.பிற்காலச் சோழர்கள் எழுச்சி மற்றும் பக்தி இயக்க உச்ச காலம். 5.பிற்காலப் பாண்டியப் பேரரசு மற்றும் பக்தி இயக்க முடிவு காலம். 6.முகமதியர் படையெடுப்புக் காலம். 7.இந்து எழுச்சி விசயநகரப் பேரரசு மற்றும் பக்தி இயக்கப் பெருஞ் சமரசக் காலம். 8.நாயக்கர் மற்றும் பாளையக்காரர் காலம். 9.அய்ரோப்பியர் மற்றும் விடுதலைக் காலம். 10.தற்காலத் தமிழ் மாநிலக் காலம்.
இவைதாம் நமக்கு அறிய வந்துள்ள தமிழக வரலாற்றின் உள்ளடக்கம்.

இப்படி வகைப்பட்டுள்ள காலப் பகுப்புகளில் தமிழக வரலாற்றியலின் தொடக்கமாக வைக்கப் பெற்றுள்ள சங்க காலம் என்பது அது குறிப்பிடும் தன்மையில் நீண்ட நெடியதும் தனக்கென தனித்த இலக்கிய – இலக்கண எழுத்துப் பதிவுருக்களைக் கொணடதாகும்.
அவ்விலக்கிய இலக்கணங்கள் நமக்கு தமிழ் கொண்டு வளர்ந்தெழுந்த தமிழரின் வரலாற்றில் வளர்ந்தோங்கிய சேர, சோழ, பாண்டியர் எனும் மூன்று தனித்தனி அரசுக் குடிகளை தனித்தனிப் பாடல்கள் மூலம் பேரரசுகள் வடிவில் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன.
அப்பேரரசுக் குடிகள் போர் வெறியோடு நாடு பிடி வேட்டையாடிய பெருமைகளை அவை வானளாவப் புகழ்கின்றன. பல்வேறு பழங்குடிகள் மற்றும் சிற்றரசுகள் மீது அப்பேரரசுகள் நடத்திய நாடு பிடி வேட்டை வெறியாட்டத்தை “அரச வாகை“ என்னும் “பார்ப்பன வாகை“ என்றும் வழிதுறை பிரித்து விதந்தோதுகின்றன.
இவ்வெற்றிகளைக் கொண்டு அப்பேரரசு மன்னர்களும் பெருமைக்குரியோரும் தங்கள் வெற்றிக்கு உதவியோர்க்கும், பார்ப்பனர்களுக்கும் பரிசுகள், நிலக்கொடைகள், வளக்கொடைகள் வழங்கி புகழ்ந்து புரக்கும் காட்சிகள் நல்ல தமிழில் நயப்பட விளக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் இம்மூன்று தமிழ்ப் பேரரசுகளின் பின்னணியிலும், பெருந்தமிழ் நாட்டின் பொது மக்களும், பிறரும் “வரிசைக்கு வருந்தும் பரிசிலர் வாழ்க்கை“ வாழ்ந்து, பேரரசுகளின் பெருவாயிற் புரங்களில் இரந்து புகழ்ப்பாட்டுக்கள் பாடிப் பரிசுகள் கேட்டுக் கிடைக்காமல், காடு மேடு என அலைந்து திரிந்து, கானக காடுகளின் சுனைகளில் நீரருந்திக் களைப்பாறி, கடையேழு வள்ளல்களின் இருப்பிடம் தேடிச் சென்று மலர்ந்த முகத்தோடு கையேந்திய நிலையையும் இரங்கற் குரலில் எடுத்துரைத்தும் நிற்கின்றன.
இப்படி இருவகை நிலைகளை எழுத்துப் பதிவில் முன்வைக்கும் சங்க கால இலக்கியங்களின் கட்டமைப்புகளின் இண்டு இடுக்குகள் எல்லாம் தமிழ்ப் பழங்குடி மக்களின் மரண ஒலிகளும், புலவர்களின் வறுமைக் கண்ணீரும், பெண்களின் ஓலமும் எங்கும் நிறைந்து நிற்கின்றன.

அவை தங்கள் வாழ்வின் மேல் நடத்தப்பட்ட அரசவாகை, பார்ப்பன வாகை வெறியாட்டங்களைச் சொல்லாமல் சொல்லி, நம் நெஞ்சைப் பிளக்கும் அளவுக்கு விண்ணுயர்ந்து நின்று, இலக்கிய உச்சியில் “ஓங்கார ஓலம்“ எழுப்புகின்றன.
தமிழக வரலாற்றியலின் தொடக்க காலம் இப்படியிருக்க, அதைத் தொடர்ந்து வரும் இரண்டாம் காலப் பகுப்பாகிய சங்கம் மருவிய அல்லது களப்பிறர் அல்லது இருண்ட காலம் எனப்படும் பகுப்போ, அச்சங்க காலத் தமிழர் வாழ்க்கையையே தலை கீழாகப் புரட்டிப் போட்டு நம் முன் நிறுத்துகிறது.
(தொடரும்)

25/6/09

இந்தியத்தின் அடிமைகளே! இனியாவது விழித்தெழுங்கள்!


நாகரீகம் வளர்ந்து விட்டதாகச் சொல்லப்படும் இன்றைய உலகில், வேறு எந்த இனத்திற்கும் நிகழாத அவலம் வன்னியில் நம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இறந்தவர்களின் எண்ணிக்கை இருபதாயிரமா நாற்பதாயிரமா என்று உலக நாடுகளுக்குள் பட்டிமன்றம் நடக்கிறதே தவிர, இந்த இறப்பிற்கு காரணமான சிங்கள பேரினவாத அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த எந்த நாடும் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மாறாக, சிங்கள இனவெறி அரசுக்கு உடனிருந்து உதவுகின்றன. ஈழத்தமிழர்களின் இரத்தம் குடித்த இந்திய அரசோ, படுகொலைகளை கச்சிதமாக நடத்தி முடித்த திருப்தியில் மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றது.

Eelam tamils குண்டுகளால் செத்தவர்கள் போக உயிரை மட்டும் கையில் பிடித்த படி எஞ்சியிருக்கும், மிதம் உள்ள ஈழத்தமிழர்களை வதை முகாம்களில் அடைத்து வைத்தள்ளது, சிங்கள இராணுவம். உணவின்றி பசியால் துடித்து இறந்தவர்கள், மருத்துவம் கிடைக்காமல் இறந்தவர்கள் என முகாம்களில் உள்ள மக்களும் பிணமாகவே வெளியே வீசப்படுகின்றனர். தமிழ்ப் பெண்களை பாலியல் இச்சைக்காக இழுத்துச் செல்லும் சிங்கள இனவெறி நாய்களைக் கண்டிக்கவோ தடுக்கவோ அங்கு ஆளில்லை. தனது குடும்ப உறவுகளை விசாரணை என்ற பெயரில், தரதரவென இழுத்துச் செல்லும் சிங்கள இனவெறியனை தடுத்தி நிறுத்தினால் ”புலி”யென்று அவனையும் விசாரணைக்கு இழுத்துச் செல்லும் நிலைமை தான் அங்குள்ள எதார்த்தம். அடையாளம் காண முடியாத பிணங்களாக புதர்களிலும், கடற்கரைகளிலும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறார்கள். ஒட்டு மொத்த இலங்கைத் தீவிற்கே உணவு வழங்கிய வன்னி மண்டலத்தில், ஒரு கைப்பிடி உணவிற்காக முகாமில், சுட்டெரிக்கும் வெயிலில் குடும்பத்துடன் தட்டேந்தி நிற்கிறான் தமிழன்.

வன்னியில் நடந்த தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கில் இறந்து கிடக்கும் தமிழர்களின் பிணங்களை, தடயங்கள் ஏதுமின்றி அழிக்கும் பணியில் அதிவேகமாக ஈடுபட்டுள்ளது சிங்கள இனவெறி இராணுவம். இதனைக் கருத்தில் கொண்டு தான், ஐ.நா. மன்றத்தினர், செஞ்சிலுவை சங்கத்தினர், மருத்துவர்கள், தொண்டு நிறுவனத்தினர், பத்திரிக்கையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என யாருமே அப்பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படாமல் தடுக்கப்படுகின்றனர். கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பு விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். உண்மைகளை ஓரளவு எழுதும் சிங்கள பத்திரிக்கையாளர்களும் தாக்கப்பட்டு மரண பயத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளனர். இவை அனைத்தும், நம்மை விட நன்கு தெரிந்த சர்வதேச சமூகமோ, இவற்றை வெட்கமின்றி வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.

தனது சொந்தங்கள் கொத்துக் கொத்தாக செத்து விழுகின்ற நிலையிலும், அவர்களுக்காக எதையுமே செய்ய இயலாத நிலையில் தமிழகத் தமிழர்களின் கைகள் இந்தியத் தேசிய அடிமை விலங்குகளால், கட்டி வைக்கப்பட்டுள்ளன. அதனை கட்டி வைத்தது யார்? வெடிகுண்டுகளால் பிணங்களாகவும், வெளியேறினால் அகதிகளாகவும் மாற்றப்பட்டுள்ள ஈழத்தமிழினத்தின் இந்த அவல நிலைக்கு இட்டுச் சென்றது யார்? ”எமக்காக பேசுங்களேன்” என்று நம்மை நோக்கி கேட்டார்கள். நாமும் பேசினோம். போராடினோம். தீக்குளித்துச் செத்தோம். என்ன நடந்தது? நமது தீக்குளிப்புகளையும் போராட்டங்களையும் மதித்தது யார்?

உலகிற்கே நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்த இனம், அரசு நிர்வாகம் ஏற்படுத்தி கடல் கடந்து வணிகத் தொடர்புகள் கொண்டிருந்த இனம், அணை கட்டி பாசனம் செய்து உலகிற்கே நீர் பயன்பாடு பற்றி போதித்த இனம் என்று பல்வேறு பெருமதிங்களைக் கொண்டிருக்கும் நமது தமிழினம், இன்று நாதியற்ற இனமாக தலை கவிழ்ந்து நிற்கிறது. உலகில் நமக்கு உதவுவதற்கு யாருமில்லை. ஒட்டு மொத்த தமிழர்களையும் குண்டு வீசி அழித்தாலும் கூட நமக்காக கண்ணீர் சிந்த ஆளில்லை. இன்றைய சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?


”இந்தியா எனது தாய் நாடு. இந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தோர்” என்று நெஞ்சில் வைத்து நாம் பள்ளியிலிருந்து உறுதியேற்றோமே அந்தத் தாய் நாடு தான் எம் தொப்புள் கொடி உறவுகளை எம் கண்முன்னேயே கொத்துக் கொத்தாகக் கொன்றது என்பதை நாம் இன்னுமா உணரவில்லை? எமது ”உடன் பிறந்தோர்”தாம் இந்தப் படுகொலைகளுக்கு மவுன சாட்சியாக இருந்து அங்கீகாரம் அளித்தார்கள் என்பதை இன்னுமா நாம் தெரிந்து கொள்ளவில்லை?

”கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி எம் தமிழ்க்குடி” என்று தமிழினத்தின் பல்லாயிர வருட வரலாற்றை மறைத்து விட்டு வெறும் 60 வருட ”இந்திய” அடையாளத்தை சுமந்து திரிந்ததற்காக நமக்கு அளிக்கப்பட்ட பரிசு ஈழத்தமிழர்களின் இரத்தமும் பிணங்களும் தான். ”நான் இந்தியன்” என்று பெருமிதம் கொண்டதெல்லாம், இந்த படுகொலைகளை நிகழ்த்துவதற்காகத் தானா..?

வங்க தேசத்து மக்கள் மேற்கு வங்கத்திற்கு அகதியாக வந்த போது, அவர்களுக்காக திரட்டப்பட்ட நிதித்தொகையில், இந்தியாவிலேயே அதிகமாக அள்ளி வழங்கியது தமிழ்நாட்டு மக்களாகிய நாம் தான். ஆனால் இன்றைக்கு, பல்லாயிரக்கணக்கில் நம் மக்கள் ஈழத்தில் செத்து மடிந்த போதும், “அவர்களை காப்பாற்றுங்கள்“ என தமிழகத்தில் நாம் தீக்குளித்துச் செத்துப் போராடிய போதும், நமக்கு ஆறுதல் வார்த்தைச் சொல்ல இந்தியாவில் யாரும் இல்லை. செத்தவர்கள் தமிழர்கள் என வேண்டாம், செத்தவர்கள் மனிதர்கள் என்ற பார்வையிலாவது இப்படுகொலைகளைக் கண்டித்து ஒரு சிறு அறிக்கையையாவது, வேற்று மாநிலத்தவரிடமிருந்து வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், இறுதி வரை வரவில்லை. இனியும் வராது. ”இந்தியர்கள்” என்று தமிழர்களாகிய நாம், நம்மை நினைத்துக் கொண்டாலும், ”தமிழர்கள்” இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எப்பகுதியில் இருந்தாலும் அநாதைகள் தான் என்பதை இவை தெளிவுபடுத்தி விட்டன.

தமிழின படுகொலைகளை தலைமையேற்று நிகழ்த்தி இரத்தக் கறையுடன் நிற்கும் ”இந்தியா”, கிரிக்கெட் போட்டியில் தோற்று விட்டதாக கவலை கொள்ளும், இரக்கமே இல்லாத வெட்கம் கெட்ட ஜென்மங்களும் இந்த தமிழ்நாட்டில் இருக்கின்றனர். தமிழர்கள் மீதான இந்திய அரசின் பகைமையை அவர்களுக்கெல்லாம் என்றைக்கு நாம் புரிய வைக்கப் போகின்றோம்? ஈழத்தமிழர்கள் மீது இந்தியா நடத்திய இரத்த வெறியாட்டத்தை கண்டும் கூட, இன்னும் இரக்கப்படாமல், ”இந்தியன்” என்று பேசித் திரிபவர்களுக்கு இவற்றை என்று நாம் உணர வைப்பது?

காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர், சேலம் ரயில்வே கோட்டம் என அண்டை தேசிய இனங்கள் நமது உரிமையை மறுதலித்த போதெல்லாம், அவர்களுடன் ஒன்று கூடி கூத்தடித்த இந்திய அரசுக்கு இதுவரை நாம் என்ன எதிர்வினை ஆற்றியிருக்கிறோம்? நமது தாயகப் பகுதியிலிருந்த கச்சத்தீவை நம்மைக் கேட்காமலேயே சிங்களனுக்கு வாரி வழங்கினானே தில்லிக்காரன், அவனுக்கு நாம் இதுவரை என்ன உணர்த்தியிருக்கிறோம்? நமக்கான உரிமை அளிக்கப்பட்டிருந்தும் கூட, இதுவரை காவிரி நீர் நமக்கு வந்ததில்லை. நாமே நமக்காக கட்டியது தான் என்றாலும், முல்லைப் பெரியாறு அணையை பார்வையிடக் கூட நமக்கு அனுமதியில்லை. நம் பகுதி மக்களுக்காக நாம் நடத்தவுள்ள கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக மீன் பிடிக்கச் செல்லும் நமது மீனவர்களை குருவிகள் போல வேற்று நாட்டவன் சுட்டுக் கொல்வதை பற்றி இந்தியனுக்கு எந்த கவலையுமில்லை. நம் கண்முன்னேயே நமது இரத்த உறவுகள், குண்டு வீசிக் கொல்லப்படுகிறதே என வாய்விட்டு கண்ணீர் விடக் கூட நமக்கு உரிமையில்லை! ஈழத்தமிழர் விடுதலைக்கு மட்டுமல்ல உலகில் வேறு எந்த விடுதலைப் போராட்டத்திற்கும் உதவ முடியாத நிலையில் தான் தமிழகத் தமிழர்களாகிய நாம் இன்றும் இருக்கிறோம் என்றால் நாம் உண்மையில் யார்?

அடிமைகள். ஆம். இந்தியத்தின் அடிமைகள். காலம் இதனை நமக்கு நன்கு உணர்த்தியிருக்கிறது. ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழிக்கிறோம் என்ற இறுமாப்பில், தமிழகத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உந்து விசை கொடுத்திருக்கிறது இந்திய அரசு. இந்தியத்தின் அடிமைகளாக போலி சுதந்திரம் பேசிக் கொண்டிருக்கும் நாம் நமக்கான விடுதலைப் போராட்டத்தை தொடங்குவதற்கான கட்டளையை பிறப்பித்திருக்கிறது வரலாறு. நிறைவேற்ற வேண்டிய இடத்திலிருக்கும் நாம், இனி என்ன செய்யப் போகிறோம்..?


க.அருணபாரதி

22/6/09

2.தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை - செல்வமணியன்


கடலுள் மூழ்கிய கண்டம்


இப்படிப்பட்ட மனிதர் இனம் இன்றைய உலகில் முதன் முதலாக எங்கு தோன்றி வாழ்ந்தது என்பதை, மார்க்சியப் பேரறிஞர் எங்கெல்சு,

” பல இலக்கம் (இலட்சம்) ஆண்டுகளுக்கு முன்னால், இன்னும் திட்டமாகத் தீர்மானிக்கப்படாத, புவியலறிஞர்கள் அறிந்துள்ள புவியின் வரலாற்றின் ஒரு காலகட்டகமாகிய மூன்றாம் காலக்கூறு (Tertiary Period) என்றறியப்படும் காலக்கட்டத்தில் (அதனுடைய முடிவில் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு) மிகவும் உயர் வளர்ச்சி பெற்ற மனிதக் குரங்கினம் வெப்ப மண்டலத்தில் ஏதோ ஓர் இடத்தில் வாழ்ந்தது. ஒரு வேளை அது தற்போது இந்திய மாக்கடலின் (”இந்தியா” எனும் சொல்லாட்சி இன்று உலகந்தழுவியதாக உள்ள நிலையில் எங்கெல்சு இந்தியா என்று பயன்படுத்தியுள்ளதை நாம் அரசியல் களத்தில் மறுக்கவியலாது. ஆனால் பாண்டியன் பெருங்கடல் என்ற பெயராட்சியே, பின்னாளில் இந்தியப் பெருங்கடல் என மருவி வந்திருப்பதற்கு வாய்ப்புண்டு என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். இப்பெருங்கடலினுல் நிலம் மூழ்கியதைப் பற்றி தமிழிலக்கியத்திலும் குறிப்புகள் உள்ளன என்பது வெளிப்படையானது.) அடியில் மூழ்கிப்போன ஒரு பெருங்கண்டமாகவும் இருக்கலாம் எனக் குறிப்பட்டுக் கூறுகின்றார்.(மார்க்சியப் பேரறிஞர் எங்கெல்சின் ” மனிதன் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய வகையில் உழைப்பின் பங்கு” எனும் நூலிலிருந்து.)

மேலும், மனிதர்களைக் குரங்கினத்திலிருந்து எது வேறுபடுத்திப் பிரித்து தனிவகை உயிரினமாக்கியது என்பதைப் பற்றிக் கூறும்போது,
” மரமேரிகளான குரங்குகளின் கூட்டத்திலிருந்து மனிதச் சமுதாயம் தோன்றுவதற்கு இலக்கக் கணக்காண ஆண்டுகள் கடந்து சென்றன. இந்தக் காலஅளவிற்கு புவியின் வரலாறிறிலுள்ள முகாமைத்தன்மையானது மனிதருடைய வாழ்நாளில் ஒரு நொடிக்கு இருப்பதை விட இதிகம் இல்லை. ஆனால் (இவ்வளவு காலம் கடந்தும்) அது இறுதியாகத் தோன்றவேச் செய்தது. அது குரங்குகளின் கூட்டத்திற்கும் மனிதச் சமுதாயத்திற்கும் இடையிலான இயல்பு வேறுபாடாக இருப்பது எதுவோ அதுவேயாகும், அதுவே உழைப்பு என்றும் தெளிவுபடுத்துகிறார்.

உழைப்பே மனிதரை உருப்படுத்தியது

மனிதர் இனத்திற்கும் குரங்கினத்திற்கும் இடையிலான பிரிப்பு வேறுபாடாக இருக்கும் இந்த உழைப்பு, மனிதனைச் சிந்திக்கத்தக்கவனாக, செயற்படத்தக்கவனாக, ஆளுமை செய்பவனாக மாற்றுவதற்கு எவ்வாறு தொழிற்பட்டது என்பதை, மார்க்சியப் பேரறிஞர் எங்கெல்சு,

”மனிதன் மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலையான பல்லாயிரம் ஆண்டுகளில், நமது மூதாதையர்கள் படிப்படியாகத் தம் கைகளைப் பொருந்தியவாறு பழக்கப்படுத்துவதற்கு கற்றுக் கொண்ட முதற்செயல்கள் (அதாவது தொடக்ககால உழைப்புச் செயல்கள்) மிகவும் எளிமையானவையாக மட்டுமே இருந்திருக்க முடியும்…… ஆனால், முகல் கருங்கல் மனிதக் கையினால் கத்தியாக உருவாக்கப்படுவதற்கு, ஒப்பு நோக்கினால் நாமறியும் காலம் அற்பமாகி விடுகிற ஒரு கால ஊழியாகக்கூட கடந்து விட்டிருக்கக்கூடும். (இத்தொடர் போக்கின் மூலம்) தீர்மானமான முன்னெடுப்பு தொடக்கி வைக்கப்பெற்று விட்டது. ஆம் (விலங்குத் தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு மாறும் வகையில்) கை விடுதலை பெற்று விட்டது. இவ்வாறாக கை என்பது உழைப்பிற்கான உறுப்பு மட்டுமல்ல, மாறாக அது (ஒரு தொடர்ந்த) உழைப்பின் விளைபயனுமாகம்…….. .
……ஆனால் கை மட்டும் தனியாக இருக்கவில்லை. அது முழு மொத்தமான, உயர்ந்தளவிலான பல்கூட்டுத் தொகுதியாக அமைந்த ஒரு உயிரினத்தின் உறுப்புமாகும். இதனால் (தொடர் உழைப்பின் பயனாக) கை என்ன நற்பயனைப் பெற்றதோ, அப்பயன்களை அது பணி புரிந்து வந்த உடலமைப்பு முழுவதுமே பெற்று வந்தது……. (இவ்வாறாக) உடலமைப்பின் பிற பகுதிகளின் மீது கையினுடைய வளர்ச்சியின் நேரடியான செயலாட்சியானது மிகவும் அதிக முகாமைத் தன்மை உடையாதகும்”.


…..கையின் வளர்ச்சியுடன், அதற்கான உழைப்புடன் மனிதன் இயற்கையின் மீது ஆளுமை கொள்வது தொடங்கியது. ஒவ்வொரு புதிய முன்னேற்றத்தின் முடிவிலும் மனிதனின் அறிவின் எல்லை விரிவாகிக் கொண்டே வந்தது. அவன் இப்போக்கில் இயற்கை பொருட்களில் இதுவரை அறியப்படாதிருந்த புதிய பண்புகளை தொடர்ந்தாற் போல் கண்டுபிடித்து வளரத் தொடங்கினான். இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறத்தில் மனிதரிடையே ஒருவருக்கொருவர் ஆதரவு, கூட்டுச் செயல்கள் போன்றவை வாழ்க்கை வழக்குகளாகின. இவ்வாறு பெருகிய வாழ்க்கை வழக்குகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தனி நபருக்கும் கூட்டுச் செயல்பாடுகளின் தேவையையும் விளைவையும் தெளிவுபடுத்தி சமுதாய உறுப்பினர்கள் ஒன்றாக நெருங்கி வருவதற்கு மிகவும் அவசியமானதாக உழைப்பு உதவியே வந்தது. சுருங்கக் கூறவேண்டுமெனில் உருவாகிக் கொண்டிருந்த மனிதர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதற்குரிய ஏதோ ஒன்று (உறவுகள்) உள்ளவர்களாகிய நிலையை எய்தினர். இந்தத் தேவை ஓர் உறுப்பை மிகவும் வளமுடையதாக உருவாக்கியது. இதனால் மனிதக் குரங்கின் வளர்ச்சியுறாத ஒலிகளை எழுப்பிய குரல்வளை, மிகலும் தெளிவாக இனங்கண்டறியப்படும் ஒலி வேறுபாட்டைப் படைக்க வல்லதாக உழைப்பினால் மாற்றயமைக்கப்பட்டது. ஆம், வாயின் உறுப்புகள் படிப்படியாக ஒரு தீர்மானமான ஒலிக்குப் பின் மற்றொரு வேறுபட்ட ஒலியை மாற்றி ஒலிக்க, அவ்வொலிகளின் கோர்வையை உச்சரிக்க கற்றுக் கொண்டன. இப்படி உழைப்பின் பயனால் பிறந்ததே பேச்சு.

….முதலில் உழைப்பு, அதன் பின்னரும் அதனுடன் இணைந்தும் உருவெடுத்த பேச்சு. இந்த முதன்மையான இரண்டு தூண்டுதலின் செயலாட்சியினால் காலப்போக்கில் மனிதக் குரங்கின் மூளை படிப்படியாக மனிதருக்குரியதாக மாற்றமடைந்து வளர்ந்தது. ….. மூளையின் வளர்ச்சியுடன் கை கோர்த்துக் கொண்டு, அம்மூளையின் உடனடி பணியாட்கருவிகளான புலன்களின் வளர்ச்சியும் நடந்தேறியது. பேச்சின் படிப்படியான வளர்ச்சியுடன் அதற்கியைந்த வகையில் கேட்கும் உறுப்புகளும் – செவி உறுப்புகளும் செம்மையடைவது தவிர்க்க முடியதாக அமைந்தது. இப்படி (தொடர் உழைப்பழன் பயனாக) மூளையின் முழுவளர்ச்சியைத் தொடர்ந்து (மனித உடலின்) அனைத்துப் புலன்களுமே செம்மையடைவது நடந்தேறியது.

”…..மூளை அதன் பணியாட்களாகிய புலன்கள், மேலும் மேலும் தெளிவுபெறும் பகுத்தறிவு, பொதுமைப்படுத்தவும் முடிவு காணவும் உள்ள திறன், போன்றவற்றின் வளர்ச்சியானது உழைப்பழன் மீதும் பேச்சின் மீதும் தொடர்ச்சியான எதிர்ச் செயல்பாடுகளை தொடுத்தே வந்தன. இவை மீண்டும் உழைப்பு பேச்சு ஆகியவற்றின் கூடுதலான வளர்ச்சிக்குத் திரும்பத் திரும்ப தூண்டுதல்களை அளித்தே வந்தன. இந்த வளர்ச்சி மனிதன் இறுதியாக மனிதக் குரங்கிலிருந்து முற்றிலும் வேறுபட்டவனாக மாறிப் பிரிந்தவுடன் முற்றுப் பெற்றுவிடவில்லை. தொகுப்பில் கூடுதலான வலுமிக்க முன்னேற்றத்தைப் படைத்தே தொடர்ந்தது. இந்த வளர்ச்சியானது (மனித முன்னேற்றத்தின்) வெவ்வேறு காலங்களிலும் வெவ்வேறு மக்களிடையேயும் அளவடிப்படையிலும் திசையடிப்படையிலும் இட அடிப்படையிலும் ஏற்பட்ட தற்காலிக பின்னேற்றங்களால் இடைமறிக்கப்படவும் தடை செய்யப்படவும் ஆளாகியே முன்னேறியது. என்றாலும் இந்தக் கூடுதலான வலுமிக்க முன்னேற்ற வளர்ச்சி, முழுமையான மனிதன் தோன்றியவுடன் செயலுக்குப் புதிய ஆக்கக் கூறான சமுதாய ஒன்றிப்பின் துணையுடன் ஒருபுறத்தில் வலுவுடன் முன்னோக்கி விரைந்து செல்லவும் மறுபுறத்தில் திட்டமிடப்பட்ட வாழ்வியல் முறைகளில் வழிநடத்தப்படவும், மனிதரினத்தை ஆட்படுத்தி நிறுத்தியது.”


”…….. கைகள் பேச்சு உறுப்புகள், மூளை, இவற்றின் ஒட்டுமொத்த செயல்பாட்டினால் தனிமனிதன் மற்றுமின்றி சமுதாய உறுப்பினராக இருந்த பல்வேறு மனிதர்கள் தொகுப்பில் மேலும் மேலும் சிக்கல் மிகுந்த செயல்களை (உழைப்பின் மூலம்) நிறைவேற்றும் திறம் பெற்றோராயினர். மேலும் உயர்ந்த குறிக்கோள்களைத் தீர்மானிக்கவும் அவற்றை அடைவதையும் மனிதர்கள் பெற்றடைவது இதனால் நடைமுறையாயிற்று. (இப்படி அமைந்த தொடர் போக்கில்) மனிதனின் ஒவ்வொரு தலைமுறையின் வேலை முறையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டு வளர்ந்தன. இதனால் வேலை முறைகளில் வகைப்பாடுகள் பிரிவதும் செய்நேர்த்திகள் மேலோங்குவதும் தொடர் நடைமுறையாயின. மனித வாழ்வில் (தொடர்ச்சியாக ஒன்றன் பின் ஒன்றாக) வேட்டையாடுவது, கால்நடைகளை மந்தைகளை வளர்ப்பது ஆகியவற்றுடன் உழவுத்தொழில் செய்வது போன்றவை வளர்ச்சியுற்றன. இவ்வளர்ச்சியின் பின்னணியிலேயே நூல் நூற்பு, நெசவு வேலை, மண்பாண்ட வேலை, உலோக வேலை ஆகியவற்றோடு தொழில் வளர்ச்சியும், கலம் கட்டுதல், கடற் பயணம் செல்லுதல், வணிக வாழ்வு மேற்கொள்ளல் போன்றவை ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தன.


இவற்றோடு மனித வாழ்வில் இறுதி விளைச்சலாகக் கலைகளும் அறிவியலும் வளர்ச்சி கொண்டன. (இத்தகு மனித வாழ்வு முன்னேற்றத்தோடு) குலங்கள்(1) தேசங்கள்(2) அரசுகளாகவும்(3) உருவெடுத்து ஓங்கி வளர்ந்தன. இவற்றால் சட்டங்களும் அரசியலும் தோற்றம் கொண்டதோடு, மனித உள்ளத்தில் தோன்றும் மனிதச் செயல்பாடுகளின் வியப்புக்குரிய எதிரொளிப்பான மதமும் தோன்றியது”.
என்று மனித இனத்தின் வரலாற்று வளர்ச்சிகளைச் சுட்டிக்காட்டி விளக்குகிறார். (இந்த நீண்ட மேற்கோளில் அழுத்தம் தந்துள்ள பகுதிகள் யாவும் எங்கெல்சால் தரப்பட்டவை. அடைப்புக்குள் வந்துள்ள சொற்றொடர்கள் விளக்கத்திற்காக எம்மால் தரப்பட்டவை. ஒரு நெடும் பகுதியைச் சுருக்கித் தரும்போது உள்ளடக்கம் சிதையாமலிருக்க இத்தகு சொற்றொடர்கள் உள்ளீடு செய்யப்படுவது தவிர்க்க இயலாததாகிறது.)

(1) குலங்கள் எனப்படுபவை மனிதச் சமுதாயத்தின் வளர்ச்சியில் தோன்றிய முதல் மந்தைச் சமுதாயத்தின், அதாவது ஒரே இரத்த உறவுடைய மனிதக் கூட்டம் வாழ்ந்து வந்ததைக் குறிக்கும் பெயர்க் குறியீடுகளாகும். தமிழ்ச் சமுதாயத்தில் இந்த குலக்குறியீடுகள் சாதிகளாகத் திரிவடைந்துள்ளன.

(2) தேசங்கள் எனப்படுபவை தற்கால மனிதச் சமுதாயத்தின் ஓர் ஒருங்கிணைந்த வாழ்வியல் வைப்பு முறையாகும். இதனுள் பல்வேறு குலங்கள் கலந்து மயங்கியுள்ளன. குல வாழ்வியலுக்கு மாறுபட்ட பல்வேறு புதிய தொழில்கள் தலையெடுத்துள்ளன. தொழில்களின் அடிப்படையில் வாழ்வியல் உரிமைகள் வகைப்பட்டுள்ளன, பிரிக்கப்பட்டுள்ளன என்றாலும் மக்களுக்கிடையில் ஒற்றுமைக் கூறுகளை மையப்படுத்தும் சமுதாய முறையாகும்.
(3) அரசுகள் எனப்படுபவை உழைப்புப் பிரிவினையால் மக்களிடையே காலங்காலமாக ஏற்பட்டு வந்த அதிகாரங்களின் தொகுப்பு நடைமுறை மையங்களாகும். மக்களுக்கு அவர்களுக்குரிய வாழ்வுரிமைகளை வகுத்துப் பிரித்து வழங்கவும், அவ்வாறு வழங்கப்பட்ட வாழ்வியல் உரிமைகளை மீளப் பறித்தெடுக்கவும் அதிகாரம் கொண்ட சமூக மேலாண்மைக் கருவிகள் ஆகும்.

தொடரும் ...

16/6/09

1.தமிழர் ஆரியரா திராவிடரா! - ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை - செல்வமணியன்



உலக மக்களினங்களும்
மார்க்சிய அணுகுமுறையும்


மனிதன் – இயற்கையின் உழைப்பின் குழந்தை

இன்று நாம் வாழ்ந்து வரும் இப்புவி எனும் உலகமானது சூரியனின் சுழற்சியினால், அந்தச் சூரியனிடமிருந்தே பிரிந்து பின் குளிர்ந்து உருவான ஓர் உயிர்க்கோளம் என்பது புவியியல் அறிஞர்களின் கருத்து.

இப் புவிக்கோள் மீண்டும் மீண்டும் தன் இடையறாத சுழற்சியினால் உருண்டையாகி மேலும் குளிர்வுற்றுப் பின் இறுகி, குளிர்ச்சியினால் தன்னைச் சுற்றி ஒரு வளி (காற்று) மண்டலத்தையும், அதற்குள்ளாக தன் மேற்பரப்பில் பெரியளவிலான நீர்ப்பரப்பினையும் உட்பரப்பில் நெருப்புக் குழம்பினையும் கொண்டுள்ளது என்பது இப்புவியின் இருப்பு குறித்துப் புவியியல் அறிஞர்கள் தந்து வருகின்ற விளக்கமாகும்.

அடுத்து, இப் புவியில் அமைந்துள்ள பெரிய நீர்ப்பரப்பில் இருந்துதான் முதலுயிரி தோன்றி, அதன் வளர்நிலையில் பல்வேறு கால மாறுபாடுகளோடு கூடிய திரிவாக்கம் (Evolution) எனப்படும் இயற்கைத் தேர்வு முறையில் படிப்படியாக பல்வேறு உயிர் வகைகள் தோன்றின என்பது அறிவியல் அறிஞர்களின் கருத்து.

இதன்வழி, உலகில் முதலில் நீர்வாழ் உயிரிகளும், இந்நீர்வாழ் உயிரிகளில் ஏற்பட்ட பல்வேறு மாறுபாடுகளின் அடிப்படையில் நிலவாழ் உயிரிகளும், பின்னர் இந்நிலவாழ் உயிரிகளில் ஏற்பட்ட பல்வேறு திரிவாக்கத் தகவமைப்பகளின் அடிப்படையில் இறுதியாகக் குரங்கின விலங்குகளும், அக்குரங்கினத்தில் ஏற்பட்ட திரிவாக்க வளர்ச்சிகளின் விளைவாகத் தற்கால மனிதனும் உருவெடுத்தான் என்பது நிறுவியுள்ள கூற்று.

மனிதர் இனத்தின் வாழ்வை, அதன் வரலாற்றுப் பொருண்மையை அறிவியல் அடிப்படையில் விளங்கிக்கொள்ள முனையும் யாருக்கும் மேற்கூறியுள்ள கூற்றுக்கள் புறந்தள்ளத் தக்கவையல்ல. மாறாக விரிவான ஆய்வுகளுக்கு உரியவையாகும். எனவே நாமும் இக்கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே மனித இன வாழ்வையும், அதன் வரலாற்றுப் படிநிலைகளையும் விளங்கிக் கொள்வது நலமாகும்.

இயங்கியலும் இயற்கைத்தேர்வும்
ஒன்று மற்றொன்றாதல் அதாவது வேறொன்றாக மாற்றம் அடைவதென்பது ஓர் இயங்கியல் உண்மை. ( ”இயங்கியல்” என்பது தொன்மை இயற்கை அறிவுத்துறைகளுள் ஓர் அடிப்படைப்பகுதியாகும். இது தற்காலத்தில் மார்க்சியர்களால் மீட்டெடுக்கப்பட்டு கையாளப்படுகிறது. மார்க்சியர்கள் இதனை அடிப்படையாகக் கொண்டே உலகம் மற்றும் வாழ்வியல் பற்றிய தங்களுடைய பார்வைகளை மேற்கொள்ளவும் விரிவுபடுத்தவும் செய்து வருகின்றனர். இந்த அடிப்படை அறிவுத்துறையினை பண்டைய கிரேக்கத் தத்துவவியலார் இயற்கையாகவே கொண்டிருந்தனர் என்பது மார்க்சியப் பேரறிஞர் எங்கெல்சின் கருத்து. ஆனால் இத்தகு இயங்கியல் அறிவை பண்டைத் தமிழர்களும் கொண்டிருந்தனர் என்பதைத் தமிழிலக்கிய ஆய்வுகளை மேற்கொள்ளும் எவரும் எளிதில் கண்டுணர்வர் என்பது இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்டிய செய்தியாகும்.) ஏனெனில் அது இயற்கை எனும் பேராற்றலை அடிப்படையானதாகவும், சார்புத் தன்மை உடையதாகவும் கொண்டிருக்கின்றது. இந்த அடிப்படையிலேயே அறிவியல் அறிஞர்கள் கூறுவது போல, தொடக்ககால முதலுயிரியயலிருந்து தற்கால மனிதர் இனம் வரை பல்வேறு உயிர்வகைகளும் திரிவாக்க முறையில் சார்பு நிலையுடன் பிறப்பெடுக்கவும் வாழவும், மறையவும் செய்தன.,செய்கின்றன.
இயங்கியலின் அடிப்படையில் மாற்றம் என்பது வேறுபட்டுப் பிரிகின்ற இயல்பைக் கொண்டதாகும். மாற்றம் என்பது இத்தகு வேறுபட்டுப் பிரியும் இயல்பை உள்ளடக்கியது என்பதால்தான், ஒன்று மற்றொன்றாக வளர் மாற்றம் அடையும்போது, அவைகளுக்கிடையில் ஒத்தத் தன்மைகளோடு எதிர் மறைத் தன்மைகளும் (Negative) தோற்றம் கொண்டு வளர்கின்றன. இதனால் ஒருபுறம் மாற்றம் மறுபுறம் முரண்பாடு எனும் புதிய நிலைகள் பிறக்கின்றன. இப்புதிய நிலைகளால் மாற்றங்களின் ஊடாகவே முரண்பாடுகளின் அடிப்படையில் போட்டிகளும் தோற்றம் கொள்கின்றன.
இப்படி இயங்கியல் போக்கில் ஒரு தொடர்நிலையில் உருப்பெறும் தோற்றம், மாற்றம், பிரிவு, முரண்பாடு, உடன்பாடு, போட்டி, அழிவு, மறைவு எனும் பல்வேறு திரிவாக்க வளர்முறைகளில் பிறப்பெடுத்த பல்லுயிரிகளும் ஒரு புறம் தமக்குள்ளாகவே போட்டியிட்டன. மறுபுறம் தம்மிடமிருந்து வேறுபட்டு நின்றனவோடும் போட்டியிட்டன.
இப்படி தோற்றம் கொண்டுவிட்ட பல்வேறு போட்டிகளின் போக்கில் சில உயிர்கள் போட்டிகளுக்கு ஊடாகத் தத்தம் நிலையிலிருந்து பிறழ்ந்து புதிய மாற்றங்களோடு தம்மைத் தகவமைத்துக் கொணடு வாழ முற்பட்டன. சில உயிரிகள் போட்டியின் நெருக்குதல்களைத் தாங்கவியலாமல் இறந்தும் போயின. இதனால் ஒரு வகை வாழ்ந்த இடத்தில் பல வகைப்பட்டவை வாழ நேர்தலும், பலவகையானவற்றில் சிலவற்றின் ஆளுமை நிறுவப்படுதலும் நடந்தேறின. இதுவே இயங்கியல் காட்டும் உயிரின வரலாற்றில் உண்மை நிலை. இதையே அவர்கள் இயற்கைத் தேர்வு என்றனர்.
இவ்வாறு உயிரின வாழ்வியலில் ஆளுமை நிலைகள் தோற்றம் கொண்டு நின்று நிலவுதற்கு பல்லகைப்பட்ட வாழ்வியல் போட்டிகளால் வென்று வளர்த்தெடுக்கப்பட் திரிவாக்க வளர்ச்சிகளே முதன்மைக் காரணிகளாகும். இப்படி ஏற்பட்ட வளர்ச்சிகளின் மேல் நின்று, இன்று உலகையே ஆளுமை செய்யும் இயற்கையின் சிறப்பான உயிரியே மனிதர் இனம் ஆகும்.
இயற்கைத் தேர்வின் மூன்று பாதைகள்
இன்றைய மனிதர் இனம் பிறப்பெடுத்த திரிவாக்க வளர்நிலையைப் பின்வருமாறு அறியலாம். இன்று நமது கண்ணெதிரே தோன்றி நிலைத்து வாழும் உயிரிகளை அவை பெற்றுள்ள உருவம், அவை கொண்டுள்ள தகவமைப்புகள், அவை மேற்கொள்ளும் வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கொண்டு மூன்று பெரும் உயிர் வாழ்வினங்களாகப் பிரிக்கலாம். அவை
1. தாவர இனம்

2. விலங்கு இனம்

3. மனித இனம்
(இனம் என்ற தமிழ்ச் சொல்லானது, அதன் சொல்லாட்சியில் அடையாளங்காணுதல் என்பதையும், வகைப்படுத்தல் என்பதையும் தன் உட்பொருளாகக் கொண்டு இருந்து வருகிறது.)
இம் மூன்று பெரும் வாழ்வினங்களின் அடிப்படையில் காண்போமாயின், திரிவாக்க அறிவியல் வளர்ச்சியின் படி, உலகப் பரப்பில் முதன் முதலாக உயிரி என்ற வகையில் தோன்றிய உயிரினம் தாவர இனமே ஆகும். திரிவாக்க அறவியலின் படி இத்தொன்மை தாவர உயிரினமே தன் வாழிடத்தின் சூழமைவுகளுக்கேற்பத் தமது வாழ்நிலையிலும் உடலமைப்பிலும் மாறுபாடுகளை ஏற்று, திரிவாக்க வளர் முறையின் காரணமாகத் தன்னிடமிருந்து வேறுபடுகின்ற, ஆனால் தனனைச் சார்ந்த பல்வகைத் தாவர உயிர்களைத் தோற்றுவித்தது. அதன் மூலம் அது படிப்படியாகப் பல்வேறுகால இடைவெளிகளின் ஊடே தாவர உயிர்களின் வளர்ச்சிப் பாதை ஒன்றினையும் தோற்றுவித்தது.
இப்படி உருவெடுத்த தாவர உயிரிகளின் வளர்ச்சிப் பாதையே, அதனினும் மாறுபட்ட விலங்குகளின் தோற்றத்திற்கு அடிப்படையாய் அமைந்தது. புவியியல் சூழல்களில் ஏற்பட்ட பல்வேறு வேறுபாடுகள், தாவர உயிரிகளின் இடப்பெயர்வுக்கும், வாழ்வமைதியைக் குலைக்கும் போக்குக்கும் இடமளித்த நிலையில்தான், அவற்றைத் திரிவாக்க வழியில் ஏற்று தங்களைத் தகவமைத்துக் கொண்ட தாவர உயிரிகளே, முதனிலை விலங்குகளாக மாற்றமடைந்தன. இப்போக்கு முதலில் நீர்வாழ் தாவர இனங்களில் தான் முதலில் நடைபெற்றது என்பது அறவியல் அறிஞர்களின் கருத்து. இப்போக்கில் மேலும் மேலும் மாற்றங்கள் தொடர்ந்த நிலையில்தான், அவை முழுமையான விலங்குயிரிகளாகப் பிரிவுபட்டன. இதன் பின்பே முழுமையான விலங்குயிரிகளில் நடைபெற்ற திரிவாக்க மாற்றங்கள் விலங்குயிரிகளின் வளர்ச்சி ஒரு தனிப் பாதையாகப் பிரிவதற்கு வழியமைத்துக் கொடுத்தன. இதுவே பின்னர் தனிப்பெரும் பாதையாகவும் மாற்றமுற்றது.
தாவர இனங்களின் வளர்ச்சிப் பாதையிலிருந்து விலங்கினங்களின் பாதை பிரிந்துள்ளதை, விலங்கினங்களுள் பெரும்பாலனவை தனது உணவுத் தேவைக்குப் பொதுநிலையில் தாவர இனங்களையேச் சார்ந்திருப்பதைக் கொண்டு அறிந்துகொள்ளலாம். இப்படி சாரிபு நிலையில் உருவாகிய விலங்கினப் பாதையே, அதற்கடுத்ததாகிய மனித இனப் பாதைக்கு அட்ப்படையாகிறது. விலங்கின வளர்ச்சிப் பாதையில் பல்வேறு விலங்கின வகைகளை உருவாக்கிய திரிவாக்க வளர்ச்சியே இறுதியில் குரங்கின வகையை உருவாக்கியது.
உயிரின வளர்ச்சி வரலாற்றில் குரங்கினம் தோன்றிய நிலையே, மனித இனம் பிறப்பெடுத்ததற்கான அடிப்படையாகும். முதலி குரங்கினத்திலிருந்து திரிவாக்க வளர்ச்சிகளின் ஊடாகப் பல்வேறு வகைக் குரங்கினங்கள் தோன்றின எனறும், அவற்றுள் வாலில்லாக் குரங்கு வகையிலிருந்து நிமிர்ந்து நடக்கக்கூடிய குரங்கு வகையினம் தோன்றியது என்றும், அவற்றிலிருந்தே மனிதக் குரங்குகள் உருவாகின என்றும் மாந்தவியல் (மனித இனத்தின் தோற்றம், மற்றும் அதன் வகைப்பாடுகள், அவற்றுக் கிடையேயான உறவுகள் பற்றிய ஆய்வறிவியலே மாந்தவியல் எனப்படும் ஆய்வுத்துறையாகும்.) அறிஞர்கள் உரைத்து வருகின்றனர். இதனால் அவர்கள் குரங்கினங்களின் வளர்ச்சிப் பாதையையே மனித இனத்தின் பாதையெனவும் வரையறுத்து மனித இனத்தின் தோற்றத்தை விளக்கி வருகின்றனர்.
மனித இனத்தின் இயற்கைச் சார்பு ஆளுமை
இப்படி, பல்வேறு திரிவாக்க வளர்ச்சியினால் உணடாகிய மனித இனம், தான் வாழ்ந்த வாழிடங்களின் தன்மை, புவியியல் சூழல், வெப்பநிலை போன்ற காரணிகளுக்கேற்ப தனது வளர்ச்சியிலும் திரிவாக்க வழி மாற்றங்களை ஏற்றுப் பல பிரிவினங்களாகப் பிரிந்து இன்று உலகமெங்கும் பரவி விரவி வாழ்ந்து வருகின்றது. இப்படி உள்ள பிரிவினங்களுக்கு எடுத்துக்காட்டாக வெள்ளை நிறத்துடன் வாழும் மனிதர்கள் வெள்ளையர்கள் என்றும், கருமை நிறத்துடன் வாழும் மனிதர்கள் கருப்பர்கள் என்றும் அழைக்கப்பட்டும் நடத்தப்பட்டும் வருவதைக் கொள்ளலாம்.
இவ்வாறு, பல பிரிவுகளாகப் பிரிவுற்று வாழும் அனைத்து மனித இன மக்களினங்களும் தங்களின் உணவுத் தேவைகளுக்காகத் தனது முன்னோடி உயிரினங்களான தாவரம் மற்றும் விலங்கு இனங்களையே சார்ந்துள்ளனர் என்பது யாராலும் மறுக்க இயலாத உண்மையாகும். இயங்கியலின் படி கூறினால் இதுவே உயிரின வளர்ச்சிப் பாதையில் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் சார்புத் தன்மையாகும்.
இப்படித்தான் இச்சார்புத் தன்மையின் அடிப்படையில் அனைத்து வகை உயிரினங்களும், அவற்றுக்கிடையேயான திரிவாக்க வளர்ச்சியின் தொடர் போக்கின் காரணமாக ஒன்றையொன்று சார்ந்து வாழ்பவையாகவும், ஒன்றின் தேவையை மற்றொன்று நிறைவு செய்தும் வாழ்ந்து வருகின்றன. அதற்கேற்ப தமது வாழ்முறையிலும் இருப்பு முறையிலும் பல தகவமைப்புகளைக் கொண்டும் இருந்து வருகின்றன.
இப்படியுள்ள அனைத்துவகை உயிரினங்களிலும் அறிவில் முதிர்ந்த இனமாக இருப்பது மனிதர் இனமே ஆகும். இப்படி அது உயர்ந்திருப்பதற்கான அடிப்படையானது பல்வேறு வழிகளில் அது தன் வாழ்வியலில் பல தலைமுறைகளாகப் போராடிப் பெற்ற திரிவாக்க வளர்ச்சிகளும், அப்போராட்டங்களுக்கு அடிப்படையாய் அமைந்த உழைப்புமே ஆகும். இப்படி இயற்கையின் மீது நடைபெற்ற உழைப்புப் போராட்டத்தில் பெற்ற அறிவினாலேயே மனிதர் இனம் தனக்குரிய வாழ்க்கைக் நெறிகளை வகுத்துக் கொண்டு, பிற உயிரினங்களின் மீது தனது ஆளுமையைச் செலுத்திவருகின்றது.
தொடரும்
கடலுள் மூழ்கிய கண்டம்

6/6/09

தமிழக மக்களின் பொறுப்பின்மையும் ஈழ மக்களின் அவல நிலையும்

இன்றைய தமிழக மக்களின் போக்கு என்பது மிகவும் கவலைக்குரியதாகவும், கண்டனத்திற்குரியதாகவும் உள்ளது. இவர்கள் முழுக்க முழுக்க அடிமை எண்ணம் கொண்டவர்களாகவும், அந்நிய மோகம் நிறைந்தவர்களாகவும் இருக்கின்றனர்.

இவர்களுக்கு எப்படிப்பட்ட அநீதி இழைக்கப்பட்டாலும் அதை எதிர்த்து கேள்வி கேட்கவோ, போராடவோ திராணியற்று இருக்கிறார்கள். அந்த அநீதிக்கு அடிபணிந்தோ, அல்லது அதற்கான மாற்று வழியையோ தேர்ந்தெடுத்துச் செல்கின்றனர்.இதற்கு அவர்கள் சொல்லும் ஒரே பதில் ”நம்மால் என்ன செய்ய முடியும்” என்ற நம்பிக்கையற்ற, பொறுப்பற்ற பதில். இதைவிட முக்கியமானது அவர்களுக்கு உல்லாச வாழ்க்கையின் மீதுள்ள மோகம், திரைப்படம், தொலைக்காட்சி என்ற சுகபேகா வாழ்க்கையில் திளைத்துக் கிடக்கிறார்கள். இந்தச் சுகங்களை சிறிதுகூட இழக்க மனமில்லை.

எவனுக்கு என்ன நேர்ந்தால் என்ன? தான் உண்டு தன் வேலையுண்டு என்ற அக்கறையற்ற தன்மை. இல்லையெனில் ஈழத்தில் நமது உறவுகள் கொத்துக் கொத்தாக கொன்ற பொழுதும் கூட கொஞ்சமும் அதைப் பற்றிய சிந்தனையில்லாமல் மானாட மயிலாட, திரைப்படம் போன்ற களியாட்டங்களிலேயே ஆர்வமாய் ஈடுபட்டனர். என்னவோ அங்கே அப்படி ஒரு கொடூரம் நடக்காத மாதிரியும் இங்கே என்னவோ இவர்கள் சம உரிமையுடனும் சுதந்திரமாக இருப்பது போலவும் மகிழ்ச்சியாய் இருக்கின்றனர்.

”தமிழா நீ ஒரு அடிமை” என்பதை முதலில் உணர்ந்து கொள். எப்படியென்றால் நன்றாக யோசித்துப் பார் உன்னால் உன்னுடைய எந்த உரிமையை போராடிப் பெற முடிந்தது.
காவிரிப் பிரச்சனையில் நீர் உரிமையைப் பெற முடிந்ததா?

பாலாற்றின் குறுக்கே அணைகட்டக் கூடாது என்ற கோரிக்கையில் வெற்றி கிடைத்ததா?

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் நமக்கு நீதி கிடைத்ததா? எல்லைப் பிரச்சனையில் நமக்கு நீதி கிடைத்ததா?


மொழியுரிமை – தமிழ் வழிக் கல்வி, தமிழ் ஆட்சி மொழியுரிமை கிடைத்ததா?

அட இவ்வளவு ஏன் நம் மீனவர்களை வெளி நாட்டுச் சிங்களவன் சுட்டுக் கொன்றானே நம்மால் தடுக்க முடிந்ததா?
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் விவசாய நிலங்கள் பறிக்கப்படுகின்றதே அதைத் தடுக்க முடிந்ததா?

கூடங்முளத்தில் உள்ள அணுமின் நிலையத்தை நீக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகப் போராடும் அந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியென்ன?

அமெரிக்காவுடன் போட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இன்னும் இரண்டு உலைகள் கூடுதலாக.

இந்தக்கூடங்குள பிரச்சனை அதிகம் பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.ஏனெனில் அதற்கு எதிராக நடக்கும் போராட்டச் செய்திகைள் கூட வெளியே வருவது இல்லை. இந்தக் கூடங்குளம் நெல்லை மாவட்டத்தில் உள்ளது. இந்த அணு உலைகள் முதலில் கேரளாவில் அமைக்கவே இந்திய அரசு முயற்சி செய்தது. ஆனால் கேரளாவில் நடந்த கம்யுனிச ஆட்சி மற்றும் மக்கள் போராட்டத்தாலும் அது அங்கிருந்து தமிழகத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த மாதிரியான அணு உலை ஒன்று 1986ஆம் ஆண்டு இரசியாவில் உள்ள செர்னோபில் என்ற ஊரில் வெடித்தது. இதனால் இலட்சக்கணக்கான மக்கள் இறந்ததுடன் பல மக்கள் தோல் புற்றுநோய், இரத்தப் புற்றுநோய் போன்ற உயிர்க் கொல்லி நோய்களுக்கு உள்ளனார்கள். எனவே அந்த நாடு இந்த அணு உலையைத் தடை செய்தது. உடனே இந்த அணு உலையை அமைக்க அந்த நாடு இந்தியாவின் உதவியை நாடியது. இவ்வளவு அபாயகரமான இந்த அணு உலை கூடங்குளத்தில் அமைந்ததே நமக்குத் தெரியாது.

எதிர்பாராமல் ஒரு விபத்து ஏற்பட்டுவிட்டால் உலையிலிருந்து சுற்றுவட்டத்தில் 70 கி.மீ வரையிலான மக்கள் நிரந்தரமாக நம் வாழ்விடத்தை விட்டு 24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட வேண்டும். அப்படி வெடித்தால் அது தமிழகம் முழுக்கவே பாதிப்பை ஏற்படுத்தும். இது மட்டுமின்றி இதில் இருந்து வெளியேறும் கழிவுகள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போக கிட்டத்தட்ட 40,000 ஆண்டுகள் ஆகும்.

இப்படி இன்னும் பல பிரச்சனைகள் தமிழகத்தைச் சுற்றியுள்ளது. இதனால் ஏற்படப்போகும் அபாயகரமான விழைவுகளைப் பற்றியோ எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையைப் பற்றியோ சிறிதும் பொறுப்பற்ற தன்மையிலேயே இருக்கின்றனர். இவ்வாறு இவர்களைச் சூழ்ந்துள்ள பிரச்சனைகளுக்கு எதிராகப் போராடாமல் அக்கரையற்றத் தன்மையிலேயே இருப்பது இவர்களை அழிப்பதுடன் ஒட்டுமொத்த இனத்தையே அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும்.

60 ஆண்டு காலமாகப் போராடும் ஈழத் தமிழர்களின் போராட்டமே ஒரு வலிமையான, விலைபோகாத, உன்னதமான தலைவனின் வழிநடத்தல் இருந்துமே இன்று மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. இங்கே இருக்கும் தலைவர்களோ பிணத்தின் நெற்றியில் ஒட்டும் காசைக் கூட திருடும் தலைவர்களே இருக்கின்றனர். இவர்களை இனியும் தமிழினத் தலைவர் என்றும், அய்யா என்றும், அம்மா என்றும், அன்னை என்றும், பெரியம்மா, பெரியப்பா என்றும் நம்பினால் நீங்கள் உயிரோடு புதைக்குழிக்குச் செல்வதற்குச் சமம்.

இங்கே இருக்கும் கட்சிகள், தலைவர்கள் பத்தாதென்று நடிகர்கள் அதைவிட சாதிச் சங்கத் தலைவர்கள். சாதிக் கட்சித் தொடங்கி தங்களின் சாதிக்கான அங்கீகாரத்தையும், உரிமையையும் பெறுவோம் என்கின்றனர். இது இன்னும் மக்களை பிளவுபடுத்தி நம்மை அழிவை நோக்கியே இட்டுச் செல்லும்.

இப்படி இன்னும் சொன்னால் எத்தனையோ பிரச்சனைகள்... ஆனால் இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் என்ன தீர்வு என்பதைப் பற்றி யோசிக்காமல் தான் மிகவும் சுதந்திரமாகவும், சம உரிமையுடனும் வாழ்வது போன்ற மாயத் தோற்றத்திலேயே வாழ்கின்றனர்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது எழுந்த இன உணர்வு மீண்டும் தமிழகத்தில் முத்துக்குமார் இறப்பிற்குப் பின் எழுந்தது.
இந்த உணர்வு மேற்சொன்ன உல்லாச வாழ்க்கை, திரைப்படம், கட்சி வேறுபாடு, சாதி, மதம் என எல்லாவற்றையும் உடைத்தெறிந்து மனிதாபிமானம் உடைய மக்கள் அனைவரும் களத்திற்கு வந்தனர். அவ்வாறு வந்த மக்களை வழிநடத்தவோ, அரசியல் சக்தியாக மாற்றவோ அல்லது தக்க வைத்துக் கொள்ளவோ இங்கே ஒரு வலுவான தலைமையோ அல்லது இயக்கங்களோ இல்லை என்பது கவலைக்குரியது.

புரட்சிகர, தமிழ்தேசிய இயக்கங்களும் தங்களால் இயன்ற அளவு இப்போராட்டத்தைக் கூர்மையாக்கிக் கொண்டு சென்றனர். வழக்குரைநர்களின் எழுச்சிமிக்கப் போராட்டம் அரச வன்முறையால் வேறு பாதைக்குத் திருப்பி விடப்பட்டது. சட்டக் கல்லூரி மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் விடுமுறை என்ற நயவஞ்சக அரசின் முயற்சியால் நீர்த்துப்போனது.

இதையும் தாண்டி மக்கள் இயன்ற அளவுக்கு எந்த அமைப்பையும் சாராமல் கூட ஊர்மக்களும், உடல் ஊனமுற்றோரும், பள்ளி மாணவ மாணவிகளும் ஏன் அரவாணிகளும் கூட உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், வகுப்புப் புறக்கணிப்பு போன்ற ஏனைய முறைகளில் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த மாதிரியான மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களை ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் கையிலெடுத்ததன் வாயிலாக இந்த எழுச்சியும் மழுங்கடிக்கப் பட்டது.

அந்தச் சூழ்நிலையில் ஒரு சரியான தலைமை அமைந்திருந்தால் அல்லது அனைவரையும் ஒன்று திரட்டும் வேலையை ஏதாவதொரு புரட்சிகர, தமிழ்த்தேசிய அமைப்புகள் கையிலெடுத்திருந்தால் உறுதியாகக் கூறமுடியும் இன்று ஈழத் தமிழர்களின் போராட்டம் இன்று பல படிகள் முன்னேறியிருக்கும்.

எழுந்த இவ்வளவு பெரிய எழுச்சி எந்தவொரு பலனையும் தரவில்லை. ஆனால் அந்த எழுச்சி தமிழகத் தமிழர்கள் அடிமை என்பதை உரத்துக் கூறியது. ஆனால் அதை எத்தனை பேர் உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை.

நம் உறவுகள் இன்று இருக்கும் அபாயகரமான சூழ்நிலையில், நாம் இருக்கும் இந்த நிலையிலேயே இருந்தால் அவர்கள் அழிவது மட்டுமின்றி நாளை நமக்கும் அந்நிலை கண்டிப்பாக வரும். ஏனெனில் நமக்கும் இங்கே சம உரிமையோ, சம நிலையோ கிடையாது. அங்கே துப்பாக்கியால் சுடுகிறான், இங்கே சுடவில்லை அவ்வளவுதான் வித்தியாசம்.

இந்த நிலை போக்க நாம் அனைவரும் தமிழர்கள் என்ற முறையில் சாதி, மதம் கடந்து ஒன்றுபட்டு மிகப்பெரிய போராட்டத்தை (சீக்கியர் போல்) முன்னெடுக்கத் தவறினால் மிகப்பெரிய அழிவு காத்திருக்கிறது.


போராடினால் தமிழினம் வாழும் இல்லையேல் தமிழினம் சாகும்

5/6/09

தொடரும் துரோக வரலாறு - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்

சென்னை சங்கமம் இத்துணை பெரிய வெற்றியைப் பதிவு செய்யுமென நாங்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. காலம் சிலவற்றை எதற்காகவோ கொண்டாடித் தள்ளிவிடுகிறது. அப்படி நிகழ்ந்ததுதான் சென்னை சங்கமம் வெற்றியும். இந்த வெற்றி எங்களுக்கே புரிந்து கொள்ள முடியாத வியப்பென்றால் பலருக்கு அது வயிற்றெரிச்சலைத் தந்திருக்க வாய்ப்பு உண்டு. இலட்சியங்களிலும், உயர்ந்த விழுமியங்களிலும் புடமிடப்பட்டவர் போல் பம்மாத்து காட்டும் எழுத்தாளர் ஞானி சங்கமத்தை கனிமொழியின் விளம்பர விழா என்று எழுதினார். நான் சொல்வது தவறாக இருக்கலாம், ஆனால் சதா விமர்சித்துக் கொண்டே இருப்பது ஒருவகை மனநோய் என்பது என் எண்ணம். இத்தகையோரை நெருங்கி அணுகிப் பார்த்தீர்களென்றால் சிறுமைகள் அவர்களிடத்து நிறைய இருக்கும். ஆதலினால் பொதுவாக இத்தகையோருக்கு நான் பரிந்துரைப்பது கனிவான உளநல உதவி.

பயணங்களின் போது நான் தேடி பணம் கொடுத்து வாங்கிப் படித்து வந்த பத்திரிகை “காலச்சுவடு’. அவர்கள் சென்னை சங்கமத்தை ஜீரணிக்க முடியாமலும் நாலு வார்த்தை பாராட்டாதிருந்தால் தனது நடுநிலை முற்போக்கு முலாம் சேதாரப்பட்டுவிடுமோ என்ற ஜாக்கிரதை உணர்விலும்பட்டிருந்த அவஸ்தை பரிதாபமாய் இருந்தது. போலித்தனங்களும், நாடகத் தன்மைகளும் இன்றி சமூக வாழ்வை கட்டமைத்தல் கடினம்தான். ஆனால் முற்போக்காளர் என தமக்கு முகவரி இட்டுக் கொள்கிறவர்களின் நாடகத்தன்மை அருவருப்பாகிறது.

நக்கீரனைப் போன்ற இன்னொரு பத்திரிகை எனக்கு முகப்பு அட்டை மரியாதை தந்தது. “”அரசின் ஆசிபெற்ற மர்ம மனிதர்” என்பது பெருந்தலைப்பு. “”யார் இந்த ஜெகத் கஸ்பர்?” என்பது துணைக் கேள்வி. சர்ச்சைக்குரிய ஒருவராக சமூக-அரசியற் களத்தில் ஆக்குவதன் மூலம் இயங்கும் ஆற்றலை மட்டுப்படுத்தலாம் என்ற நுட்பமான மேலாதிக்க அரசியல் அதில் இருந்தது. பொழுதுபோக்கு வியாபாரப் பத்திரிகைகளை பொதுவாக நான் விமர்சித்து மெனக்கெடுவதில்லை, அவசியமுமில்லை. ஆனால், அப்பத்திரிகைகள் தலையங்கம் எழுதி ஊருக்கு உபதேசம் செய்யும்போதுதான் பற்றிக் கொண்டு வரும். உபதேசிப்பதற்கு சில அடிப்படை யோக்கியதைகள் வேண்டும் என்றே நினைக்கிறேன். பொதுவாழ்வில் இருப்போரது தனிவாழ்வை சந்திக்குக் கொண்டு வந்து வியாபாரம் நடத்துகிற பத்திரிகை முதலாளிகளின்
தனிவாழ்வில் இருக்கிற வக்கிரங்களை அவர்தம் வாசகர்கள் அறிந்தார்க ளென்றால் ஆடிப் போவார் கள். அந்த வேலையை செய்வதற்கென்றே தனியாக ஒரு பத்திரிகை தொடங்க லாமா என்று கூட நான் யோசித்ததுண்டு.

ஜெயா தொலைக் காட்சி ஏதோ “இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக வரும்’ உலகப் புகழ்பெற்ற த்ரில்லர் திரைப் பட விளம்பரம் போல் “சென் னை சங்கம திடுக்கிடும் மர்மங்களுக்கு’ இடைவிடா முன் விளம்பரம் செய்து கொண்டிருந்தது. முன் விளம்பரத்தில் எனது முகத்தை நரகாசுரன் போல் கிராபிக்ஸில் வடிவமைத்திருந் ததை நான் நன்றாகவே ரசித்தேன்.

“சென்னை சங்கமம் ஊடாக பெரும் பணம் வந்தது. வந்த அப்பணம் விடுதலைப்புலிகளுக்குச் சென்றது என்பதுதான்’ இவர்களது பிரதான கதை. துணைக் கதை அமெரிக்காவில் புலிகள் இயக்கத் தடையை நீக்க லஞ்சம் கொடுத்ததாய் கைது செய்யப்பட்ட நாச்சிமுத்து சாக்ரட்டீஸ் எனக்கு நண்பர் என்பது. உண்மையில் துணைக் கதை உண்மைதான். நாச்சிமுத்து சாக்ரட்டீஸ் நான் பார்த்த அறிவாளிகளில் மறக்க முடியாதவர். ஒரு நேரத்தில் நான்கு விஷயங் களை சிதறாமல் சிந்திக்கும் அபார அறிவாற்றல் கொண்டவர். அமெரிக்காவின் அணு ஆயுத திட்டமொன் றில் முதுநிலை விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். 1970-களில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக் கிய தமிழ் அக்னி குஞ்சுகளில் ஒருவர். சேலம் சேந்த மங்கலத்துக்காரர். அற்புதமான மனிதர். எனக்கு நண்பர்.

தந்தை பெரியாரின் கொள்கைபால் ஆழ்ந்த மதிப்பும் ஈடுபாடும் கொண்டவர். ஒரு விதவையை மணம் புரிந்தவர், அதுவும் கலப்புத் திருமணமாய் ஜாதி மீறல் செய்தவர். அமெரிக்காவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க அவர் உழைத்து வந்தது உண்மை. அதிலொன்றும் தவறேதும் இல்லை. அது சட்டரீதியான செயற்பாடு. ஆனால் அவரை ஏமாற்றி, வஞ்சக வலை விரித்து, 5000 டாலர்கள் ஒரு அதிகாரிக்கு “ஊக்கப்பணம்’ கொடுக்க வைத்து சிக்க வைத்ததில் போதைப்பொருள் கடத்தும் கும்பல் தலைவன் சங்கரசே என்ற தமிழனும், ரஜினிகாந்தின் “பாஷா’ திரைப்படத்தில் ரஜினிகாந்த்துக்கு தங்கையாக வரும் ஒரு கேரக்டரும் உண்டு என்பதை உலகறியாது.

ஜெயா தொலைக்காட்சியில் அந்நிகழ்ச்சி நிஜ மாகவே என்னை மனவருத்தப்படுத்தவில்லை. ஏனென்றால், முன்பு நான் குறிப்பிட்டது போலவே தமிழ் ஈழ ஆதரவு விஷயத்தில் குற்றம் சாட்டப்படுவது பெருமையே என்பது ஒருபுறமிருக்க, பொய் வேகமாகப் பரவினாலும் உண்மை ஒருநாள் உருண்டு, புரண்டு வந்து சேரும் என்ற எனது நம்பிக்கையும் முக்கிய கார ணம். ஆனால் எது வலித்ததென்றால் அந்த நிகழ்ச்சி யை ஆக்கிய பலரில் சௌபா என்ற சௌந்தர பாண்டி முக்கியமானவராக இருந்தார், பணத்திற்காக அதைச் செய்தார் என்று நான் கேள்விப்பட்டபோது உண்மையி லேயே மனது வலித்தது. ஏனென்றால் எனது மாணவப் பருவத்தில் ஏழை மனிதர்களுக்காய் அவர் எழுதிய கட்டுரைகள் படித்து நம்பிக்கை பெற்றவன் நான். அந்த நம்பிக்கை தகர்ந்தபோது வலித் தது. அதுவும் பணத்திற் காகச் செய்தார் என்றபோது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நமது இனத்தின் போர் வாளாய் நிற் கும் ஆற்றல் கொண்ட தோழர் கள், சில்லறை விஷயங்களுக் காய் சோரம் போவது காண எழும் வேதனை அனுபவித்தவர் களுக்கு மட்டுமே தெரியும். வெளியே ஈழத்தமிழர் களின் துயரத்தை வியாபாரமாக்கிக் கொண்டு இலங்கை தூதரகத் தின் மது விருந்துகளுக்கு மலிவாய் துணை போன பத்திரிகை -ஊடக நண்பர்கள் ஒவ்வொருவரையும் நான் அறிவேன். அவர்கள் மீதான கோபம் தீர்ந்து விட்டது. ஆனால் வலி தொடர்கிறது. துரோக வரலாற்றிலிருந்து நான் சார்ந்த இனத்திற்கு இறைவா, விடிவே இல்லையா என்ற கேள்வியில் வருகிற வலி அது.

கருணா என இன்று நாம் அறிகிற கருணம்மான் விடுதலைப் போராட்டத்தை விட்டு விலகியபோதும் இதே உணர்வுதான் ஏற்பட்டது. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது உடல் என சொல்லப்பட்டதை அடையாளம் காட்டவென இலங்கை ராணுவம் கருணாவை முல்லைத்தீவுக்கு கடந்த மே 17-ம் தேதி கூட்டிச் சென்றது. முல்லைத் தீவு மண்ணில் தமிழின அழித்தலின் குரூர சாட்சியங்களுக்கு நடுவில் நிறுத்தப்பட்டிருந்த கருணம்மானின் முகத்தில் படர்ந்திருந்த வேதனை இறுக்கத்தை தொலைக்காட்சி வழி நான் பார்க்கத் தவறவில்லை. எந்த இனத்தின் விடுதலைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்து தலைவன் போற்றிய தளபதியாய் உயர்ந்தாரோ அந்த இனம் தோற்கடிக் கப்பட்டு, பல்லாயிரம் சடலங்களால் பிணக்காடா கிக் கிடந்த அவலத்தின் சாட்சியாய் நிற்க வேண் டிய சாபத்தை எண்ணி கருணம்மான் உள்ளுக்குள் அழாமல் இருந்திருக்க முடியாது. ஒரு காலத்தில் வன்னிக் காடுகளில் வளரும் போராளியாய் தன் தலைவன் பிரபாகரன் உண்டு மிச்சம் வைத்த உணவை உண்ணும் பாக்கியத்திற்காய் தவமிருந்த நாட்கள் கருணம்மானின் மனசாட்சியை அக்கணம் குத்திக் கிழித்து ரணப்படுத்தியிருக்கும்.

2002-ம் ஆண்டு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை நான் நேர்கண்ட கையோடு வேறு பல மூத்த தளபதிகளையும் நேர்காண முயன்றேன். அவர்களில் முக்கியமானவர் கருணம்மான். மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பகுதியிலுள்ள அவ ரது முகாமில் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மியன்மார் என்ற பர்மா, வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகள் உலகின் பணக்கார நாடுகளாகவோ, பெரிய நாடுகளாகவோ புகழ்பெறவில்லைதான். ஆனால் இந்நாடுகளுக்குப் பயணம் செய்தீர்களென்றால் பொறாமை யாக இருக்கும். அந்த அளவுக்கு எங்கு நோக்கினும் காடுகள், ஆறுகள், நீர் நிலைகள்… “”மீன் பாடும் தேனாடு” என தமிழர்கள் கொண்டாடும் மட்டக்களப்பு பிராந்தியமும் அப்படித்தான். எங்கு பார்த்தாலும் ஆறுகள், நீர்நிலைகள், காடு, கடல் என செழுமை சிறந்த பிராந்தியம். எளிமையான மக்கள், அவர்தம் விருந்தோம்பல் காவியத்தன்மை கொண்டது. எங்கள் வேரித்தாஸ் வானொலிக்கு மட்டக்களப்பு நகரில் கள அலுவலகம் இருந்தது. உயிரைப் பணயம் வைத்து தொடர்பாளர்களாய் கடமையாற்றிய இருவரை உயிருள்ளவரை நான் மறக்க முடியாது. இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பு கருதி அவர்கள் பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை.

கருணம்மானை பேட்டி காண நான் விரும்பி யமைக்கு பலவேறு காரணங்கள் இருந்தாலும் ஒரு காரணம் முக்கியமானது. ஓர் அரசியல்- ராணுவ ஆய்வாளன் என்ற வகையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் சாதித்த மகத்தான ராணுவ வெற்றியானது என்னைப் பொறுத்தவரை “”ஜெயசிகுறு எதிர்சமர் தான். அதிபர் சந்திரிகா அரசு யாழ்ப்பாணத்துக்கு வவுனியாவிலிருந்து தரைவழிப்பாதை திறக்க முயன்ற “”ஜெயசிகுறு” எனப் பெயரிடப்பட்ட யுத்தம் வென்றிருக்குமேயானால் இன்று முல்லைத்தீவில் நடந்தது 12 ஆண்டுகளுக்கு முன்னரேயே நடந்திருக்க வாய்ப்புண்டு. அந்த “”ஜெயசிகுறு” ராணுவப் பெருநகர்வை எதிர்கொண்டு முறியடித்த வரலாற்றில் முக்கிய பங்காற்றியவர்கள் கருணம்மானும் அவரது படையாளிகளும். உள்ளபடியே வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை “”போராட்ட வரலாற்றில் மகத்தான ராணுவ வெற்றி எது?” என நான் கேட்டபோது அவரும் “”ஜெயசிகுறு எதிர்சமர்” என பதில் தர, நான் உளம் சிலிர்த்ததும் உண்மை. எனவே ஜெயசிகுறு எதிர்சமரின் நாயகன் கருணம்மானை நான் நேர்காண விரும்பியதில் வியப்பில்லை.

முப்பது ஆண்டு கால வீர வரலாற்றின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று கருணம்மாவின் பிரிவு என்பது யாவரும் அறிந்ததே. கிழக்கின் போர் அணிகள் இல்லாது போனது பேரிழப்பென்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ராணுவ, பூகோள, அனைத்துலக செயல்பாடு ரகசியங்களை இலங்கை அரசுக்கு அவர் தந்துதவியது கடந்த ஈராண்டு கால போரின் போக்கை முக்கியமாகத் தீர்மானித்தது. உண்மையில் கருணம்மான் இயக்கத்திலிருந்து பிரிந்துவிட்ட செய்தி கேட்ட அன்று மனதில் அவநம்பிக்கை படர்ந்தது, போராட்டம் பெருத்த பின்னடைவு காணும் என உள்மனது சொன்னது. இன்று தன் எஜமானர்களை திருப்தி செய்ய வேண்டி கருணா பிரபாகரன் அவர்கள்மீது பல விமர்சனங்களை வைக்கலாம். ஆனால் பிரபாகரன் நெஞ்சார நேசித்த போராளிகளில் ஒருவர் கருணம்மான் என்பதே உண்மை. ஏனென்றால், திறமையாளர்களை பிரபாகரனுக்குப் பிடிக்கும். கருணம்மான் வியத்தகு ஆளுமைத்திறன் கொண்ட ஒரு தளபதி. படையணிகளை கட்டி யெழுப்புவதில் மட்டுமல்ல, மக்களோடு நெருங்கி உறவாடி ஆதரவுத் தளத்தை விரிவாக்கு வதிலும் கெட்டிக்காரன். விடுதலைப் புலிகள் இயக்கம் முதலில் பயன்படுத்திய எறிகணை எந்திரம் (Artillery Machine) கருணாவால் இலங்கை ராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட் டது. அந்த எறிகணை எந்திரத்தை வன்னியில் நின்ற தன் தலைவனிடம் ஒப்படைப்பதற்காக சுமார் 100 கிலோமீட்டர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் பாதை அமைத்துக் கொண்டு சென்று சேர்த்தவர் கருணா. அந்த அளவுக்கு துடிப்பும் செயல்வேகமும் மதிநுட்பமும் கொண்ட கருணா விடுதலைப் போராட்டத்தின் அழிவுக்கு தானும் ஒரு காரணம் ஆனது எப்படி?

நக்கீரன்

பத்திரிகையாளர்களுக்கு உலகிலேயே மிக ஆபத்தான நாடு சிறிலங்கா: உலக கருத்துரிமை அமைப்பு

பத்திரிகையாளர்கள் கடத்தப்படுவதும், கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் சர்வ சாதாரணமாக நிகழும் இலங்கைதான் உலகிலேயே பத்திரிகையாளர்களுக்கு மிக ஆபத்தான நாடாக உள்ளது என்று சர்வதேச கருத்துரிமைச் சுதந்திரச் சமூகம் (IFEX) கண்டனம் செய்துள்ளது.

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கூடிய சர்வதேச கருத்துரிமைச் சுதந்திரச் சமூகம் (International Freedom of Expression Community - IFEX) அமைப்பு, இலங்கையில் சமீபத்தில் பத்திரிகையாளர் போத்தல ஜயந்த தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது.

பன்னாட்டு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட 30 கருத்துச் சுதந்திர அமைப்புகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு “பத்திரிகையாளர்கள் மீதான போரை நிறுத்து” என்று தலைப்பிட்டு அனுப்பியுள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“சுதந்திரமாக செயல்பட்டு செய்திகளை அளித்துவரும் பத்திரிகையாளர்களை விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று கூறி, சிறிலங்கா அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் அறிக்கை விட்டு நேரடியாக மிரட்டி வருவதைக் கண்டு பத்திரிகைச் சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் காப்பாற்றுவதற்கான சர்வதேச சமூகமும் கவலை கொள்கிறது.

உங்களுடைய அரசின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பிரச்சாரம் செய்து வருவதாக சில நாட்களுக்கு முன் உங்கள் அரசாங்க அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்ட மூத்த பத்திரிகையாளரும், பத்திரிகைச் சங்க நிர்வாகியுமான போத்தல ஜயந்த, ஜூன் 1ஆம் தேதி கடத்தப்பட்டு காட்டு மிராண்டித்தனமாக தாக்கப்பட்டதை சர்வதேச பத்திரிகைக் கூட்டமைப்பும் (IFJ), மற்ற சர்வதேச கருத்துச் சுதந்திர அமைப்புகளும் உங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

இரும்புக் கம்பிகள், கட்டைகளையும் கொண்டு ஆறு பேர் ஜயந்தவை கடுமையாக தாக்கியுள்ளனர். அவரை இனி பத்திரிகையாளராக செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று கூறி அவருடைய கையை அடித்து நொருக்கியுள்ளனர்.

பத்திரிகையாளர்களுக்கு எதிராக இப்படிப்பட்ட அறிக்கைகளை வெளியிட்டு, அவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்ட வேண்டாம் என்று உங்களது அரசு அலுவலர்களை தடுத்து நிறுத்துமாறு சிறிலங்கா அரசின் ஜனாதிபதியாக உள்ள தங்களை மிகுந்த மரியாதையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

மக்களின் சமூக, அரசியல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை மதிப்போம், பாதுகாப்போம் என்று உறுதி கூறும் சர்வதேச உடன்படிக்கையில் (International Covenant on Civil and Political Rights - ICCPR) கையெழுத்திட்ட நாடுகளில் ஒன்று என்ற அடிப்படையில் பத்திரிகையாளர்கள் உட்பட அனைவருடைய கருத்து மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை காப்பாற்றும் கடமையை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பத்திரிகையாளர்களை சமூகத்தின் ஒரு அங்கமாகக் கொண்டு காப்பாற்ற வேண்டும் என்பதை உறுதி செய்யும் 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி கையெழுத்தான ஜெனிவா உடன்படிக்கையும், 1977ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட உள்நாட்டு ஆயுத மோதலில் பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கும் கூடுதல் நெறிமுறை விதிகளையும் (Additional Protocol on the Protection of Victims of Non-International Armed Conflicts (Protocol II)) ஆகியன சிறிலங்காவை கட்டுப்படுத்துகின்றன.

“அப்பாவி மக்கள், தனி நபர்கள் ஆகிய எவராயிருப்பினும் அவர்கள் தாக்குதல் இலக்குகளாக்கப்படக்கூடாது. மக்களை அச்சுறுத்தக்கூடிய, அவர்களிடையே அச்சத்தை பரப்பம் முதன்மை நோக்கம் கொண்ட நடவடிக்கைகள் ஆகியன தடுக்கப்படவேண்டும்” என்று அந்த உடன்படிக்கையின் கூடுதல் விதிமுறை 13 கூறுகிறது.

பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், அப்பாவி மக்கள் ஆகியோரை போரில் சம்மந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் சர்வதேச அளவில் ஒப்புக் கொண்ட கடமை என்பதன் அடிப்படையில் பாதுகாக்க வேண்டிவர்கள்” என்று வலியுறுத்தி, ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவையில் 2006ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண் 1738 ஐ சிறிலங்கா அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இன்றைக்கு பத்திரிகையாளர்களுக்கு மிகவும் அபாயகரமான இடமான இலங்கை உள்ளது. உங்களுடைய அரசில் பத்திரிகையாளர்கள் கடத்தப்படுவதும், கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் மிகச் சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு காரணமானவர்கள் என்று இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, குற்றம் சுமத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்படவுமில்லை.

1) ஜனவரி 8ஆம் தேதி கொழும்பில் பட்டப்பகலில் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார்.

2) மார்ச் 11ஆம் தேதி சிறிலங்கா எதிர்க்கட்சியின் ஊடக ஆலோசகராக இருந்த தன்மிக கங்காநாத் திசநாயக கடத்திச் செல்லப்பட்டார்.

3) பெப்ரவரி 26ஆம் தேதி கொழும்பில் இருந்து வெளிவரும் சுடரொளி, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் ஆகிய நாளிதழ்களின் ஆசிரியரான என். வித்தியாதரன் வெள்ளை வான் ஆட்களால் கடத்தப்பட்டார். பிறகு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாக காட்டப்பட்டது.

4) மே 22ஆம் தேதி தி நேஷன் பத்திரிகையின் பாதுகாப்பு தொடர்பான செய்தியாளர் கெய்த் நோயாஹர் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்

இப்படி கடத்திய, தாக்கிய நபர்களின் மீது எவ்வித நடவடிக்கையையும் எடுக்காத சிறிலங்கா அரசின் அதிகாரிகளின் நடத்தை குறித்து நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம்.

பத்திரிகையாளர்களை துரோகிகள் என்று கண்டனம் செய்து உங்கள் அரசின் மூத்த உறுப்பினர்களும், இராணுவ அதிகாரிகளும் பேசி வருவது குறித்தும் அச்சப்படுகிறோம். பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் மீது நடத்தப்படும் இத்தாக்குதல்களுக்கு அரசும் பொறுப்பு என்றே கருதுகிறோம்.

பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், அப்பாவி மக்கள் ஆகியோரை தேச சட்டங்களின்படியும், சர்வதேச சட்டங்களின்படியும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், அதே நேரத்தில் அவர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுத்துமாறும் உங்கள் அரசின் அதிகாரிகளுக்கு நீங்கள் உத்தரவிடவேண்டும்.

ஜனநாயக செயல்பாடுகளை ஆதரிக்கும் கருத்துரிமைச் சுதந்திரம் அடிப்படையானது என்பதை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்றும், அப்படிப்பட்ட செயல்பாடுகள் உங்கள் அரசிற்கு எதிராக இருந்தாலும், எல்லா விதமான கருத்துகளும் வெளியிடும் சுதந்திரம் எல்லோருக்கும் உள்ளது என்ற அடிப்படையை நீங்கள் ஏற்க வேண்டும் என்றும் கோருகிறோம்.

இதுவரை பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வழக்குத் தொடர்ந்து சீரிய முறையில் புலனாய்வு செய்து அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும், அனைத்து மக்களின் மனித உரிமைகள், கருத்துரிமை, ஆகியவற்றை பாதுகாக்கும் அமைப்புகள் விடுத்துள்ள கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் சிறிலங்கா ஜனாதிபதியாகிய உங்களிடம் பணிவுடன் கோரிக்கை வைக்கின்றோம்” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இக்கடிதத்தில்

கையெழுத்திட்டுள்ள அமைப்புகளின் பெயர்கள் :
International Federation of Journalists (IFJ)
Canadian Journalists for Free Expression (CJFE)
Cartoonists Rights Network International (CRNI)
Centre algérien de défense de la liberté de la presse (CALP)
Center for Journalism in Extreme Situations (CJES)
Centro Nacional de Comunicación Social (CENCOS)
Centro de Periodismo y Etica Publica (CEPET)
Center for Media Studies and Peace Building (CEMESP)
Comité por la Libre Expresión (C-Libre)
Foro de Periodismo Argentino, (FOPEA)
Freedom of Expression Institute (FXI)
Globe International Institute for Reporters' Freedom and Safety (IRFS)
Independent Journalism Center (IJC),
Moldova Instituto Prensa y Sociedad (IPYS)
Journaliste en danger (JED)
Media Foundation for West Africa (MFWA)
Media Institute Media Institute of Southern Africa (MISA)
Media Watch Mizzima News National Union of Somali Journalists (NUSOJ)
Observatorio Latinoamericano para la Libertad de Expresión (OLA)
Observatory for the Freedom of Press, Publishing and Creation in Tunisia (OLPEC)
Pacific Freedom Forum (PFF)
Pakistan Press Foundation (PPF)
Public Association "Journalists" Sindicato de Periodistas del Paraguay (SPP)
South East European Network for Professionalization of Media (SEENPM)
Southeast Asian Press Alliance (SEAPA)
World Association of Newspapers (WAN)

சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட இச்செய்தியை மக்கள் சமூக உரிமைக் கழகம் (PUCL) அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பியுள்ளது.

3/6/09

ஐ.நா.பாதுகாப்பு சபையில் சீனா கடும் எதிர்ப்பு


இலங்கை நிலைமைகள் தொடர்பில் ஐ.நா.பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் ஐ.நா.செயலாளருடன் உத்தியோகபூர்வமற்ற முறையில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15நாடுகளைக்கொண்ட ஐ.நா.பாதுகாப்பு சபையின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள துருக்கி இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இதேநேரம் இலங்கையின் உள்விவகாரத்தில் அண்டை நாடுகளோ சர்வதேச நாடுகளோ தலையிடத்தேவையில்லையென சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை பிரச்சினையை அந்த நாடே பார்த்துக்கொள்ளும் சர்வதேச நாடுகள் விரும்பினால் நிவாரண உதவிகளை செய்யலாம் என சீன வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

"பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்"


"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில், வாளோடு முன்தோன்றி மூத்தக் குடி" என புகழ்பெற்ற வீரக்குடியினராகத் தமிழர்கள் சிறந்திருந்தார்கள். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ் செழியன், கரிகால்பெருவளத்தான், இராஜராஜ சோழன், இராஜேந்திரசோழன் என மன்னாதி மன்னர்கள் பலர் தங்கள் வீரத்தால் தமி ழனின் பெருமையை இந்தியத் துணைக் கண்டம் முழுமைக்கும், அதற்கப்பால் மேற்கே ரோமாபுரியிலிருந்து கிழக்கே சீனம் வரையிலும் பரப்பியிருந்தார்கள்.
பொற்கோட்டு இமயத்தில் விற் கொடியைப் பொறித்து தமிழனின் வீரத்தை உலகறியச் செய்த சேரன் செங்குட்டுவனின் படைத்தளபதியாக விளங்கியவன் வில்லவன் கோதை.உத்தரபாரதத்தின் ஏக சக்ரவர்த்தியாக விளங்கிய ஹர்ஷவர்த்தனன் தென்னகம் நோக்கி படையெடுத்தபோது அவனைத் தோற்கடித்த பெருமைக்குரியவன் சாளுக்கிய மாமன்னன் புலிகேசி.
அத்தகைய பேராற்றல் படைத்த பெருவீரனான புலிகேசியை முறி யடித்து அவனின் தலைநகரமான வாதாபியை அழித்த மாமல்லச் சக்கரவர்த்தியின் படைக் குத் தளபதியாக விளங்கியவன் பரஞ்சோதி.அசோக சக்கரவர்த்தியினாலேயே வெல்ல முடியாத கலிங்கத்தை வென்றான் குலோத்துங்கச் சோழனின் படைத்தளபதியாக விளங்கிய கருணாகரத் தொண்டமான். தமிழர்களின் வீரவரலாறு விவரிக்கும் அழிக்கமுடியாத உண்மைகள் இவை.பழமையும், பெருமையும் மிக்க தமிழர் வரலாற்றுக்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுக்காலமாக எத்தனையோபேர் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.
ஆனால் இது எல்லாம் பண்டைய பெருமையாய், பகற்கனவாய் மறந்துவிட்டன. எந்தெந்த நாடுகளில் தமிழன் வெற்றிக்கொடி நாட்டினானோ அந்தந்த நாடுகளிலேயே தமிழன் கொத்தடிமையாகச் சென்று வாழத் தொடங்கினான். தமிழர்கள் என்றாலே நல்ல கொத்தடிமைகள் என்று உலகம் கருதியது. அடிமைச் சேற்றில் நெளியும் புழுக்களாக புறநானூற்றுத் தமிழர்கள் ஆன இழிநிலை வந்தது. அடிமை வாழ்வினைத் தமிழன் விதியென நினைத்து ஏற்றுக்கொண்டான்.
"விதியே விதியே தமிழச்சாதியை என்செய நினைத்தாய்" என மகாகவி பாரதி மனம்நொந்து பாடும் அளவுக்கு தமிழனின் படை நிலை தாழ்ந்தது.வெள்யைனை எதிர்த்து தமிழ்நாட்டில்பூலித்தேவனும், வீரபாண்டிய கட்டபொம்ம னும், ஊமைத்துரையும், வீரமருதுச் சகோதரர்களும், தமிழீழத்தில் பண்டார வன்னியனும் போராடியபோது தமிழர்கள் உறங்கிக் கிடந்தார்கள்.
அந்த மறவர்களின் வீரப்போராட்டத்திற்குப் போதுமான ஆதரவளிக்கவில்லை. கோழைகளாகிவிட்ட தமிழர்களுக்கு நடுவே வாழ்வதை விடத் தூக்கிலே தொங்கி மடிவதே மேல் என அம்மாவீரர்கள் மாண்டு போனார்கள். அதற்குப் பிறகு தமிழர்கள் எவரேனும் ஆயுதம் தூக்கிப் போராடத் துணியவில்லை. இந்தியாவின் சுதந்திரப்போராட்டம் நடைபெற்றவேளையில் கூட தமிழகத்தில் ஆயுதப்புரட்சி உருவாகவில்லை.வ.உ.சி.யும். பாரதியும் ஊட்டிய தேச பக்திக்கனல் ஒரே ஒரு வீரவாஞ்சிநாதனைத் தோற்றுவித்தது.
ஆனால் அப்போதும் தமிழகம் கிளர்ந்தெழவில்லை.அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற்கொண்டாரடி! கிளியே! ஊமைச் சனங்களடி!என பாரதி சித்தம் நொந்தான்.பகற்கனவாகப் போய்விட்ட இந்தப் பழம்பெருமைகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்து, முதன்முதலாகத் தமிழர்களே நடத்தும் ஆயுதப் புரட்சிக்கு வித்திட்டு அதற்குத் தலைமை தாங்கியிருப்பவர் "தம்பி" பிரபாகரன் ஆவார்.
இதன்மூலம் தமிழ்க்குலம் வீரத்தளபதி எவரையும் தோற்றுவிக்கவில் லையே என்ற குறையை பல நூற்றாண்டு களுக்குப் பிறகு பிரபாகரன் போக்கி இருக்கிறார்.உலகில் தமிழனுக்கென்று ஒரு தனி நாட்டினை அமைக்கும் திருப்பணிக்காகத் தன்னை முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டுள்ள தியாகப்படை ஒன்றை அமைத்து அதனை வழிநடத்திச் செல்கிற பிரபாகரன் தமிழர் வரலாற்றில் இதுவரை யாரும் கண்டும் கேட்டுமறியாத அற்புத சாதனையைப் புரிந்திருக்கிறார்.
விடுதலைக்காகப் போராடிய பல் வேறு நாடுகளில் பல தலைவர்கள் இத்த கைய விடுதலைப் படைகளை அமைத்தது உண்டு. ஆனால் அவர்களுக்கெல்லாம் ஏதேனும் ஒரு நாடோ, அல்லது பல நாடுகளோ உதவி புரிந்தன. இந்தியாவின் மாபெரும் தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒரு நெருக்கடியான காலக் கட்டத்தில் இந்தியாவைவிட்டு வெளியேறி னார். அந்த நிலையிலேயே அவர் உலக மறிந்த தலைவர்.
ஜெர்மனியும், ஜப்பானும் அவருக்கு உதவிசெய்ய போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தன. இந்திய மக்களின் மாபெரும் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட அவருக்கு உலகத்திலேயே இரண்டு பெரிய வல்லரசுகள் என்னென்ன உதவிகள் தேவையோ அந்த உதவிகளைச் செய்து கொடுத்தன. பிரிட்டிஷ் இந்திய இராணு வத்தில் பணியாற்றி ஜப்பானியர்களால் சிறைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த இந்திய போர்வீரர்களை மீட்டு அவர்களைக்கொண்டு இந்தியத் தேசிய இராணுவத்தினை நேதாஜி சிங்கப்பூரில் உருவாக்கினார்.
இந்த இராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள். மற்ற உதவிகள் ஆகியவற்றை ஜப்பான் கொடுத்தது. நேதாஜியின் சுதந்திர அரசை ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி மற்றும் நட்பு நாடுகள் அங்கீகரித்தன.நேதாஜியை தனது வழிகாட்டியாகக் கொண்டிருக்கிற அருமைத் தம்பி பிரபா கரனை நேதாஜியுடன் ஒப்பிடமுடியாது. வயதிலும் சிறியவர், அனுபவத்திலும் சிறியவர். நேதாஜியைப் போன்ற பெரிய தலைவராக உருவாகி அதற்குப் பின்னர் அவர் இந்தப் போராட்டத்தை தொடங்கவில்லை.
இளைஞராயிருந்தபோது தன்னுடைய பதினாறாவது வயதில் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கினார்.நேதாஜிக்கு உலக வல்லரசுகள் துணைபுரிந்தன. அருமைத் தம்பி பிரபாகரனுக்கு திக்கற்ற தமிழ் இளைஞர்கள் மட்டுமே துணைநின்றனர். வேறு எந்த நாடும், எந்த வல்லரசும் அவருக்கு உதவிபுரிய முன்வரவில்லை.
ஆனால் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் அள்ளி அள்ளித்தரும் நவீன ஆயுதங்களை வைத்திருக்கக்கூடிய சிங்கள இராணுவத்தை ஓட ஓட விரட்டி யடிக்கிற விடுதலைப் படையை பிரபாகரன் உருவாக்கியவிதம் கற்பனைக்கு எட்டாதது. அதைப் போலவே வலிமை வாய்ந்த இந்திய இராணுவத்தை எதிர்த்து அவர் நடத்திய வீரப்போராட்டமும் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாதது. இதை எப்படி அவர் சாதித்தார்?
இன்னமும் புரியாத புதிர்தான். தமிழ்நாட்டிலும், தமிழீழத்திலும் இன்னும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தருகிற சிறுசிறு உதவிகளைப் பெற்று அவற்றைக் கொண்டு ஆயுதங்களை வாங்கி தனது போராட்டத்தை அவர் தொடர்ந்து நடத்துகிறார். இராணுவ பலம் மிக்க ஒரு எதிரியை எதிர்த்து மக்கள் பலத்தைத் தவிர வேறு எந்த பலமுமில்லாமல் போராடிவரும் அவரது துணிவுக்கு ஈடுயிணையே இல்லை.தமிழீழத்தில் சுற்றுப்பயணங்கள் செய்து அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து அறிந்ததன் விளைவாக எனக்கு ஒரு உண்மை தெளிவாகப் புரிந்தது.
தமிழீழ விடுதலைப் போரின் முன்னணிப் படையாக விடுதலைப் புலிகளின் இயக்கம் திகழ்கிறது. அரசியல் அறியாத சிறுவர்களாக அவர் களைக் கருதுவதும், அவர்களின் முயற்சி வெறும் தற்கொலைக்கு ஒப்பாகும் என் றெல்லாம் சிலர் பேசிவருவதும் எவ்வளவு பெரிய தவறு என்பதை நான் நேரில் கண்டேன்.வியட்நாம் விடுதலைப்போராட் டத்தை அந்நாட்டு மக்கள் உறுதியாக நடத்தியதைப் போல தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகள் வீறுகொண்டு நடத்துகிறார்கள்.
இதை ஒரு மக்கள் போராட்டமாக மாற்றி வருகிறார்கள். மக்களின் துணையோடு தங்கள் விடுதலைப் போராட்டத்தை அவர்கள் விரிவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் வீரப்போராட்டத்தின் விளைவாக சிங்கள இனவெறி ஆட்சியின் அத்திவாரம் ஆட்டம் கண்டிருக்கிறது.விடுதலைப்புலிகள் முன்னின்று நடத்தும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மூலம்தான் தமிழினம் தன்னை முழுமை யாக உணரத்தொடங்கியுள்ளது.
ஜாதி, மதம், கட்சி போன்றவற்றால் பிளவுபட்டுக் கிடந்த ஈழத்தமிழ் இனம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினால்தான் ஒன்றுபட முடிந் திருக்கிறது. உலகம் பூராவிலும் உள்ள தமிழர்களுக்கு எழுச்சியையும் உணர்ச்சியை யும் ஊட்டுகிற ஒரு போராட்டமாகவும் அவர்களை ஒன்றுபட வைக்கிற ஒரு போராட்டமாகவும் இப்போராட்டம் உருவாகிக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
எந்தவொரு நாட்டின் விடுதலைப் போராட்டமும் தகுந்த தேசியத் தலைமை யின் வழிகாட்டல் இன்றி வெற்றிபெற்ற தில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத் திற்கும் இது பொருந்தும். இப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முற்றிலும் தகுந்த தேசியத் தலைமையை விடுதலைப் புலிகளின் இயக்கம் தம்பி பிரபாகரன் வடிவத்தில் தந்துள்ளது. தமிழீழ மக்களும் இதை மனமுவந்து ஏற்றுக்கொண்டுள்ளனர்.
நானே நேரில் கண்ட உண்மை இது. 1985ஆம் ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களிலும், 1987ஆம் ஆண்டு செப்டம்பரிலும் தமிழீழப்பகுதியில் சுற்றுப் பயணம் செய்து பலதரப்பு மக்களையும் கண்டு பேசி அவர்களின் உள்ளத்து உணர்வுகளைப் புரிந்து கொண்ட பிறகே இதை எழுதுகிறேன்.
தம்பி பிரபாகரன் அவர்களைத் தமிழீழ மக்கள் தங்களது தவப்புதல்வனாகக் கருதுகிறார்கள். மனமார நேசிக்கிறார்கள். சிங்கள அரக்கர்களின் கொடுமைகளில் சிக்கித்தவித்து அடிமை இருளில் தடுமாறிக் கொண்டிருந்த தங்களின் வாழ்வில் தோன்றிய நம்பிக்கை நட்சத்திரமாக அவரைக் கருதுகிறார்கள்.
தமிழீழ மக்கள் தங்கள் நாடு முழுமையாக விடுதலை பெற்றால் ஒழிய தங்களுக்கு வாழ்வில்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அறவழியில் அதை அடைய முடியாது என்பதைக் கடந்த 30 ஆண்டுகால அனுபவம் அவர் களுக்கு உணர்த்தியிருக்கிறது. சமரசப் பேச்சுக்கள் அவர்களைச் சுதந்திர மனிதர்களாக்காது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வளவு இழப்பு, இவ்வளவு அழிவு, இவ்வளவு தியாகத்திற்குப்பின் இனி ஒரு போதும் பின்வாங்கமுடியாது.
விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துதுச் செல்வதைத் தவிர வேறுவழியில்லை என்பதை ஐயந்திரிபர உணர்ந்திருப்பதோடு அவ்வாறு செய்வதற்குத் தகுதியானவர் பிரபாகரனே என்பதையும் அறிந்திருக்கிறார்கள்.இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்துஅதனை அவன்கண் விடல்.என வள்ளுவர் வாக்கின் பொருளை நன்குணர்ந்த ஈழமக்கள் தங்கள் விடுதலை என்னும் அரிய செயலை முடிக்கத் தக்கவன் பிரபாகரனே என்பதைத் தெளிந்து தேர்ந்து அவர் தலைமையை ஏற்றுக்கொண்டிருக் கிறார்கள்.
தனது சொந்த உறுப்பினர்களைக்கூட கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாத இயக்கங் களையும் தலைமைகளையும் கண்டு மனம் வெறுத்துப்போன தமிழீழ மக்கள் அவற்றோடு புலிகள் இயக்கத்தை ஒப்பிட்டுச் சீர்தூக்கிப் பார்த்தபிறகே இத்தகைய முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.கட்டுப்பாடு, ஒழுக்கம் இவற்றோடு தியாகமும், வீரமும் நிறைந்தவர்களாகப் புலிகளை மக்கள் கருதுகிறார்கள்.மக்களால் வளர்க்கப்படும் மக்கள் இயக் கமாகப் புலிகள் இயக்கம் வளர்ந்திருக்கிறது. மக் களின் ஒத்துழைப்போடு தங்கள் போராட்டத்தை மக்கள் போராட்டமாகப் புலிகள் மாற்றியுள்ளனர்.அடிமைச்சேற்றில் நெளியும் புழுக் களாகத் தமிழர்களைக் கருதியவர்கள் இன்று அவர்கள் புலிகளாக மாறி உறுமுவதைக்கண்டு கிலிகொண்டு நடுங்குகின்றனர்.
விடுதலைப்புலிகளின் வீரத்தினாலும், தியாகத்தினாலும் தமிழி னமே தலைநிமிர்ந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள் ளது. இதற்கு வழிவகுத்தவர் பிரபாகரனே.காலங்காட்டும் இந்த உண்மைகளை உணராது தனது இராணுவபலத்தைக் கொண்டு பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் அழித்துவிட சிங்களர் முயலுவது பேதமை யாகும். இந்த நோக்கம் ஒரு போதும் நிறைவேறப்போவதில்லை.
தங்கள் சிந்தும் இரத்தத்தினால் ஈழமண் சிவந்துகொண்டேயிருந்தாலும், வங்கக்கடல் செங்கடலானாலும் பிரபாகரனும் அவரது தோழர்களும் தங்களின் இலட்சியக்கனவு நிறை வேறும்வரை போராடுவார்கள்.
தமிழீழத்தின் சுதந்திரக் கொடியை ஏற்றும் வரை தொடர்ந்து போராடியே தீருவார்கள். அவர்களுக்குக் காலம் இட்டிருக்கிற கட்டளை இது. அதை மீற எவராலும் இயலாது.-
பழ.நெடுமாறன் எழுதிய"பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்"நூலிலிருந்து சில பகுதிகள்.

2/6/09

கதிரைக் கனவுகளால் எங்களைச் சாகடிக்காதீர்கள்

தமிழீழக் கனவோடு வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் பலி கொள்ளப்பட்டுவிட்டார்கள். அந்த இலட்சியத் திற்காகப் போராடிய போராளிகளும், தளபதிகளும் சுட் டெரிக்கப்பட்டு விட்டார்கள்.

உயிருக்குப் போராடிய காயமடைந்த மக்களையும் போராளிகளையும் காப்பாற்றவென்ற வேட்கையுடன் மானத்தோடு மாவீரராகும் தத்துவத்தையும் கைவிட்டு, சரணடைய முற்பட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனும், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவனும் கூட வெள்ளைக் கொடியுடன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். எல்லாமே சுடுகாடாக்கப்பட்டு சாம்பல் மேடாகக் காட்சி தருவதை ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கி மூனும் வானிலிருந்து பார்வையிட்டுச் சென்றுவிட்டார்.

வன்னியில் தப்பிப் பிழைத்தவர்கள் முட்கம்பி வேலிச் சிறைக்குள் அடிமைச் சின்னமாக, அடுத்த வேளை உண வுக்கு எதிரியின் கையைப் பார்க்கும் இழி நிலைக்கு உட் படுத்தப்பட்டு உள்ளார்கள். அங்கும் இளம் வயதினர் வடி கட்டப்பட்டு, வதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். சரணடைந்த போராளிகளின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஆனாலும், சர்வதேசங்கள் இன்றுவரை ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை. தமிழீழ விடுதலைப் போராட் டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து சிங்கள சிறிலங்கா நடாத்திய பரப்புரைகளை ஏற்று, விடுதலைப் புலிகளைத் தமது நாடுகளில் தடை செய்ததன் மூலம் இந்த இனப் படுகொலையில் பங்கு வகித்த உலக நாடுகள் தமிழினத்தின் அத்தனை அழிவு களுக்குப் பின்னரும் தமிழர்களுக்கான நீதியை வழங்க முன்வரவில்லை.

வீதியிலிறங்கிப் போராடுகின்றோம்... உண்ணாவிரதங்கள் இருக்கின்றோம்... கண்ணீர் விட்டுக் கதறுகின்றோம்... 'எஞ்சியுள்ள எமது மக்களையாவது சிங்கள இனவாத அரசின் இன அழிப்பிலிருந்து காப்பாற்றுங்கள்...' என்று. உவ்வொரு மணித் துளிகளாக... நாட்களாக... வாரங்க ளாக... காலம் கடந்து செல்கின்றதே தவிர வேறேதும் நடப்பதாகத் தெரியவில்லை. 'தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்' என்று சிங்களம் மீண்டும் ஒரு கொண்டாட்டத்திற்கு நாள் குறித்துள்ளது. பாதுகாப்பை இழந்த தமிழர்கள் மீது சிங்களனின் காறித் துப்பல்கள்... குனிந்த தலையுடன் அதைத் துடைத்துவிட்டு நகரத்தான் அவர்களால் முடிகின்றது. தமிழ்ப் பெண்கள் நடு ரோட்டில் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாகிறார்கள்... ஆனாலும் விதியை எண்ணி அழுது கொண்டே வீட்டிற்குச் சென்று தலை முழுக மட்டும்தான் அவர்களால் முடிகின்றது.இப்போது டக்ளஸ் தேவானந்தா, கருணா, ஆனந்த சங்கரிகள் முகங்கள் மட்டும் பயம் நீங்கிப் பிரகாசிக்கின்றன. பாவம், தமிழர்கள் தங்கள் பலத்தை இழந்து கூனிக் குறுகி முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற யாருமே கிடையாது. ஆனால், சிங்கள தேசத்தின் விருப்பங்களை ஏற்று 'பாலூற்றிக் கடமை செய்ய' புலம் பெயர் தேசங்களிலும் சிலர் ஆலாய்ப் பறக்கின்றனர்.

விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக நொருக்கப்பட்டிருக்கலாம்... போராளிகள் பலர் அந்த நெருப்பு வேள்விக்குப் பலியாகிப் போயிருக்கலாம்... தளபதிகள் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டிருக்கலாம்... ஆனாலும் நாங்கள் நம்ப மாட்டோம் 'எங்கள் சூரிய தேவனை இந்தச் சிறு பொறிகள் சுட்டெரித் திருக்கும் என்று...'எம்முள் நிறைந்து... எப்போதும் உடன் இருந்து... எம்மை வழிநடத்தும் எம் தலைவன் மரணம் என்ற எல்லைக்கு அப்பாற்பட்டவன். 'மனிதன்தான் மரணம் அடைவான். மாவீரனுக்கு ஏதடா மரணம்?' என்ற இயக்குனர் சீமானின் வார்த்தைகள் எம் நெஞ்சத்தை மீண்டும் உறுதி கொள்ள வைக்கிறது. சத்திரியன் சாவதில்லை. அவன் சரித்திரம் ஆகின்றான். 'நாம் வீழமாட்டோம்! நாம் வீழமாட்டோம்!!' என்ற நம்பிக்கைத் துடிப்பு மட்டுமே தமிழர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. கரிகாலன் மீண்டும் வருவான்... என்ற நம்பிக்கை மட்டுமே அவர்களை மீண்டும் நிமிர வைக்கின்றது. அது அவர்களின் ஆத்மார்த்த உணர்வு. அந்த நம்பிக்கை அவர்கள் சாவு வரை நீடிக்கும். அதைக் கலைக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. 'கதிரைக் கனவுகளால் எங்களைச் சாகடிக்காதீர்கள்'

நன்றி :ஈழநாடு - பாரிஸ்
தமிழக்கதிர்

1/6/09

மீண்டும் எழட்டும் “ஆ“ பத்து - தமிழின் களப்பிற மரபு புதிய களத்தை உருவாக்கட்டும் - செல்வமணியன்


அறக்கண் பத்துக்கட்டுப் பறை உயர்த்தி

எழுகிறது தமிழ் ஆதனிய ‘’ஆ’’ பத்து!

மீண்டும் மக்கள் உள்ளத்தில் பாயட்டும் ஆசீகவ அக்கப்போர்!

மக்கள் வாழ்வில் மலரட்டும் மார்க்சிய மக்கள் போர்!


மிழகம் தனித்த வரலாற்று மரபுரிமையும் அதனை வளப்படுத்திய தனித்தத் தத்துவச் செறிவையும் கொண்டு வாழ்ந்து வரும் ஒரு சமுதாயமாகும்.

இதன் வரலாற்று நெடுகிலும் மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான தத்துவப் போராட்டங்களும் களப் போரிடல்களும் நிறைந்தே கிடைக்கின்றன. அவை நன்மைகளை உயர்த்திப் பிடித்தும் தீமைகளை எதிர்த்துப் போராடியுமே முன்னேறியுள்ளன.


இன்றைக்குத் தமிழராய் அறியப்படும் பழந் தமிழ்ச் சமுதாயம் அது உருண்டு திரண்டெழுந்த வரலாற்றில் அதன் வாழ்க்கைப் பட்டறிவுகளில் உயர்த்திப் பிடித்திருந்த பெருங் கோட்பாடு “அறம்” எனும் ஒற்றைச் சொல்லாகும். அது வரைமுறை மிகுந்த வாழ்க்கைச் செழுமையின் வரையறுப்பாகும்.


பழந்தமிழ்ச் சமுதாயம் தன் தொடக்க கால ஆட்சிமுறையின் உருத்திரட்சிகளிலும் மலர்ச்சிகளிலும் அந்த அறத்தையே கண்ணாக நிறுத்தி அதனைக் கண்போல் காத்து வந்தது.

அந்த "அறக்கண்" ஆட்சி மூலமே மக்கள் வாழ்வுக்குரிய அகம் – புறம் எனும் பிரிக்கவியலா உளத்தியல் – ஊரியல் செழுமைகளை வரையறுத்துக் காத்து வளர்த்தது.

ஒரு குடிக்குள் எழுபிறப்பு – மூவாழ்க்கை முறை எள ஒரு பட்டுக்கட்டுப் பண்பாட்டை வடித்தெடுத்து தன் வழி மரபில் தொடர்ந்து நிலை நிறுத்தி வந்தது.

குடி குதிரும் இடம் எங்கெங்கும் ஏழ்குடிக் கூட்டுக் குடியாட்சிகளை நிறுவி அவற்றின் எளிமையில் அறத்தின் பெருமையைப் புறத்தில் நிறுத்திப் பறையமாய் உயர்ந்து நின்றது.

மக்களின் அகப்புற வாழ்க்கை முறைகளில் ‘ஆதனியப் – பூதனியப்’ பண்புகளைப் பூத்துக் குலுங்க வைத்தது. புன்னகை மொழியில் பெண்மையின் பெருமை பேசி நின்றது.

பூத்துக் குலுங்கிய தமிழ்ப் பறைமுறை வாழ்க்கையில் ‘வாழைக்கு தன் கன்றே கூற்றாகும்’ என்பதைப் போல் பறைமுறை பிரித்து வளர்த்து வந்த பார்ப்பனியமே அப்பறையத்தின் ஆதனிய – பூதனிய வரைமுறைகளுக்கு எதிரியாய் எழுந்து நின்றது. பறையத்தின் எழுபிறப்பில் அடிப்பிறப்பே எதிர்க்கோலம் பூண்டது.

அப்பார்ப்பனியம் ஆதனியத்தை எரித்து முடிக்கும் ஆரியத்தைக் கையில் தூக்கிக் கொண்டு தீமையைத் தூக்கிப் பிடித்து தீ ஏவும் தேவத்தேரோட்டத்தை நடத்தி அறக்கண் தமிழ்ப் பறையத்திற்கு முடிவு கட்டியது.

தமிழ்ப் பறையம் கட்டி வளர்த்த ஏழ்குடிக் கூட்டாச்சிகளை எரித்து முடித்து அதன் மூவாட்சி முறையைத் தனித்தனியே பிரித்து நிறுத்தி முப்பேரரசு வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது அப்பார்ப்பனியம்.

ஆதனிய – பூதனிய வாழ்க்கைப் பண்புகளுக்கு முடிவு கட்டி பார்ப்பனிய ஆடவக் கொள்கைகளின் மூலம் பேரரசு வெறியாட்டம் ஆடியது.

பார்ப்பு ஆரியத்தை ஆட்சியிலாகக் கொலுவேற்றி வைத்து அறத்தைப்
புறத்தில் நிறுத்தி ஆண்டோரை அப்புறப்படுத்தி வெளியேற்றி வைத்தது.
அவர்களின் குடையறுத்தும் உடை அறுத்தும் கொலை வெறியாடி நின்றது.

இப்படி பார்ப்பாரியம் ஆடிய ஆட்டத்திற்கு எதிராக அது அறுத்தெறிந்த ஆதனிய – பூதனிய வாழ்க்கை முறையை மீட்டு நிலை நிறுத்தப் பிறந்தது ஒரு மரபு.

அது பார்ப்பாரியம் அப்புறப்படுத்தி வெளியேற்றிய பறை அறக் கூட்டத்திலேயே வேர் பிடித்துக் காழ்த்து வளர்ந்தது. பார்ப்பாரித்தை எதிர்த்துக் களமாடும் புதிய களப்பிற மரபை (களம் காணப் பிறக்கும் மரபை) அப்பார்ப்பாரியத்தின் தமிழ்ப் பேரரசுகளுக்கு வெளிநின்று வளர்த்தெடுத்தது.

களப்போரிடும் அம்மரபின் அருவைக் கருவில் நிறுத்தி, கருவை உருவில் நிறுத்தி, உருவைத் திருவில் நிறுத்தி, திருவைத் தெருவில் கொண்டு வந்து நிறுத்திக் களமாடியது.


அந்த களப்பிற மரபு கட்டி வளர்த்து நின்ற போர் முறையே ஆசீவக அக்கப்போர். அது ஆதனியத்தை மீண்டும் வாழவைத்து அதில் பூதனியத்தை பூத்துக் குலுங்க வைக்க மக்கள் உளத்தியலை வலுப்படுத்தும் தத்துவக் களப்போர். அந்தக் களப்போராட பிறந்தவர்களே களப்பிறர்கள்.

அந்தக் களப்பிறக் களப்போரில் பார்ப்பாரிய ஆடவக் கொள்கைளுக்கு எதிராக முகிழ்த்தெழுந்த அக்கால அரசியல் இயக்கங்களே படை அணிவகுப்புகளே சமணமும் புத்தமும்.

”ஆசீவக மனனம், ஆமனச் சமணம், ஆபுத்த அமிழ்தம்” எனும் முக்கூட்டுப் பறை முறையில் புதிதாய் முகிழ்தெழுந்த முப்புள்ளிப் (ஃ) போர் முறைதான் ஆசீவக அக்கப்போர். (இதன் வழி தான் தமிழில் ஃ எனும் குறியீடு ஆய்த எழுத்தாக உலா வருகின்றது)

அந்த ஆசீவக அக்கப்போரை வளர்த்து உருப்படுத்திய ஆட்சியியல் கோட்பாடே உள்ளத்தில் வன்மை வளர்த்து பெண்மை மண வெள்ளத்தில் ஆண்மை நிறுத்தி உரிமையில் ”அறம் – பொருள் – இன்பம்” பிரித்து முப்பால் ”அமிழ்த” ஆட்சி நடத்திய வள்ளுவம்.

வள்ளுவம் அது வாழ்வின் கனவுக் கோர்வையல்ல! களப்பிற மரபின் ”அறக்கண்” ஆட்சியியலின் கைப்போர்வாள்! பார்பாரியத்தை எதிர்த்துக் களமாடிய களப்பிறர்களின் அரசியல் அமைப்பு யாப்பு!

அந்தக் களப்பிற வள்ளுவத்தை அறுத்தெறிந்து அப்புறப்படுத்தி மீண்டும் தன் ஆரிய மரபு நிறுவ எதிர்க்களமாடிய பார்ப்பரியத்தின் புதிய பரம்பரை ஆட்சிப் பெருமைகளே எழுதப்பட்ட தமிழ்நாட்டின் வரலாறு. வரலாற்றில் எழுந்தாடி வரும் இந்து மதவெறியாட்டங்கள்.

இவற்றால் அழிக்கப்பட்ட நந்தன் ஆட்சி ஆறுந்த வீழ்ந்த தன் ‘’ஆ’’முறை மீட்க ஒரு சபதம் இட்டதாம். ஆமாம்! தொடரும் என் சந்ததிகளின் கால்களிலிருந்து மீண்டும் மீண்டும் களப்பிற மரபு பிறக்கும் எனச் சபதம் இட்டதாம்! காலில் தங்கி களம் காணும் மரபு ஒன்று பிறக்கும் எனச் சபதமிட்டதாம்!

அதை ஆசீவகம் மீட்கும் ‘’ஆ’’ பத்து மறைப்பு எனக் கட்டியுரைத்து ஊரெங்கும் உலகெங்கும் உலவ விட்டதாம். ஆமாம் ஆதனிய ஆன்மீக அலறலாக உலவ விட்டதாம்!

என் ‘’ஆ’’ பத்து மீண்டும் எழுந்தால் உனக்கு ஆபத்து என அந்த பார்ப்பரியத்திடம் உறுதியிட்டு உரைத்ததாம்! உனக்கு இறுதி செய்வேன் எனச் சபதமிட்டு இறந்ததாம்.

ஆமாம்! அது தன் மன வெளியை எங்கெங்கும் திறந்து நிறுத்தி விட்டு ‘’ஆ’’ என மண்ணுக்குள் கண்மூடி மறைந்ததாம்! அது இறக்கவில்லை. மறைந்து நிற்கின்றதாம்.

இப்படிப் சொல்கிறது தமிழகப் பறையர்களிடம் வாழ்ந்து செத்து வீழ்ந்துக்கிடக்கும் ஆரியம் கொலைவெறியாடி அறுத்து முடித்த

பறைக்கூத்துப் பாடல்.

”ஆ” பத்தாய் எழுகின்றது... பறைக் கூத்தில்

தனை எரித்த சிவனுக்கு நந்தன் இட்ட இறுதிச் சூளுரை

இறுதியாய் அறுதியிட்டு உறுதியாய்
உரைக்கிறேன்; வேலில் தீ தூக்கி நீயாடும்
வேதிய ஆட்டம் முடிக்க...
நீ அறுத்தெறிந்து எரித்து முடித்த – என்
“அறக்கண்” பத்துக்கட்டுப் பறை தூக்கி
மீண்டும் எழுந்து வருவேன்...

வாழ்ந்த என் முகம் மூடி
முட்டி நிற்கும் இச்சாம்பலிலிருந்து
சாவைக் கொன்றெழும் சனியனாய்
சந்ததியில் அந்தாதிக் கால் பிடித்து
மீண்டும் பிறந்து வருவேன்...

அந்தாதிச் சந்ததியின் கண்ணிரண்டில்
அந்தரத்து ஆதி நீர் மின்னல்
பூப் பூக்கப் புதிதாய் பிறந்து வருவேன்
நெடுவானம் கீறி நிலம் விழும் நீராய்
அவர் தலைக்குள் புகுந்து வருவேன்...

நான் இட்ட வடுவைத்
தீக்கண்ணாய் நிறுத்தி நீயாடி வரும்
தீச்சித்த வேதியக் கொடுமை வீழ்த்த
அந்தாதிச் சந்ததியின் நெற்றியில் – அறுந்த
ஆதித் தமிழ்நீரன் கொள்கை
தூக்கி வருவேன்..

அப்போது....
”நீற்றுப் போனவன் நந்தன்” என்றே
வெற்றியின் வெறியில் நின்று
எனை எரித்த சாம்பலை
நெற்றியில் நீராய்ப் பூசி
சுரிய – ஆரிய – காரிய –
வாரியங் கட்டியாடும் – உன்
“சு” ப்ரமணியக் கொடுமைக்கு
இறுதி செய்வேன்.


உறுதியாய் உரைக்கிறேன்;
இறுதி செய்வேன்... என்
அந்தாதிச் சந்ததியின் நெற்றியில்
வந்தன – சந்தன – நந்தன – அந்தண
“மூ” ஆதித் தமிழ் நீரன் கொள்கை தூக்கி வந்து
உனக்கு உறுதியாய் இறுதி செய்வேன்

என் சாம்பலின் சாவை மிதித்தெழும்
சந்ததி காலில் அறுந்து வீழா இச்சபதம் கட்டி
அங்கை கூப்பி அருவை வணங்கும்
அருந்ததிச் சத்தம் எங்கும் ஒலிக்க...
சதங்கைக் கட்டி உன் முன் ஆட விடுவேன்...

எனைக் கொன்ற நினைப்பில் நீ பூசும்
உன் எரிநெற்றிச் சாநீற்றை –
ஆடும் என் சந்ததி நெடுங்காலில் பூசி
உனக்குப் பரகாலனாய் வந்து நிற்கும்
“தண் கால் – தங்களான்” தலைமை
கட்டி ஆட விடுவேன்...

என் சந்ததி ஆடும் ஆட்டத்தில் நான் நின்று –
நின்றாடுவேன்; உன் முன் நின்றாடுவேன்
நிமிர்ந்தாடுவேன்; தலை நிமிர்ந்தாடுவேன்
வென்றாடுவேன்; நான் வென்றாடுவேன்
சாப்பறையில் சங்கப்பறை தட்டி
வென்றாடுவேன்.

கொன்றாடுவேன் நான் கொன்றாடுவேன்
தீய உன் தீக் கொள்கைக் கொன்றாடுவேன்
வீழா என் சந்ததியின் தலையில்
நீ பறித்த மயிற் பீலி மீண்டும் சுட்டிக்
கொண்டாடுவேன்
நீ அறுத்த ஆதிச் சுற்றம் கூட்டி விழாக்
கொண்டாடுவேன்.வீழாப் பறையம் கட்டி
விழாக் கொண்டாடுவேன்...


மறைந்து நிற்கும் அந்த “ஆ” பத்தை மீட்டும் தட்டியெழுப்ப வேண்டிய தேவை வந்து விட்டது. மீண்டும் களப்பிற மரபைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது.

ஆம்! தமிழகம் இன்றைக்கு “இந்திய” வல்லரசின் வெறியாட்டத்தின் கீழ் ஒரு புறம் சாதியத்தாலும் மறுபுறம் வல்லரசியக் கொடுமைகளாலும் அழிக்கப்பட்டு வருகின்றது.

அதன் வளங்களும் உரிமைகளும் எல்லையற்ற வல்லரசியக் கொள்ளைக்கு இலக்காகிக் கிடக்கின்றன. அவற்றை மீட்க எரிக்கும் சாதியத்துக்கும், அழிக்கும் வல்லரசியத்திற்கும் முடிவு கட்டும் ஒரு புதிய களப்பிற மரபை உருவாக்க வேண்டும்.

மக்கள் உளத்தியலில் நன்மையைப்படைக்கும், ஆசீவக அக்கப்போரையும், உரிமையியலில் நாடு மீட்கும் மார்க்சிய மக்கள் போரையும் கட்டி எழுப்பி புதிய களப்போரை இனி நாம் நடத்தவேண்டும்.


தமிழகத்தின் செழுமையான வரலாற்றுத் தத்துவ மரபில் ஊறியெழும் புதிய கம்யூனிசக் களப்பிற மரபைத் தடடியெழுப்புவோம்! ஆதிக்க வெறியாடும் சாதியப் பார்பாரியத்தையும், வல்லரசிய இந்தியத்தையும் வெட்டி வீழ்த்துவோம்!