1/9/09

5.தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை - செல்வமணியன்

நீக்ரோவியர் இனவகைப் பேரினம்

இனி, முதற் பேரினமாகிய நீக்ரோவியர் பேரினத்தைக் காண்போமாயின், அது அடிப்படையில் நிற வழி பெயரிடப்பட்டதாக அமைந்துள்ளது. இதனுள் கருமை மற்றும் கருமை சார்ந்த, கருமையை ஒட்டி வரக்கூடிய பிற நிறங்களை கொண்ட மக்களினங்கள் யாவும் உள்ளடக்கப் பட்டுள்ளன. வாழ்நில அடிப்படையில் புவியின் நிலநடுக்கோட்டுப் பகுதியான வெப்ப மண்டலப் பகுதியில் வாழும் கருமை நிற மக்களினங்கள் முழுமையும் இவ்வகையினதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இப்படி தொகுபட்டுள்ள இப்பேரினத்தினுள் வாழ்நில அடிப்படையில் இருபெரும் கிளைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. முதல் கிளையாக முற்றிலும் கருமை படர்ந்த ஆப்பிரிக்க நீக்ரோவியர் கிளை நீக்ரோவியர் பேரினத்தின் மேற்குக் கிளை எனப்படுகிறது. இதில் சகாராவுக்கு தெற்கேயுள்ள மக்கள் இனங்கள் அடங்குகின்றனர். சூடானிய நீக்ரோவியர் இக்கிளையின் முதன்மை பிரதிநிதியாகக் கருதப்படுகின்றனர். ஆனால் இப்பிரதிநிதிகளிடமிருந்து நிற மற்றும் உடலமைப்புகளில் வேறுபடும் பல்வேறு சிறிய உடலினக் குழுக்களும் இக்கிளையினுள் அடங்கியுள்ளனர். பெரும்பாலும் உயரமானவர்களைக் கொண்ட இக்கிளையில் கருமை நிறத்துடன் கூடிய குட்டை நீக்ரோவிய தனிவாழ்வின் பழங்குடியினர்களும்(1) அடங்குகின்றனர். அத்துடன் மாறுபட்ட கலப்புத் தன்மையுடைய கலப்பின்(2) மக்களும் அடங்குகின்றனர்.

நீக்ரோவியர் பேரினத்தின் இரண்டாவது கிளையாகக் கருதப்படும்கடலிய(3) ஆத்திரேலிய வகைக்கிளையினை மாந்தவியல் அறிஞர்கள் நிலநடுக்கோட்டுப் பேரினத்தின் கிழக்குக் கிளை என்கின்றனர். இதனுள் ஆப்பிரிக்காவிற்கும் ஆத்திரேலியாவிற்கும் இடைப்பட்ட இந்தியப் பெருங்கடலிலுள்ள பல்வேறு தீவுக் கூட்டங்களிலுள்ள மக்களினங்களும் ஆத்திரேவியாவிலுள்ள மக்கள் பழங்குடியினர்களும் ஆத்திரேலியாவிற்கும் தென்அமெரிக்காவிற்கும் இடைப்பட்ட பல்வேறு சிறு தீவுக் கூட்டங்களிலுள்ள இனக் குழுக்களும் அடங்குகின்றனர். அத்துடன் ஆசியக்கண்டத்தின் தெற்குப் பகுதியில் அதாவது நிலநடுக்கோட்டுப் பகுதியில் வாழ்ந்து வரும் சில மக்களினங்களும் உள்ளடங்குகின்றனர்.(4)

இனி, அடுத்ததாக உள்ள இரு மனிதப் பேரினங்களாகிய அய்ரோப்பிய, மங்கோலிய இனங்கள் குறித்துக் காண்போம்.

அய்ரோப்பிய இனவகைப் பேரினம்
மனித வாழ்வினத்தின் இரண்டாவது பேரினமாகிய அய்ரோப்பியரினம், அதன் வாழிட அடிப்படையில் அய்ரோப்பியக் கண்டத்தினர் எனும் பொருளில் பெயரிடப்பட்டுள்ளது என்றாலும் இவ்வினத்தின் தொடக்க வாழ்விடம் தென்மேற்கு ஆசியப் பகுதிகள், தெற்கு அய்ரோப்பியப் பகுதிகள், வட ஆப்பிரிக்கப் பகுதிகள் ஒருங்கிணைந்த மண்டலமே என மாந்தவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். தற்போது இவ்வகையினுள் அய்ரோப்பிய கண்டம் முழுவதிலும் வாழ்கின்ற பல்வேறு மக்களினமும் உள்ளடங்குகின்றனர்.
இந்தப் பேரினத்தை வெள்ளை நிறம் மற்றும் அதனோடு இணையக்கூடிய துணை நிறங்கள் கொண்ட பல்வேறு உடலின மக்களைக் கொண்டு மாந்தவியல் அறிஞர்கள் பல உட்கிளைகளாக வகைப்படுத்தியுள்ளனர். நாம் அதற்குள் நுழையாமல் பெரிதாகக் கருதப்படும் இரு பெரும் கிளைகளைப் பற்றியும் அவற்றுள் அடங்குகின்ற மக்களினங்கள் குறித்தும் காண்போம்.
வெள்ளை நிறத்தில் அமைந்த இப்பேரினம், நில அடிப்படையில் தெற்கு அல்லது நடுநிலக் (மத்திய தரைக்) கடல் வகைக் கிளை, வடக்கு அல்லது அட்லாண்டிக் – பால்டிக் வகைக் கிளை என இரு பெரும் கிளைகளாக வகைப்பிரிக்கப்பட்டுள்ளது.
இவற்றுள் முதல் கிளையாகிய தெற்கு கிளையின் உறுப்பினர்களாக இந்தியர்கள்(5), தாசிக்குகள், அர்மீனியர்கள், கிரேக்கர்கள், அரேபியர்கள், இத்தாலியர்கள், இசுபானியர்கள் போன்ற மக்களினங்கள் அடங்குகின்றனர். வடக்குக் கிளையின் உறுப்பினர்களாக உருசியர்கள், பைலோஉருசியர்கள், போலந்தியர்கள், செருமானியர்கள், ஆங்கிலேயர்கள், நார்வேயினர் மற்றுமுள்ள பிறவகை இனக் குழுக்களும் உள்ளடங்குகின்றனர்.
மங்கோலியர் இனவகைப் பேரினம்
மனிதரின மூன்றாவது பேரினமாகிய மங்கோலியரினம் வாழிட அடிப்படையிலேயே அமைந்துள்ளது. இப் பேரினத்தின் தொடக்க வாழி்டமாக ஆசியக் கண்டத்தின் கிழக்குப் பகுதி கணக்கில் கொள்ளப்படுகிறது. இங்கு தொன்மைக் கால ஆசியாவானது மங்கோலியா என அழைக்கப்பட்டு வந்ததை நினைவு கூர்தல் நல்லது. பொதுவான நிலையில் மஞ்சள் நிற(6) வகைப்பட்ட மனித உடலினக் குழுக்களைத் தொகுத்துக் கொண்டிருக்கும் இப்பேரினம் தற்போது ஆசியாக் கண்டத்தில் மட்டுமின்றி வடஅமெரிக்க் கண்டத்திலும் வாழ்ந்து வருகின்றது.
இபபேரினத்தை மாந்தவியல் அறிஞர்கள் நில அடிப்படையில் மூன்று வகைக் கிளையினங்களாகப் பிரித்துள்ளனர். முதல் கிளையாக வடக்கு மங்கோலிய அல்லது முழு ஆசியக் கிளையும், இரண்டாம் கிளையாக தெற்கு மங்கோலிய அல்லது ஆசிய அமைதிப்(பசிபிக்) பெருங்கடல் கிளையும், மூன்றாம் கிளையாக அமெரிக்க இந்தியர்கள்(7) கிளையும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மங்கோலிய வடக்கு ஆசியக் கிளையின் உறுப்பினர்களாக சோவியத்து ஒன்றியம் மற்றும் வடக்கு சீனப் பகுதிகளில் வாழ்ந்துவரும் புர்யாத்தியர், யாக்கூத்தியர், அக்கியர், துவினீயர், அல்தானியர், கில்யாக்கியர், அலெவூத்தியர், ஆசிய எசுக்கிமோக்கள் போன்ற மக்கள் குழுக்கள் இருக்கின்றனர். தெற்கு பசிபிக் கிளைக்கு தென்சீனம், இந்தோசீனம், இந்தோஆசியா, சப்பான், கொரியா போன்றவற்றில் வாழ்ந்துவரும் மக்களினங்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மூன்றாம் கிளையான அமெரிக்க இந்தியர் கிளையோ முதன்மையாக செவ்விந்தியக் குழுக்களையே தனது உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.
ஆக, உலகத்தின் ஒட்டுமொத்த மனிதரினம் இப்படி மூன்று பேரினங்களாகவும், பேரினங்கள் பல்வேறு கிளையினங்களாகவும், கிளைகள் பல்வேறு உட்பிரிவினங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டே எந்த ஒரு மக்களினமும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். அதனின் வாழ்வியல் தன்மைகள், வாழிடத் தன்மைகள் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.
இந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு இனி நமது பார்வைக்கு வருவோம்.
(1. பழங்குடிகள் அல்லது தொல்குடிகள் எனப்படும் மனிதரினக் குழுக்கள் பழைய மந்தைச் சமுதாயத்தின் தற்காலப் பிரதிநிதிகள் ஆகும். இவைகள் தங்களுடைய பழைய வாழ்க்கையின் கூறுகளை விட்டுவிடாமலும், நாகரீக வாழ்க்கைக்கு ஆட்பட்டு வாழ்ந்துவரும் மக்களிடையே கலப்புகளை ஏற்படுத்திக் கொள்ளாமலும் முற்றிலும் வேறுபட்ட முறையில் தங்கள் வாழ்க்கையை பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருபவைகளாகும். இவைகளிடத்தில் மனிதரின வளர்ச்சியின் தொனடமைச் சமுதாயங்களுள் ஒன்றான தாயுரிமைச் சமுதாயத்தின் கூறுகள் அதிகம் இருக்கின்றதென மாந்தவியல் அறிஞர்கள் கூறி வருகின்றனர். இவைகளுடைய வரலாற்று வழியிலான வாழ்க்கை வளர்ச்சியை ஆய்வுக்குட்படுத்தினால், மனிதரினத்தின் வளர்ச்சிப் பாதையை அறிவதிலும், மனிதரின முதல் மூதாதையரைக் கண்டறிவதிலும் புதிய பாதைகள் புலப்படலாம் என்பது நம் கருத்து.
(2. ஒரு தொல்குடி மனிதக்குழு வாழ்ந்த இடத்தில் வேறொரு அல்லது அதற்கு முற்றிலும் மாறுபட்ட மனிதக்குழு ஒன்று உட்புகுந்து குடியேறி வாழத் தொடங்கிய பின், அவற்றுக்கிடையே ஏற்பட்ட வாழ்க்கைக் கலப்பினால், இரண்டும் கலந்து மயங்கிய உறவுகளினால், கலப்பு மனிதக் குழுக்கள் உருவாகியிருக்க் கூடும் என்பது மாந்தவியல் அறிஞர்களின் கருத்து.)
(3. இங்கு இடையீடாக சில கருத்துக்களைச் சொல்லி வைக்க விரும்புகிறோம். கடலிய (ஓசியானிக்) எனும் பெயர்க் குறியீடானது கடலுள் அமைந்த தீவுக் கூட்டங்களில் வாழும் மக்களைக் குறிக்கும் பொருளில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறிக்கப்பட்டுள்ள இப்பெயர் குறியீட்டுடன் நாம் கடலுள் மூழ்கிய கண்டம் பற்றி எங்கெல்சின் செய்தியையும் இணைத்துச் சிந்திக்கலாம். இப்படி இணைத்துச் சிந்திப்பதன் மூலமும், மாந்தவியல் நோக்கில் இந்தியப் பெருங்கடலில் கடலியல் அகழாய்வுகளை மேற்கொள்ள வலியுறுத்துவதன் மூலமும், மனிதரினத்தின் முதல் மூதாதையர் பற்றிய பல மயக்கங்களுக்கு நாம் விடை காண வாய்ப்புண்டு. எனவே அது இங்கு நினைவிற்குரியதும், ஆய்வுக்குரியதும் ஆகும். ஏனெனில் கடலிய-ஆத்திரேலிய வகைக்கிளை எனப்படும் இக்கிளை பழைய நிலநடுக்கோட்டுப் பேரினத்தின், அதாவது கடலுள் மூழ்கிய கண்டத்தில் வாழ்ந்திருந்த தொல் மனிதக் குழுக்களின் எஞ்சிய தொகுப்பாக இருப்பதற்கு வாய்ப்புண்டு. இக்கிளை தொகுக்கும் இடப்பரப்பைக் காணின் இது உறுதிப்படும்.)
(4. தமிழகத்தில் வாழும் மனிதரினமெனக் கருதப்படும் திராவிடர் இனம் போன்றவை இந்த வகையினுள்ளேயே அடங்குகின்றன.)
(5. இந்தியர்கள் என்றழைக்கப்படும் மக்களினக் குழுவை ஒரு தனித்த உடலினக் குழுவாகவும் மாந்தவியல் ஆய்வாளர்கள் ஆய்ந்து வருகின்றனர். அவர்கள் இதனை அய்ரோப்பிய வகைப் பேரினத்தின் சிதைவுற்ற தொன்மைக்குழு எனவும் எண்ணத் தலைப்படுகின்றனர். இப்படி எண்ணப்படும் கருத்தியல் உருவாக்கம் இனவெறிக் கொள்கைக்கு வழி வகுத்துக் கொடுத்து வருகின்றது. இதன் காரணமாகவே, அய்ரோப்பாவின் அரசியலில் நிலவி வரும் ஆரிய இனவெறிக் கோட்பாடு, இந்தியாவிலும் காலூன்றி வருகிறது. இந்த இனவெறிக் கருத்தியலே, இந்தியாவில் வேறுபாடோடு வாழும் பல மக்களினங்களை ஆரியப் பேரினத்தின் கிளையினங்கள் எனக் கூற வைத்துள்ளது. அய்ரோப்பிய வந்தேறிகளால் கட்டப்பட்ட ”இந்தியா” எனப்படும் பொய்மைக் கருத்தியலை உடைக்காத வரை, இந்தியாவிலுள்ள மக்களினங்கள் அய்ரோப்பிய ”ஆரிய” இனவெறிக்கு பலியாவதைத் தடுக்க முடியாது. சமற்கிருத மொழியில் இடம் பெற்றுள்ள ”ஆரிய” என்ற சொல்லுக்கு ”உயர்ந்தோர்” எனப் பொருள் கொள்ள வேண்டுமென சமற்கிருத ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். இதனால் ஆரிய உயர்ந்தோர் கோட்பாடு, அய்ரோப்பிய ஆரியக் கோட்பாடோடு இனங்கண்டு நிறவெறித் தன்மை பெற்று நிற்கிறது. இதனால் இந்தியாவிலும் நிறவெறியன் அடிப்படையில் ஆரியக் கோட்பாடு காலூன்றி விட்டது. ”ஆரிய” என்ற சொல் ”ஆசிய” என்ற சொல்லின் மருவலாக இருக்கலாம் என நாம் கருதுகிறோம்.)
(6. வெள்ளை நிறத்தோடு ஒப்பிடுகையில், கலங்கலான நிறமுடையவராகக் காணப்படும் இம்மஞ்சள் நிறத்தவர்கள், கடந்த காலங்களில் தாழ்மையான வெள்ளை நிறத்தினர் என்ற கருதுகோளின்படி அய்ரோப்பிய இனவகையினரால் தாழ்ந்த இனமாக நடத்தப்பட்டனர் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய செய்தியாகும். ஆரிய இனவெறியின் மையப்புள்ளி இதனில்தான் அடங்கியுள்ளது. ஏனெனில் அது நீக்ரோவியர்களை முதலில் எதிரிகளாகவும், பின்னர் மஞசள் நிறத்தவரை தாழ்ந்தவராக நடத்தியது.)
(7. அமெரிக்க இந்தியர்கள் எனக் குறிப்பிடும்போது, அது இந்தியாவில் உள்ள இந்தியர்களைக் குறிக்காது. மாறாக அமெரிக்காவில் வாழும் செவ்விந்தியக் குடிகளையே குறிக்கும். ஒரு காலத்தில் வட அமெரிக்கக்கண்டம் முழுவதிலும், தென் அமெரிக்காவில் பல்வகை நீக்ரோவிய இனக் குழுக்களோடும் விரவி வாழ்ந்திருந்தனர் இச்செவ்விந்தியக் குடிகள். ஆனால் அங்கு குடியேறுவதற்காக உட்புகுந்த வெள்ளை அய்ரோப்பிய வந்தேறிகள், செவ்விந்தியர்களை வேட்டையாடிக் கொன்று குவித்ததும், விரட்டியடித்து வாழ்க்கையை அலைக்கழித்ததும் வரலாறு சொல்லும் செய்தி. எனவே இன்று இச்செவ்விந்தியக் குடிகள் வட அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியிலும், மையப் பகுதிகளிலும், தடை செய்யப்பட்ட பகுதிகளிலும், தென் அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியிலும் வாழ்ந்து வருகின்றனர் என்பது ஓர் அதிர்ச்சி தரத்தக்க உண்மையாகும். இது போலவே நீக்ரோவியர் வகையினத்தைச் சேர்ந்த கறுப்பு ஆத்திரேலியப் பழங்குடிகள், அக்கண்டத்திற்குள் புகுந்து முன் வெள்ளை அய்ரோப்பியக் குடிகளால் மந்தை மந்தையாக வேட்டையாடப்பட்டும், விரட்டியடிக்கப்பட்டும் சிதறடிக்கப்பட்டனர், என்பதும் இன்று தனித்து வாழ்ந்து வருகின்றனர் என்பதும் இங்கு கூறப்பட வேண்டிய செய்தி.)

(தொடரும்)