19/9/17

பறையர் என்னும் பழந்தமிழர்வரலாறு





தமிழினத்தின் மூத்தகுடியான பறையர்களின் வரலாற்றை புத்தகங்களின் மூலமும் பழமொழிகளின் மூலமும் ஆதாரத்தைக் கொண்டு விவரிக்கிறார்.

தமிழர்.திரு.செல்வமணியன் அவர்கள்.

8/2/13

பேச வேண்டியதை இயக்கங்கள் பேசியிருந்தால் தோழர் மோகன்ராசுவை இழந்திருக்க மாட்டோம்!


தோழர். மோகன்ராசு.... ‘தோழர்...’ உலகையே உறவால் கட்டிப்போடும் இந்த ஒற்றைச் சொல்லை இவர் உச்சரிக்க கேட்டதுண்டா? கேட்பவர் உள்ளம் பாகாய் உருகும். நேர் நின்று இவரோடு பேச வாய்த்ததுண்டா? இவர் உச்சரிப்பில் இயல்பாய் இருக்கும் மழலைத்தனத்தில் மனம் லயிக்கும். பிடித்தவரோடு பேசத் தொடங்கினால் கையைப் பிடித்துக் கொள்வார். mohanrasu_370 இவரின் பிள்ளைப் பருவம் தொட்டு உறவோடிருக்கும் தோழர்.தமிழழகனும் இருவரும் கூடிவிட்டால் கூட இருப்பவர்களின் வயிறுகளை புண்ணாக்கி விடுவார்கள். வெறும் பேச்சினில் மட்டுமல்ல. தேவையுணர்ந்து இயன்றதை செய்து பிறரின் வாட்டம் போக்குவதில் உண்மையிலேயே இவர் தோழர். எல்லாப் பண்புகளும் கூடிப்பெற்ற உன்னத மனிதர் யார்? என சார்லி சாப்பளியிடம் கேட்டனர். ஒரு நொடியும் தாமதிக்காது அந்த உன்னத கலைஞன் சொன்னான் -‘கம்யூனிஸ்டுகள்”, கம்யூனிஸ்டுகள் மட்டுமே எல்லாவற்றையும் உண்மையாக நேசிக்கிறார்கள், அதற்காக உயிரையும் இழக்கிறார்கள். தோழர்.மோகன்ராசு தனது போராட்ட குணத்தினால் இயல்பாக கம்யூனிஸ்ட். அவர் தனது சக தொழிலாளர்களை இதயத்தால் நேசித்தார். அதற்காக தனது தோழர்களுடன் இணைந்து போராடினார்; தொழிற்சங்கம் கட்டினார். தொழிலாளர் ஒற்றுமைக்குத் தடையாக இருந்த தீய சக்திகளை வேரோடு சாய்த்தார். தொழிலாளர்கள் நலன் காக்க துணை நின்ற இயக்கம், தொழிற்சங்கம் அமைக்க தடை சொன்னபோது தயக்கமின்றி இயக்கத்தை மறுத்தார். மக்களை காக்கவே இயக்கங்கள் வேண்டும், இயக்கங்களுக்காக மக்களை கைவிட முடியாது என்பது தோழரின் நிலைப்பாடு. தேவை என வரும்போது மீட்பர்களுக்காக காத்திருக்காமல் தானே பொறுப்பெடுத்து கொள்ளும் துணிச்சலின் பெயர்தான் ‘மோகன்ராசு’. இவ்வாறுதான் அவர் தொழிற்சங்கத்துக்கும் தலைமையேற்றார்; தமிழ்த் தேச விடுதலை இயக்கம் பிளவுப்பட்டபோது இயக்கத்துக்கும் தலைமையேற்றார். தலைமைக்குத் தேவையான முக்கியமான ஒரு பண்பு தோழரிடம் நிரம்பி கிடந்தது. அதுதான் நோக்கத்துக்காக இருப்பவர்களை அரவணைத்து ஒருங்கிணைப்பது. இப்பண்புதான் ஈரோட்டில் முற்போக்கு இயக்கங்களின் கூட்டு செயல்பாட்டை உறுதியாக்கியது. தமிழகத்தில் ஈரோடும், கோவையும் உணர்வாளர்களை ஒருங்கிணைப்பதில் முன்னுதாரணம் என்றால், ஈரோட்டில் அதை மேலும், மேலும் வலுவாக்கியதில் தோழர் முக்கியமானவர். ஒற்றுமையைக் காப்பாற்றுவதில் தோழரிடம் நல்ல பண்புண்டு. நாலு பேர் பேசுகிற இடத்தில் மற்றவர்களை முதலில் பேசவிட்டு அனைவரது கருத்துகளையும் வெட்டி, ஒட்டி தனது கருத்தாக வெளிப்படுத்தும் நாட்டாமைகள் இருக்கும் காலமிது. இவர் இப்படி சொன்னார், இது சரி, இது தவறு என சக தோழர்களை அங்கீகரிக்கும் பண்பு பெரும்பான்மையோரிடம் இல்லை. தோழர்.மோகன்ராசு இதற்கு மாறானவர். இந்தத் தோழர் சொன்னது சரியெனப்படுகிறது, இதன்படி செயல்பட்டால் சரியாக இருக்கும் என சக தோழர்களை அங்கீகரிப்பார். கூட்டுச் செயல்பாட்டை இதுவே ஊக்குவித்தது. இதனால் ஈழ ஆதரவு, நதி நீர் சிக்கல், அணுஉலை எதிர்ப்பு, சாதி ஆதிக்க எதிர்ப்பு, மது ஒழிப்பு என தமிழகத்தின் வாழ்வாதாரப் போராட்டங்கள் அனைத்திலும் ஈரோடு முன்னிலை வகித்தது. மட்டுமல்ல, அமைப்புசாராத் தொழிலாளர்களை அமைப்பாக்கியதோடு, அவர்களுக்கு பிற தொழிலாளர்களுக்கு நிகரான உரிமைகளையும், ஊதியங்களையும் பெற்றுத் தந்ததில் ஈரோடு முன்னுதாரணம். அதற்கு தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும், தமிழகத் தொழிலாளர் முன்னணியும், தோழர்.மோகன்ராசுவும் முழுமுதற் காரணம். தமிழ்ச் சமூகத்தின் அனைத்து சிக்கல்களிலும் தலையீடு செய்வதன் மூலம் உண்மையிலேயே தோழர் தலைவராக இருந்தார். பிற இயக்கங்களின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். இப்படி நமக்கு உறுதுணையாக இருந்த தோழரைத்தான் 26.1.2013 மாலையில் வெட்டி வீழ்த்தியது ஒரு துரோகக் கூட்டம். தோழர் வீழ்த்தப்படுவதற்காக காத்திருந்ததைப் போலவே ஈரோட்டில் உடனடியாக எழுந்ததுள்ளன சில சமூக விரோத சக்திகள். ஈரோடு சமூக உணர்வாளர்களையும், இயக்கங்களையும் பெற்றுள்ளதைப் போலவே சமூக விரோதிகளையும் அதிகமாக கொண்டுள்ள பகுதி. தமிழ்நாட்டை ஆக்கிரமிக்கும் ஏமாற்றுத் தொழில்கள் அனைத்தும் ஈரோட்டிலேயே முளை விட்டிருக்கும் என்பதை மறுக்க முடியாது. சங்கிலித் தொடர் வணிகமான ஆம்வே முதல் ஈமு கோழி வளர்ப்புத் திட்டமென மோசடிகளை வளர்த்தெடுப்பதில் ஈரோட்டுக்கு முக்கியப் பங்குண்டு. இந்த மோசடி பின்னணியிலே ஊறிக் கிடக்கும் பண முதலைகள், அவர்களின் அடியாள் ரவுடிகள், இவர்களை ஊக்குவிக்கும் அரசியல்வாதிகள், இவர்களையெல்லாம் பாதுகாக்கும் காவல்துறைகள் என சமூக விரோத சக்திகள் நிறைந்த இம் மண்ணில் இவர்களை எல்லாம் எதிர்கொண்டே தோழர்.மோகன்ராசுவின் இயக்கப்பணிகள் இருந்தன. கூடுதலாக தொழிற்சங்கம் என்ற பேரில் பிழைப்பு நடத்தும் கும்பலுக்கு எதிராகவும், இனத் துரோகிகளான வெளிநாட்டு கைக்கூலிகள் காங்கிரசாருக்கு எதிராகவும் இருந்தது தோழரின் அமைப்பு செயல்பாடுகள். துணிச்சலான தோழரின் அமைப்பு செயல்பாடுகளால் எத்தனை வர்க்க எதிரிகளும், அதிகார வர்க்கமும் அணி சேர்ந்திருப்பர் என்பதை அவரும் உணரவில்லை, அவரது இயக்கமும் உணரவில்லை, தோழமை இயக்கங்களும் உணர்த்தவில்லை. உணர்ந்திருந்தால் ஆளும்வர்க்க கூலிப்படைகளை எதிர்கொள்ள பாதுகாப்பு வளையங்களோடு தோழர் இருந்திருப்பார். அவர் வெட்டப்பட்ட படிப்பகத்தில் தற்காப்புக்கான தடிகளாவது இருந்திருக்கும். ஒரு தொழிற்சாலை நிர்வாகத்தை எதிர்கொள்ளவே ஆயுதத்தோடு களமாடிய தோழர், பல எதிரிகளை எதிர்கொள்ளும்நிலையில் வெறுங்கையோடு இருந்து வந்தது பெரும் வியப்புக்குரியதுதான். ஆனால் தவறு தோழர்.மோகன்ராசுவை மட்டும் சார்ந்ததல்ல. இன்றைக்கு பெரும்பான்மையான இயக்கங்களின் சொத்தையான அரசியல் நிலைப்பாடு ஒன்று இதற்கு முக்கியக் காரணம். அதுதான் அரசியல் போராட்டம் முதலில், ஆயுதப்போராட்டம் பிறகு (‚) எனும் சுகபோக நிலைப்பாடாகும். ஒரு சமூக இயக்கத்தின் செயல்பாடும், போராட்டமும் எப்போதும் இரண்டு முகாம்களோடு இருக்கிறது. ஒன்று மக்களோடு, இன்னொன்று ஆளும் வர்க்கத்தோடு. இதில் நமது அரசியல் போராட்டம் என்பது எப்போதும் மக்களோடே. மக்களை அணிதிரட்டவே. ஆளும் வர்க்கத்தோடு எப்போதுமே போர்தான். அது நமது பலம் மற்றும் பலவீனத்திலிருந்து தற்காப்பு, பின்வாங்கல், தாக்குதல் என இருக்கும். இவையனைத்தும் ஆயுதப் போராட்டத்தின் பகுதிகளே. ஆகவே தற்காப்பு நடவடிக்கைகள் கூட இல்லாமல் சமூக செயல்பாடு எதுவும் இல்லை, அரசியல் போராட்டமும் இல்லை. இங்கே அரசியல் போராட்டத்தின் நீட்சியே ஆயுதப் போராட்டம் என்பது மோசடியாகும். இத்தகைய மோசடியான அரசியல் நிலைப்பாடுகளே தோழர்.மோகன்ராசுவைப் போன்ற அற்புதமான தோழர்களை நிராயுதப்பாணிகளாக அலையவிட்டது. எதிரிகள் எளிதில் தோழர்களை வீழ்த்துகின்றனர். தோழர்களோடு சிறிதளவு மனக்கசப்பு உடையவர்களைக் கூட கூர்தீட்டி விட்டு கொலை செய்ய வைக்கின்றனர்; தோழர்களை வீழ்த்தி விட்டு ஆட்டம் போடுகிறனர். இப்படித்தான் தோழர்.மோகன்ராசு வீழ்ந்ததும் எதிரிகள் எழுகின்றனர். இதை இதுவரை எந்த இயக்கங்களும் ஆழ உணர்ந்ததாக இல்லை. தோழர்.மோகன்ராசுவின் இயக்கமும் உணர்ந்திருக்கவில்லை. கூட்டு இயக்கம், கூட்டு செயல்பாடு என தோழமை உறவுகள் பலமாகி உள்ள நிலையிலும் தற்காப்பு குறித்து யாரும் கலந்தாய்வு செய்யவில்லை. ஈரோட்டில் கூட்டு நடவடிக்கையில் தோழர் முன்னிறுத்தப்பட்ட போதிலும், அந்நடவடிக்கையில சில புரட்சிகர இயக்கங்கள் உள்ள நிலையிலும் கூட இதுகுறித்து எந்த கருத்துப் பரிமாற்றமும் நடக்கவில்லை. தோழரின் பணிகள் குறித்து சிலாகிப்பவர்கள் கூட, அப்பணிகளால் இயல்பாக ஏற்படும் எதிரிகளின் கூட்டம் குறித்து சிந்திக்கவே இல்லை. ஆக இது குறித்து யாரும் யாரோடும் பேச வில்லை. தோழர். மோகன்ராசுவின் படுகொலைக்குப் பின்பு கூட எந்த ஒரு இயக்கத்திலும் இது குறித்து விவாதமில்லை. முன்னமே பேசியிருந்தால் மோகன்ராசுவையும், ஒசூர் தோழர்.பழனியையும் மற்றும் பலரையும் பாதுகாத்திருக்கலாம். இனியும் பேசவில்லையென்றால் பல பேரை இழக்க நேரும். எனவே இனியேனும் பேச வேண்டியதை இயக்கங்கள் பேசட்டும். - குணா, தேசிய முன்னணி இதழ் குழு

20/1/11

10. தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை – செல்வமணியன்


தமிழ் < தமிழரினம் < தமிழகம்

தமிழர் ஆரியரா திராவிடரா!

உலகத்தின் பல நாடுகளில் விரவியும், தமிழகம், இலங்கை போன்ற நாடுகளில் செறிவாகவும் வாழ்ந்து மொழியால் தமிழரினம் என அடையாப்படுத்தப்படும் தமிழரினம், ஓர் உடலின வகையினமாகிய திராவி்டர் இனமென்பது மாந்தவியல் அறிஞர்களின் கருத்து. ஆனால் மொழியால் தமிழர்கள் என்றறியப்படும் இவ்வினம் எவ்வகையில் திராவிடர் என்ற பெயர்ச்சுட்டைக் கொண்ட இன வகைக்குள் வகைப்படுத்தப்பட்டது என அவர்கள் விளக்கவில்லை. எனவே திராவிடர் இனம் என்பதற்கான பெயர்க் காரணம் குறித்து அறிய வேண்டியது நமக்கு அவசியமாகின்றது.
வரலாற்றில் மூலமொழியின் சமுதாய வளர்ச்சி
பொதுவாக, ஒரு மனிதரினம் அல்லது மக்களினம் வரலாற்றுப் போக்கில் தன்னையொரு மொழி பேசும் மொழியினமாக உருவாக்கிக் கொள்வதற்கு, அது பல கட்டங்களைக் கடக்கவும், அது வேண்டியிருக்கின்றது. இப்போக்கில் அம்மக்களினம் தனக்கான மொழியை உருவாக்கிக் கொள்வதில், தன்னையறியாமலேயே, ஆனால் திட்டமிட்ட முறையில் இரு வழிகளில் அது உழைக்க வேண்டியது அவசியம். ஒரு புறம் அது தானொரு மக்கட் சமுதாயமாகத் தொடர்ந்து நீடிப்பதற்கான பணிகளில் – அதற்கான உற்பத்தி உழைப்பில் ஈடுபட வேண்டும். மறுபுறம் சமுதாய உறுப்பினர்களை ஒருங்கிணைக்கவல்ல ஓசையொலிகளை விலங்குகளிடமிருந்து தனித்துப் பிரித்து, பின் அவற்றைச் சீர்படுத்திப் பேச்சுக்குரிய ஒலிகளாக மாற்றியமைக்க வேண்டும். இப்போக்கிற்கு உட்படவில்லையெனில் பின்பு மொழி என்பது கிடையாது.
முதலில் ஓசைச்சீருடைய ஒலிகள், பின் ஒலிகளின் கோர்வையாகப் பிறந்த பேச்சு (1) , பேச்சின் தொகுப்பாக உருவெடுத்த வாய்மொழி, வாய்மொழி மூலமாக உள்ளொடுங்கி நின்ற சிந்தனையின் வெளிப்பாடு (2). இவற்றோடு பல்வேறு வகைகளில், உழைப்பின் போக்கில் கையாளப்பட்ட கீறல்கள், கீறல்களைத் தனித்துப் பிரித்துப் பெறப்பட்ட செப்பமற்ற எழுத்துக்கள், செப்பமற்ற எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி உருவாக்கப்பட்ட தனிக்குறிப்பான் எழுத்துக்களின் கோர்வையால் பிறந்த வரியெழுத்து (3), வரியெழுத்தின் பதிவால் தோன்றும் இலக்கியம், இலக்கியத்தைச் செம்மைப்படுத்த எழும் இலக்கணம் (4) இத்தனை வளர்ச்சிகளையும் எட்டித்தான் ஒரு மூலமொழி (5) தோற்றம் கொள்கிறது. இத்தனை வளர்ச்சிகளையும் எட்டுவதற்கு மனிதரினம் எத்தனை நூறு அல்லது பத்தாயிரம் கணக்கிலான ஆண்டுகளைக் கடந்து வர வேண்டியிருந்தது தெரியுமா? ஆம், பல்வேறு போராட்டங்களினூடாகத்தான், பல காலங்களைச் செலவழித்து தான் மனிதரினம் தனக்கான மூலமொழியை உருவாக்கிக் கொண்டது.

வாழ்வியலில் அரசியலின் எழுச்சி
இப்படி ஒரு மூலமொழியின் உருவாக்கத்தில் அமைந்த ஓசைச் சீருடை ஒலிகளின் வகைப்பாடு, ஒலிகளின் கோர்வையால் பிறந்த பேச்சு, பேச்சின் தொடர் போக்கில் வளமடைந்த உணர்வெழுச்சிகளின் – சிந்தனைகளின் வெளிப்பாடு, கீறல்களை ஒழுங்குபடுத்திப் பெறப்பட்ட வரியெழுத்தின் தோற்றம், வரியெழுத்துகளின் வளர்ச்சியால் உடன் விளைவாக எழுந்த இலக்கியம், இலக்கியத்தின் மூலம் பிறந்து மொழியையே மறுவார்ப்பு செய்யப் புகுந்த இலக்கணம் – இப்படி தோற்றம் கொண்ட ஒவ்வொன்றும் தங்களுடைய வளர்ச்சிப் போக்கில், மனிதரினத்தின் சமுதாய வளர்ச்சி மற்றும் உறவுகளின் மீது புரட்சிமய மாறுதல்களை ஏற்படுத்தின. இதனால் விளைந்த விளைவுகளென்ன தெரியுமா?
மனிதரினம் தனது வாழ்வியல் செயற்பாடுகளோடு, தன்னையறியாமலேயே உருவாக்கிக் கொண்ட மூலமொழிக்கான போராட்டத்தில், படிப்படியாக விலங்குணர்ச்சிகளிலிருந்து விடுபட்டு – வாழ்வியலின் மீதான புரிதல் உணர்வுடன் – தன்னைப் புதியதொரு சமுதாயமாக மாற்றியமைத்துக் கொண்டது. வேறு வழியில் கூறுவோமென்ல், ஒரு புறம் தன்னையறியாமலேயே சமுதாய உணர்வினூடாகத் தனக்குள் ஒரு வலிமையான ஒருங்கிணைப்பையும், மறுபுறம் தனக்கான ஒரு வளமான மொழியையும் பெற்றுக்கொண்டது. அம் மொழியின் பின்புலத்திலேயே தன்னைச் சமுதாயமாகக் கட்டமைத்தும் கொண்டது.
இலக்கியத் திறனும், இலக்கண நுண்மையும் கொண்ட ஒரு வளமான மூல மொழியின் பிறப்பு, ஒரு புறம் – மலைக்கத்தக்க வகையில் என்று கூடச் சொல்லலாம் – மனிதக் கூட்டங்களை, அவர்களின் உணர்வுகளை நெருக்கமான வகையில் சமுதாயமாகப் பிணைத்ததென்றால், மறுபுறத்தில் அந்தச் சமுதாயத்தையே பல்வகை வகைப்பாடுகளுக்கும் உள்ளாக்கியது. இதன் காரணமாக நெருக்கமான முறையில் சமுதாயமாகப் பிணைக்கப்பட்ட மனிதரினம், அதனுடைய மறுபக்கத்தில் பல்வேறு வாழ்வியல் வேறுபாடுகளுடன் தொகுக்கப்பட்டதாகவும் அமைந்தது (6). விலங்கின வாழ்வியலின் அனைத்துப் பொதுப் பண்புகளிலிருந்து விடுபட்டு விட்ட புதியதொரு வாழ்வியலான மக்களின் வாழ்வியல் தொடங்கி வைக்கப்பட்டது.
இது எப்படி அமைந்ததெனில், இலக்கியத்திலிருந்து பிறந்த இலக்கணம் எவ்வாறு மூலமொழியின் பல்வகைக் கூறுகளையும் வகைப்படுத்தத் தொடங்கி, பின்னர் அம்மொழியையே ஒரு கட்டமைப்புக்குட்படுத்தி செம்மைப்படுத்தியதோ அப்படியே! இதனால் மொழியின் இலக்கண வழிப்பட்ட செம்மைப்பாடு, மறுவகையில் தன் தாக்கத்தைச் சமுதாயத்தை வகைப்படுத்துவதிலும் செலுத்தியது எனலாம். இப்போக்கிலேயே இலக்கியத்தின் மூலம் மொழிக்கு இலக்கணம் பிறந்தது போல, சமுதாயத் தொகுப்பின் மூலம் மனிதரினத்துக்கு அரசியல் பிறந்தது. (7)
அரசியல், சமுதாயத்தை மொழியின் மூலம் ஆளுமைச் செய்யத் தொடங்கியது. இதனால் அரசியலின் தலைமை ஆளுநனாக மொழியே மாற்றமடைந்தது. சமுதாயத்தின் அனைத்து வாழ்வியல் செயற்பாடுகளும் மொழியால், வழிகாட்டப்படுவதாக மாற்றப்பட்டன. இப்போக்கின் இறுதியில் குறிப்பான அம்மனிதரினம், தான் உருவாக்கிக் கொண்ட மூல மொழியினால் அடையாளப்படுத்தப்படும் மக்களினமாக உருப்பெற்றது.

குறிப்பு
1. மனிதரினத்தினை விலங்கினத்திலிருந்து பிரித்துத் துண்டுபடுத்திய வாழ்வியல் போக்கு, சமுதாயத்திற்கான வளர்ச்சியில் முதன்முதலாகப் பேச்சின் தோற்றத்தோடுதான் தொடங்கியது. ஏனெனில் பேச்சு நடைமுறையானதற்குப் பின்புதான் மனிதன் தன்னைத் தெளிவான முறையில் இனங்காணத் தொடங்கினான். விழிப்புணர்வு கொண்ட முறையில் தன்னைத் தனக்குரியவர்களோடு முழுமையாக இணைத்துக் கொள்ளவும், அவ்விணைப்பு அறுபடாமால் இருக்கச் சிந்திக்கவும் அதனைச் செயற்படுத்தவும் தொடங்கினான்.
2. உள்ளபடியே, ஒரு மொழி, அது மொழியென அறியத்தக்க வகையில் இந்தச் சிந்தனையின் வெளிப்பாடோடுதான் பிரிகின்றது. தெளிவான முறையில் விலங்கினத்தையும் மனிதரினத்தையும் வேறுபடுத்தும் மையக்கூறும் இதிலிருந்துதான் தொடங்குகின்றது மொழியும், மொழியின் வளர்ச்சிக்கான சிந்தனையுமின்றி மனிதன் விலங்கினத்திலிருந்து வேறுபட முடியாது.
3. வரியெழுத்தின் தோற்றத்தோடுதான், மொழி தன்னை முழுமையாக மற்றவற்றுக்குள் அதாவது சமுதாயச் செயற்பாடுகளுக்குள் இணைத்துக் கொள்கிறது. அப்போக்கில் அது அவற்றை ஆளுமை செய்யவும் தொடங்கி விடுகின்றது. இதனால் வரியெழுத்தின் தோற்றம், மொழியைக் கட்டமைப்பதற்கான வேலைகளையும் தொடங்கி விடுகின்றது. இறுதியில் அதுவே சமுதாயத்தினை அடையாளப்படுத்தும் கருவியாக மாற்றம் கொள்கி்ன்றது.
4. ஒரு மொழி தனக்கென ஒரு சமுதாய அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை வேறு வழியில் வெளிப்படுத்துவதுதான் இலக்கணமாகும். இதனாலேயே இலக்கணம் மொழியை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு, அதனைக் கட்டமைக்கின்றது. சமுதாயம் தனது இருப்பை அரசியலால் நெறிப்படுத்துகிறது. மொழி தனது சமுதாய இருப்பை இலக்கணத்தால் நிலைநிறுத்துகிறது. இதனால் மொழியின் இலக்கண வகைப்பாட்டிற்கும், சமுதாய அரசியலுக்கும் தொடர்புண்டு.
5. மூலமொழி என்பது பல்வேறு கிளைமொழிகளைக் கொண்ட ஓர் அடிப்படைக் கட்டமைப்பு மொழியாகும். மூலமொழிக்கும் கிளைமொழிக்கும் இடையே பல்வேறு வேறுபாடுகள் இருக்கலாம். இதற்கு அடிப்படைக் காரணமாக அமைவது, ஒரு மனிதரினத்தில் பிறப்பெடுத்த ஒரு மொழி, அம்மனிதரினம் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்லவே செய்யும். அங்கு மனிதர்கள் வாழ்வியலில் மாறுபாடுகளை ஏற்றது போலவே, மொழியும் வாழிடங்களுக்கேற்ப மாறுபாடுகளை ஏற்றுக் கொண்டது. இதனால் மொழிக் கட்டமைப்பினுள்ளும் மாற்றங்கள் ஏற்பட்டன. இம்மாற்றங்கள் வெளிப் புலப்பாடாக அமைந்த நிலையில், அவை மூலமொழியிலிருந்து பிரிந்து கிளை மொழிகளாயின.
6. வாழ்வியல் வேறுபாடுகள் என்பதை விடவும், புதிய முறையில் பிளவுபடுத்தப்பட்ட தொகுப்பு வாழ்வியல் என்று கூடச் சொல்லலாம். இதுவே சரியானது. ஏனெனில் சமுதாயத்தின் தொகுப்பு ஒரு புறத்தில் தனது தேவைக்கான புதிய உற்பத்தியைத் தொடங்குகின்றது. மறு பக்கத்தில் பழையனவற்றை விரைவாகவோ அல்லது மெதுவாகவோ அழிக்கின்றது. அத்துடன் புதிய உற்பத்தி முறைகளுக்கேற்ப தொகுப்புக்குள்ளானவர்களைப் பிரிக்கவும் செய்கின்றது. இந்தப் பிரிப்பு மேலிருந்து திணிக்கப்படுவதுதான் வாழ்வியல் வேறுபாடுகளுக்கு வழி வகுக்கின்றது.
7. இங்குச் சமுதாயத்திலுள்ள வகுப்பு வேறுபாடுகளின் உறவுகளையும் அவற்றின் மேலாண்மையும் கவனத்திற்கொள்ள வேண்டும். உழைப்பு வேறுபாடுகளின் விளைவால் பிறந்து, பின்னர் சொத்துரிமையின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட வாழ்வியல் வேறுபாடுகளே, வகுப்பு வேறுபாடுகளாகும். வகுப்பு வேறுபாடுகளின் மேலான ஒரு கருவியாக அதனை மாற்றியமைத்தது. மொழியை ஒழுங்கமைக்கும் இலக்கணம் போலவே, அரசைச் செயற்படுத்தும் சிந்தனையாக நடைமுறைச் செயல்களின் தொகுப்பாக அரசியல் எழுந்தது.

தொடரும்

8/1/11

9.தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை – செல்வமணியன்


திராவிட – இந்தியர் வகைக் கலப்பினங்கள்

கடந்த கட்டுரையில் வெள்ளை அய்ரோப்பியப் பேரின வகையில் தொகுக்ப்பட்டுள்ள இனங்கள் எவையெவை எனக் குறிப்பிடும்போது அப்போரினத்தின் தெற்கு நடுநிலக் கடல் (1) கிளையின் பிரதிநிதிகளாகத் தெற்காசியாவில் வாழ்ந்து வரும். குறிப்பாக இந்தியாவில் வாழும் இந்தியர்களும் இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டியிருந்தோம்.
நீக்ரோவியர்களுக்கும் ஆத்திரேலியர்களுக்குமான ஒற்றுமை பற்றிய பார்வையில் தெற்காசியப் பகுதி அவ்வினங்களின் தாயகப் பகுதியாக அமைந்ததிருந்து என்பதையும் கண்டோம். இவ்விரு நிலைகளிலிருந்து தற்போதைய சூழலில் இங்கு இரு இன வகைகளும் அதாவது வெள்ளை அய்ரோப்பிய வகையினமும் கறுமை நீக்ரோவிய கடலிய வகையினமும் இப்பகுதியில் கலந்திருப்பதை அறிந்து கொள்ளலாம். இத்துடன் கடலிய – ஆத்திரேலிய வகைக் கிளையினத்தில், அய்ரோப்பிய இனச்சாயல்கள் இருப்பதாகக் கூறும் மாந்தவியல் அறிஞர்களின் கருத்தையும் இணைத்துப் பார்த்தால் கலப்பு பற்றிய செய்தி உறுதிப்படுகிறது. ஆக, தெற்காசியப்பகுதியில் தற்போது கலப்பின வகைகள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் முடிவாகிறது.

பொதுவாக, வெள்ளை அய்ரோப்பிய இனவகையைக் கண்டறிதற்கான உடலினப் பொதுத் தன்மைகளாக மாந்தவியல் அறிஞர்கள் பின்வரும் கூறுகளை முன் வைத்துள்ளனர் (2)
வெளுத்த அல்லது மங்கிய வெளுப்பு நிறத்தில் தோல்,
முகத்தில் செந்நிற அல்லது இளஞ்சிப்பு நிறச் சாயல்,
பேரலை படிவ அல்லது நேரான கறுத்த அல்லது வெளிரியமுடி,
அடர்ந்தோ அல்லது நடுத்தரமாகவோ உடல் மயிர்ப் போர்வை.
நேரான அல்லது சற்றே சரிவான நெற்றி,
மடிப்ர் குறைந்த மேலிமையுடன் கூடிய தவி்ட்டு நிற விழிகள்,
குறுகலான முன்னே துருத்தியிருக்கும் மூக்கு,
மெல்லிய அல்லது நடுத்தர தடிப்புள்ள உதடுகள்,
நீள்வட்ட அல்லது குட்டை உருண்டை தலை.
நீக்ரோவிய கறுப்புப் பேரினத்திற்குரிய பொதுத்தன்மையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது முற்றிலும் மாறுபட்டவைகளாக இருக்கும். மேற்கூறிய பொதுத்தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு, நாம் தெற்காசிய இந்தியர்களின் இனமாகிய தெற்கு – நடுநிரக்கடல் வகையினத்தைப் பார்தோமானால், அது அய்ரொப்பிய இனப் பொதுத்தன்மைகளுடன் நீக்ரோவிய இனச் சாயல்களையும் கொண்டுள்ளதாக விளங்கிவருகிறது.

இப்படியுள்ள இனச்சாயல்களின் இருப்பு குறித்துக் கூறவரும் மாந்தவியல் அறிஞர்கள் பண்டைய நீக்ரோவியர் இனத்திற்கும், அய்ரோப்பிய இனவகைகளுக்கும் இருந்த உறவுகள் பின்வருமாறு எடுத்துரைக்கின்றனர்.

”……… அரோப்பிய வகை, நீக்ரோவிய ஆத்திரேலிய வகை இனங்களின் ஒன்றுக்கொன்றான உறவுகளையும், அவை பிரிந்து சென்று வேறுபட்டு, நிற்கும் வழிகளையும் முதலில் சொல்வது அவசியம். ஒரு காலத்தில் இந்த இரண்டு பெரிய இனங்களும் ஒரே முழுமையாக இருந்தன (3) என்பது அய்யத்திற்கிடமில்லாத ஒன்று எனச் சொல்லலாம். ஏனெனில் நடுநிலக்கடல் (மத்திய தரைக்கடல்) பகுதியிலிருந்தும் (இத்தாலியிலுள்ள குழந்தைகள் குகையிலிருந்து). இத்தாலி – பிரான்சு எல்லைக்குச் சற்று துாரத்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ள இரண்டு நீக்ரோவிய வகை (கிரிமால்டி மாதிரி) எலும்புக்கூடுகள் இந்தத் தொன்மையறவுக்கு உறதியுரைப்பதாய் இருக்கின்றன. எனவே பிற்காலத்தில்தான் ஒரே முழுமையாக இருந்த தொடக்கக் குழுவினம் நீரோவிய வகை என்றும், அய்ரோப்பிய வகை என்றும் இரு பெரிய இனங்களாகப் பிரிந்தது (4) எனக் கூறலாம்.”

” இவ்வாறு பிரித்த இரு இனங்களும் கதிர் வீச்சு, காற்றின் ஈர்ப்பு முதலிய இயற்கை நிலைமைகளினால், முற்றிலும் வேறுபட்டுவிட்ட நிலப்பரப்பால், பல்லாயிரக்கணக்கான ஆண்டு காலம் விலகி வாழ நேர்ந்த காரணத்தால், தங்கள் இனத் தன்மைகளில் மாறுபாடுகளை ஏற்று முற்றிலும் வெவ்வேறான இன வகைகளாகி விட்டனர். இப்படி வேறு வேறான நிலைமைகளில் நிகழ்ந்த நீண்ட கால வளர்ச்சியின் விளைவாக, ஆழ்நிறம் பெற்றுவிட்ட சூடானிய நீக்ரோவியன், நிற அமைப்பு குன்றிய வடக்கு அல்லது கிழக்கு அய்ரோப்பியனிலிருந்து வெகுவாக வேறுபட்டு விடுகிறான்.

ஆனால் இவ்விரு இனங்களுக்கும் நடுவே, உறவுகளைக் காட்டவல்ல எத்தனையோ திரிவாக்கக் குழுக்கள் உள்ளன...........
நடுநிலக் கடல் (மத்திய தரைக்கடல்) பகுதி, வடகிழக்கு ஆப்பிரிக்கா, தென் இந்தியா போன்றவற்றில் இத்தகைய (அய்ரோப்பிய நீக்ரோ இணைப்பு) திரிவாக்கக் குழுக்கள் உள்ளன. இக்குழுக்கள் யாவும் இவ்விரு பேரினங்களுக்கும் இடையிலுள்ள கடுமையான வேறுபாடுகளை மறக்கச் செய்து விடுகின்றன. இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டடாக கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள, எத்தியோப்பிய கப்பினர் குழுக்களைக் கூறலாம். இந்தத் தொன்மையான திரிவாக்கக் குழுக்கள் உள்ளன. இக்குழுக்கள் யாவும் இவ்விரு பேரினங்களுக்கும் இடையிலுள்ள கடுமையான வேறுபாடுகளை மறக்கச் செய்து விடுகின்றன. இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாக கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள, எத்தியோப்பிய கலப்பினர் குழுக்களைக் கூறலாம். இந்தத் தொன்மையான திரிவாக்கக் குழுக்களின் நீக்ரோவிய இனப் பண்புகளும் பேரளவில் பின்னிப் பிணைந்துள்ளன. என்றாலும் இவற்றுள் நீக்ரோவிய இனச் சாயல்களே மேலாங்கியுள்ளன.

............(எத்தியோப்பியா அல்லாது) நீக்ரோவிய இனச்சாயல் மேலோங்கிய திரிவாக்கக் குழு வாழும் இன்னொரு பகுதி தெற்காசியாவில் இருக்கிறது. அப்பகுதி இந்தியாவிலும் இலங்கையிலும் பரவியுள்ளது”. (5) (அழுத்தம் எம்முடையது)
இந்த மேற்கோளிலிருந்து இதனுள் சுட்டிக்காட்ப்படும் திரிவாக்க அடிப்படை கலப்பின வகை இனங்களே திராவிடரினமும், இந்தியரினமுமாகும். இதில் நமது தமிழரினத்தின் உடலின மரபினம் எனச் சொல்லப்படுவது திராவிடர் இனமேயாகும். இது நீக்ரோவியப் பேரினச் சாயல்களை அதிகம் வெளிப்படுத்தும் கிழக்கு ஆப்பிரிக்க எத்தியோப்பிய திரிவாக்க இனக் குழுவினைப் பெரிதும் ஒத்திருப்பதாலேயே, மாந்தவியல் அறிஞர்கள் நீக்ரோவிப் பேரின வகைகளுக்குள் அடக்கியுள்ளனர்.
இந்தியர் குறித்த அறிஞர் அம்பேத்கரின் கருத்து
இதுபோலவே, அயிரோப்பியப் பேரினச் சாயல்களை அதிகம் கொண்டுள்ள ஒரு திரிவாக்க இனக்குழு வகையினமே, இந்தியத் துணைக் கண்டத்தின் வ்டக்கில் வாழ்ந்து வரும் பல மக்களினங்களின் உடலின மரபினம் என்று கருதப்படும் இந்தியர் இனமுமாகும். இப்படி அய்ரோப்பிய வெள்ளைப் பேரினச் சாயல் மற்றும் சார்பு கொண்ட இந்திய உடலினர், இந்தியாவில் மட்டும் 55 கோடி எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர் என மாந்தவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர் (6) இத்துடன் இந்தியாவின் மக்களாக வாழ்ந்து வருபவர்கள், ஆரியர்கள், திராவிடர்கள், மங்கோலியர்கள், ஸ்கெதியன்கள் போன்ற பல்வேறு உடலினங்கள் கலந்த கலவையின மக்களாக இருக்கின்றனர் என்கிற அறிஞர் அம்பேத்கரின் கருத்தும் இணைத்துப் பார்க்கப்பட வேண்டியதாகும். (7)
இப்படி இந்தியத் துணைக்கண்டத்துச் சழுதாயம், வட புலத்தில் அய்ரோப்பிய வெள்ளை இனச் சார்புடனும், தென்புலத்தில் நீக்ரோவிய கடலிய கறுப்ப இனச் சார்புடனும் வாழும் பல்வகை மக்களினங்களைக் கொண்டு இருக்கின்றது.

இப்படி வேறுபட்ட நிற இனங்கள் – அதாவது இந்தியர் திராவிடர் இனங்கள் – இருப்பதாலேயே, இந்திய அரசியலில் நிறவெறிச் சார்புடைய ஆரிய – திராவிட இனக் கோட்பாடுகள் எதிரெதிர் கோட்பாடுகளாகத் தலை துக்கி நிற்கின்றன. இதற்குத் தொன்மைக் காலத்திலிருந்த இனக்குழுப் போராட்டங்கள் பற்றிய தெளிவு படுத்தப்படாத அல்லது செவி வழிச் செய்திகள், தவறான கருத்துருவாக்கங்கள் போன்றவை நிழலுருக்கள் போல இருந்து கொண்டு வலுப்படுத்தி வருகின்றன.
இதற்கு இந்தியச் சழுதாயத்திற்குரியதாக அமைந்து, மக்களின் வாழ்வியலை இயக்கி வந்துள்ள சாதியமைப்பு முறை (8) ஓர் அடித்தளமாக இருந்து கொண்டு பாதுகாப்பும் அளித்து வருகின்றது. இதன் காரணமாகவே தமிழகத்தின் தொல்குடி மக்களெனக் கருடப்படும் ஆதி-திராவிடர்கள் (9) வரலாறு நெடுகிலும் ஒருபுறத்தில் சாதியமைப்பாலும், மறுபுறத்தில் ஆரிய-திராவி்ட அரசியல்-பண்பாட்டுக் கொள்கைகளாலும் புறக்கணிக்கப்பட்டும் தொடர்ந்து தாக்கப்பட்டு அலைகழிப்புகளுக்கு ஆளாக்கப்பட்டும் வந்துள்ளனர்.
ஆக மேலே கண்ட கருத்துக்களின் அடிப்படையில், நாம் நமது தமிழரினம் குறித்துப் பின்வரும் முடிவுகளை வந்தடையலாம்

ஆக, மேலே கண்ட கருத்துக்களின் அடிப்படையில், நாம் நமது தமிழரினம் குறித்துப் பின்வரும் முடிவுகளை வந்தடையலாம்.
1. தமிழரினம் திராவிட உடலினத்தைச் சார்ந்ததெனக் கூறப்படினும், அது ஒரு தொன்மையான மனித முதாதையரின் தற்காலப் பிரதிநிதியினம் ஆகும். இதனுள் கலப்புகள் இருக்கும் போதிலும், இதன் பொதுத் தன்மைகள் அத்தொன்மையினத்தின் கூறுகளிலேயே தங்கியுள்ளன. எனவேதான் இது நீக்ரோவிய – கடலிய – ஆத்திரேலிய வகைப் பேரினத்துள் அடக்கப்பட்டுள்ளது.
2. தமிழரினத்தின் தொல் முதாதையர் இனம் பல்வேறு சிதைவுகளுக்கு ஆளாக நேர்ந்ததே அதனுள் ஏற்பட்டு இருக்கும் கலப்புகளுக்கு அடிப்படையாக இருக்கலாம். சொல்லப்படும் மனிதரின ழூதாதையரின் தொடக்க வாழிடம் அழிப்புக்குள்ளாக்ப்பட்டதும், அத்தொடக்கக் குழுவினம் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்தது என்பதும் இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய செய்திகள் ஆகும்.
3. தமிழரினம் சொல்லப்படுகிற இந்தியர் இனத்துக்குள்ளடங்கி வரவில்லை என்பதும், அவ்விந்தியர் இந்தியத் துணைக் கண்டத்தில் வடபுலத்திலேயே வாழ்ந்து வருகின்றனர் என்பதும் தமிழரினம் ஒரு தனியினம் என அடையாளங் காணப்படுவதற்குரிய செய்தியாகும்.
4. தமிழரினத்தைப் பொதுவான முறையில்ல பிற இனங்களிலிருந்து வேறுபடுத்துகிற கூறாக, அது பேசி வரும் மொழி அமைந்துள்ள நிலையில், அது எவ்வகையில் திராவி்டர் எனும் இன வகைப்பாட்டுக்குள் வருகின்றது என்பது ஆய்வுக்குரிய செய்தியாகும். ஏனெனில் திராவிடம் என்பது நிற வகையையோ அல்லது வாழிடப் பகுதிகளையே சுட்டுவதாக அமைந்திருக்கவில்லை. மேலும் அது எந்த உயிரினகூறையும் கூட உள்ளடக்கி இருக்கவில்லை. எனவே திராவிட பெயரிடல் பற்றிய ஆய்வு அவசியமாகும்.


1.இது மற்றொரு வகையில் இந்திய – நடுநிலக் (மத்திய தரைக் ) கடல் வகைக்கிளை என்றே குறிப்பி்டப்படுகிறது.
2. மிகயீல் நெசுதுர்க் “மனித இனங்கள்“ எனும் நூலில்.
3. இந்தச் செய்தி நினைவிற்குரியதாகும்.ஏனெனில் நீக்ரோவியப் பேரினத்தின் தலைமைத் தொன்மைக்குடி அல்லது முதல் மூதாதையர் பற்றிய மாந்தவியில் ஆய்வில் இது இணைத்துச் சிந்திக்கத்தக்க அளவுக்கு முகாமைத்தன்மை கொண்டதாகும்.
4. இங்கு நாம் மார்க்சியப் பேரறிஞர் எங்கெலசு குறிப்பிடும் மூழ்கி கண்டம் பற்றிய செய்தியை இணைத்துச் சிந்திக்கலாம். அத்துடன் நீக்ரோவியப் பேரினம் கிளைவகைகளாகப் பிரிந்து போது மேற்குக்கிளை, கிழக்குக்கிளை என இரண்டாகப் பிரிந்ததோடு மட்டுமின்றி, அது ஒரு வடக்கிளையினையும் கொண்டிருந்தது என்ற முடிவுக்கும் வரலாம். ஏனெனில் இங்குக் குறிப்பிடப்படுகிற தொடக்கக் குழுவினம் நீக்ரோவியப் பேரினத்தில் தலைமைத் தொன்மைக்குடி அல்லது மனிதான முதல் மூதாதையர் பற்றிய ஆய்வில் இது முகாமைத் தன்மையுடைதாகும்.
5. மாந்தவியல் அறிஞர் மிமயீல் நெகலுர்க்இ “மனித இனங்கள்“ எனும் நூலில்.
6. மாந்தவியல் அறிஞர் மிகயீல் நெகலுர்க் “மனித இனங்கள்“ எனும் நூலில்.
7. அறிஞர் அம்பேத்கர், “இந்தியாவில் சாதிகளின் தோற்றம் மற்றும் அமைப்பியக்கம்“ எனும் நூலில்.
8. வேறெங்கும் இல்லாத, ஆனால் இந்தியாவிற்கேயுரிய ஒரு வாழ்வியல் சமுதாய அமைப்பு முறையாகச் சாதியமைப்பு இருந்து வருகின்றது. திராவிட இனச் சார்பு இனங்களிலும், அய்ரோப்பிய இனச் சார்பு இனங்களிலும் நடந்துள்ள வாழ்வியல் ஆய்வுகள் அங்கெல்லாம் சாதிகள் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளன. ஆனால், இதற்கு முரணான வகையில், சாதியமைப்பினை இந்தியாவிற்குள் உட்புகுந்த வேற்றினத்தவர்களே உருவாக்கினர் என்றொரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கருத்து முமுமையான நம்பிக்கைக்குரியதாக இல்லை.
9. இந்த ஆதி – திராவிடர்கள் எனப்படுவோரே சாதியமைப்பில் மிகவும் கீழானவர்களாகவும், தீண்டப்படக் கூடாதவர்களாகவும் பிரித்து வைக்கப்பட்டு நெடுங்காலமாகப் பல்வேறு கொடுமைகளுக்கு இலக்காகி வந்துள்ளனர். இதற்கான வரலாற்றுக் காரணங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

தொடரும்

20/11/10

8.தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை – செல்வமணியன்


கடலிய – ஆத்திரேலிய வகை மனிதரினம்

இந்தக் கிளை வகையினங்களைக் கண்டறியும் பார்வையோடு, நாம் கடலிய – ஆத்திரேலிய வகை உடலினங்கள் குறித்துக் காண்போமாயின், இவ்வகையினம் நீக்ரோவியப் பேரினத்தின் பொதுத் தன்மைகளில் பல மாறுபாடுகளைக் கொண்டுள்ளதாகவே இருக்கின்றது. இது குறித்து மாந்தவியல் அறிஞர்கள் பலவகைக் கருத்துக்களைக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக, ஆத்தரேலியப் பழங்குடிகளை நீக்ரோவியர்களுடன் ஒப்பிட்டு அறியலாமே தவிர, நீக்ரோவியர்களாகவே கருதக் கூடாது என்றும் அவர்களிடையே கறுப்பு நிறத்தைத் தவிர அய்ரோப்பியப் பேரினச் சாயல்களே மிகுந்துள்ளன என்றும், சில மாந்தவியல் அறிஞர்கள் வழக்குரைக்கின்றனர். ஆனால் பொதுத் தன்மைகளின் வெளிப்பாடுகளில் மாற்றங்கள் இருந்தாலும் உள்ளடக்கங்கள் மாறாமல் இருப்பதால் நீக்ரோவியப் பேரினத்துடன் இணைத்தே வகைப்படுத்தலாம் எனச் சில மாந்தவியல் அறிஞர்கள் கருத்துரைக்கின்றனர். இப்படி கூறும் மாந்தவியல் அறிஞர்கள் நீக்ரோவியர் பேரினச் சார்பில் ஆப்பிரிக்க நீக்ரோவியருக்கும்,ஆத்திரேலிய வகையினருக்கும் இடையிலுள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பின்வருமாறு எடுத்துரைக்கின்றனர்.

“ஆப்பிரிக்க நீக்ரோவியரை, ஆத்திரேலிய வகையினரோடு ஒப்பிட்டுப் பார்க்க நாம் விரும்பினால், சில வேளைகளில் வியப்பூட்டும் ஒற்றுமையைக் காட்டும் பல இயல்புகளோடு கூடவே, குறிப்பிடத்தக்க வேற்றுமைகளையும் காணலாம். முதன்மையாக நீக்ரோவியரின் உடல்மீது மயிர்ப்போர்வை வளர்ச்சி குன்றியது – பலரிடம் பொதுவாக காணப்படுவதே இல்லை. மாறாக, ஆத்திரேலியர்களுக்கு பெரும்பாலான மெலனேசியர்களுக்கும், பாப்புவான்களுக்கும் அது மிக அடர்த்தியாக வளர்ந்திருக்கிறது. நீக்ரோவியரின் தலைமுடி வெகுவாகச் சுருண்டிருக்கிறது. மெலனோசியர்களுக்கும், பாப்புவான்களுக்கும் அவ்வளவாகச் சுருள்வதில்லை…… நீக்ரோவியரின் நெற்றி நேரானதுடன் துலக்கமான நெற்றி மேடுகள் கொண்டது. இந்தோனேசிய ஆத்திரேலிய வகையினருக்கோ, நெற்றி நடுத்தரச் சாய்வானது, அல்லது ஆத்திரேலியர்களுக்கு உள்ளதுபோல பெரும்பாலும் சரிவானது. அத்துடன் அவர்களுடைய கண் மேல்வரம்புகள் தீவிர வளர்ச்சியடைந்தவை. நீக்ரோவியருக்கோ கண்மேல் வரம்ர் வளர்ச்சி குன்றியவை. நெற்றியின் வடிவத்தில் நீக்ரோவியர்கள், கடலிய ஆத்திரேலிய வகையினரைக் காட்டிலும் மூதாதையரின் மாதிரியிலிருந்து அதிகமாக விலகிவிட்டனர்போல் தெரிகிறது. மூக்கின் வடிவத்தில் உள்ள வேறுபாடு இதற்கு நேர்மாறானதாகக் கருதப்படுகிறது. ஆப்பிரிக்க நீக்ரோவியரின் மூக்கு வழக்கமாகத் தட்டையானது. கிழக்கு நீக்ரோவியரின் மூக்கோ உப்பலான அல்லது நேரான தண்டுடையது ஆனால் சில மெலனேசியர்களின் மூக்குத் தண்டு உட்குவிந்தது. நீக்ரோவகையினருக்கும் ஆத்திரேலிய வகையினருக்கும் இடையேயுள்ள இன வேறுபாடுகள் பெருமளவு மயிர்ப் போர்வை, நெற்றியின் வடிவம், கண் மேல்வரம்புகள், மூக்குத் தண்டு போன்றவற்றுடன் தொடர்புடையவை. மிகப்பெரும்பாலான ஒற்றுமைகளுக்கு முன் இந்த வேற்றுமைகளை, ஒப்பிட்டுப் பார்த்தால் மிகப் பெரியவை அல்ல. நீக்ரோவியர் வகைக்கிளையும், ஆத்திரேலிய வகைக்கிளையும் புவியின் ஒன்றுக்கொன்று வெவ்வேறான வழிகளில் வளர்ச்சியடைந்ததே இந்த வேற்றுமைகளுக்கான காரணம் என எண்ணத் தோன்றுகிறது.

ஆத்திரேலிய – நீக்ரோ வகைத் தன்மை கொண்ட (இனக்குழுக்களின்) தொடக்கக் குழு தெற்காசியப் பகுதியில் எங்கோ இந்தியாவிலோ, இந்தோனேசியத்திலோ, ஒருவேளை இன்னும் அதிக மேற்கேயோ, பின் தொன்மைக் கற்காலத்தின் தொடக்க காலத்தில் வாழ்ந்திருந்தது என்றும் பின்னர் மேற்குக் கிளையாகவும், கிழக்குக் கிளையாகவும் பிரிந்துவிட்டது என்றும் அதன் பின்னர் இவ்விரு கிளைகளும் தங்களைப் பிணைத்திருந்த நிலத் தொடர்பினை இழந்து விட்டன என்றும் கருதிக் கொணடடோமானால்,........ மிகநீண்ட கடந்த காலத்தில் சுமார் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்போ, அல்லது இன்னும் முற்பட்ட காலத்திலேயோ, தெற்காசியாவில் இத்தகைய நில நடுக்கோட்டு இனத்தின் மூதாதை இனக்குழு ஒன்று வாழ்ந்திருந்தது எனும் கருதுகோளின் அடிப்படையில், அதிலிருந்து பிரிவுபெற்ற வகையினக் குழுக்கள் பெரும்பகுதி தென்கிழக்கு அல்லது கடலியத் தீவுகளின் திசைகளிலும், அவ்வாறே மேற்கு திசையிலும், பின்னர் தென்மேற்கு அல்லது ஆப்பிரிக்காவின் திசையிலும் குடிபெயர்ந்து சென்றிருக்கும் என்று எண்ணுவது எளிதாக அமையும். இந்த நீண்ட மேற்கோளின் அடிப்படையில் கூறுவோமாயின் நீக்ரோவிய வகையினத்தையும், கடலிய, ஆத்திரேலிய இன வகைக் கிளையையும் பண்டைக் காலத்தில் ஒரே மூதாதையரிடமிருந்து தோன்றியவை என்றும், அவை தங்களுடைய நிலத் தொடர்பிணை இழந்து விட்டமையாலும், வேறுபட்ட திசைகளுக்குப் பிரிந்து சென்று விட்டமையாலும், சென்றடைந்த வாழ்விடங்களுக்கேற்ப மாற்றங்களை ஏற்றுக் கொண்டு தனித்தனிக் கிளையினங்களாகப் பிரிந்துவிட்டன என்னு கூறலாம். இதன் மூலம் பொதுப்படையில் கறுமை நிற உடலின வகையினராக இருக்கும் நீக்ரோவியர்களும், கடலிய ஆத்திரேலியக் கிளையினத்தின் பல்வேறு இனக்குழுக்களும், பண்டைக் காலத்தில் வாழ்ந்திருந்த தொல் மனிதரினக் குழுவொன்றின் தற்காலப் பிரதிநிதிகள் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

சரி, இனி நாம் நமது தமிழரினத்தின் உடலின மரபினம் எனச் சொல்லப்படும் திராவிடர் இனம் பற்றியகருத்தின் மீது நமது கவனத்தைத் திருப்புவோம்.

திராவிட – இந்தியர் வகைக் கலப்பினங்கள் (தொடரும்)

8/6/10

7.தமிழர் ஆரியரா திராவிடரா! ஒரு மார்க்சிய மக்களினப் பார்வை - செல்வமணியன்

தமிழரினம் உலகில் எவ்வகையினம்.

உலகம் தனையும், அதனில் வாழும் மனிதரினத்தையும், அதன் பல்வேறு மக்களினங்களையும் பற்றிப் பார்க்கும்போது, நமது தமிழரினம் அம் மக்களினங்களுள் ஒன்றாகவும் ஒரு தனி இனமாகவும் வாழ்ந்து வருவதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

நமது தமிழரினம் வெளிப்படையான முறையில் பிற மக்களினங்களில் இருந்து பேசும் மொழி, செறிந்து வாழும் நிலப்பரப்பு, கொண்டுள்ள வாழ்வியல் ஒருங்கிணைப்பு, துல்லியப்படுத்தும் பண்பாட்டு வேறுபாடுகள், ஆகியவற்றின் காரணமாகவே வேறுபடவும், ஒரு தனி இனமாக அடையாளம் காணப்படவும் வல்லதாக இருந்து வருகிறது. அவ்வாறு வேறுபடும் நிலையில், அது மொழியின் அடிப்படையிலேயே பெயரிடப்பட்டும் அழைக்கப்படுகிறது.

இப்படி, தனித்துத் தெரியப்படும் நமது தமிழரினம் இன்றைய உலகில் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்தாலும், இந்தியத் துணைக்கண்டத்தின் தெற்குப் பகுதியான தமிழகத்திலும், அதற்கு தென்கிழக்கே உள்ள இலங்கைத் தீவிலும் அதிகளவில் செறிந்து வாழ்ந்து வருகின்றது. மேலும், செறிவடர்த்தி குறைவான வகையில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றிலும் வாழ்ந்து வருகின்றது.

இப்படி, செறிவடர்த்தி கொண்டு உலகில் சில பகுதிகளில் வாழ்ந்துவரும் தமிழரினம், மனிதப் பொது வகைப்பாட்டில் அடிப்படையில், கருமை நிற நீக்ரோவியவர் பேரினத்தையும், அதனுள் அடங்கிய கடலிய – ஆத்திரேலிய வகையினத்தையும், அதனுள் ஓர் உடலின மரபினமாகக் கருதப்படும் திராவிடர்(1) இன வகையைச் சார்ந்ததாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வகைப்படுத்துதலை தெளிவுற தெரிந்து கொள்ள வேண்டுமெனில், கடலிய – ஆத்திரேலிய வகை மனிதரினம் குறித்து விரிவான பார்வையை பெறுதல் நமக்கு அவசியமானதாகும்.

பொதுவான முறையில் நீக்ரோவியர் பேரினத்தைக் கண்டறிய தக்க பொது உடலமைப்புக் குறியீடுகளாக மாந்தவியல் அறிஞர்கள் சுட்டுகின்ற குறியீடுகள் பின்வருபவையே.(2)

கறுமை மற்றும் கறுமை சார்ந்த நிறம்.
சற்றே தாடைப்புறம் அகன்ற உருண்டையான நீள்வட்டத் தலை,
அடர்த்தியான சுருள் அல்லது சிற்றலைப் படிவ தலைமுடி,
நேரான நெற்றி, தெளிவான நெற்றி மேடுகள் குறைந்த நீளம் கொண்ட சரிவான உப்பலான மூக்கு,
உட்குழிகள் கொண்ட கறுமை நிறக் கண்கள்,
கறுமை படர்ந்த தடித்த உதடுகள்,
உடலுடன் ஒப்பிடும்போது சற்றே நீளமான கைகளும், கால்களும்

இப்பொதுக் குறியீடுகள் இப்பேரினத்தைக் கண்டு அறிவதற்காகத் துணைக்குக் கொள்ளப்படும் அடிப்படைக் குறியீடுகள் தானாகும். இவை பொதுக் குறியீடுகள் என்பதனால் ஒரு கிளை வகையினத்தைக் கண்டறிய முற்படும்போது, எல்லாக் குறியீடுகளுமே அப்படியே பொருந்தி வரவேண்டும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை. ஏனெனில் கிளை வகையினத்தில் பொதுக் கூறுகளில் சிலக் கூறுகள் மேலோங்கியும், சிலக் கூறுகள் உள்ளடங்கியும் இருக்கலாம். ஓரிரு கூறுகள் குறிக்கப்பட்டுள்ள பொதுக்கூறுகளுக்கு மாறுபட்டவையாகக் கூட இருக்கலாம். குறியீடுகளின் வேறுபாடு எளிதில் புலப்படாததாகவும், ஊகித்தறிய தக்கதாகவும் கூட இருக்கலாம். எனவே ஒரு கிளை வகையினத்தைக் கண்டறிவதில் பொதுக் கூறுகளில் முதன்மையாக அமையும் சில கூறுகள் மட்டுமே மேலோங்கி நிற்கின்றன. அவ்வாறு நிற்பவைகள் பொதுக் குறியீடுகளுடன் இணக்கம் கொண்டுள்ளனவா என்பதை அறிதலே போதுமானதாகும்.



(.1) தமிழர் மக்களினத்திற்குத் தமிழர் திராவிடர் போன்ற பெயர் வைப்புகள் எவ்வாறு நடந்தேறின என்பது குறித்து மொழியியல், தொல்லியல் துறைகளைச் சார்ந்த அறிஞர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது ஆய்விற்குறிய செய்தி.

(2.) மாந்தவியல் அறிஞர் மிகயீல் நெசுதூர்க் ”மனித இனங்கள்” என்னும் நூலில்

(தொடரும்)

19/3/10

 முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் - எனது சாட்சியம் இயக்குநர் ராம்

முத்துக்குமாரன் தந்த பேர் ஆயுதம்மான அவன் சடலத்தோடு இருந்த மூன்று நாட்களில் நான் கண்டவற்றையும் காதில் கேட்டவற்றையும் எனது சாட்சியமாய் பதிவு செய்கிறேன். தீர விசாரித்து மெய் காணும் அரசியல் ஞானம்மோ, அல்லது காண வேண்டிய அவசியத்திற்கான அரசியல் சார்போ என்னிடம் இல்லை. எந்த ஒரு தனிமனிதனின் இயக்கத்தின் உண்மையை அர்ப்பணிப்பை நான் கேள்விக்குள்ளாக்கவும் முயலவில்லை. அவரவர் அவர்களுக்கான நியாயங்களை புறக்கணித்து தம்மைத் தாமே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டியக் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதே நான் உணர்ந்து கொண்ட்து. என்னைப் போல் மூன்று நாட்களும் முத்துக்குமரனோடு இருந்தவர்கள் தங்கள் சாட்சியங்களைப் பதிவு செய்வது வருங்கால வரலாற்றிற்கு உதவும் என நம்புகிறேன்.

ஜனவரி 29வியாழக் கிழமை

நண்பகல் 12 மணிக்கு தோழர் செந்தமிழன் தஞ்சையில் இருந்து தொடர்பு கொண்டு ”ஒருவர் ஈழத்திற்காய் தீக்குளித்து விட்டார். அவரை கீழ்பாக்கம் மருத்துவமணைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்”என்ற தகவலைச் சொன்னார்.கீழ்பாக்கம் மருத்துவமனையை நான் அடைந்த போது அவருடையபெயர் முத்துக்குமார் என்பதும் அவர் இறந்துவிட்டார் என்பதும் தெரிந்தது. குமுதம் நிருபர் அவர் எழுதியிருந்த கடிதத்தின் நகல் ஒன்றைக் கொடுத்தார். கல்லூரி மாணவர்கள் ஒரு 40 பேர் வந்திருந்தனர். தலைவர்கள் திரு.வை.கோ, திரு.நெடுமாறன், திரு.திருமாவளவன், திரு.ராமதாஸ், திரு.வெள்ளையன் (வணிகர் சங்கத் தலைவர்) ஆஜர் ஆனார்கள். ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகள் தவிர தமிழ் தொலைக்காட்சிகள் எதுவும் வந்த பாடில்லை. முத்துக்குமாரின் சடலத்தை அன்று மாலையே தகனம் செய்யலாம் என மற்றத் தலைவர்கள் பேசிய போது திரு.வெள்ளையன் முத்துக்குமாரின் தந்தைக்குத் தகவல் சொல்லி அவர் வர நேரமாகும் என மறுத்தார். (நல்ல வேளை அவர் மறுத்தார்).அவருடைய சடலத்தை எங்கு வைப்பது என விவாதம் தலைவர்களுக்குள் வந்த போது அந்தப் பொறுப்பையும் திரு.வெள்ளையனிடமே ஒப்புவித்தார்கள் மற்றத் தலைவர்கள். மற்றவர் பொறுப்பெடுத்தால் அதில் அரசியல் சாயம் வந்து விடும் என்பதே தலைவர்களின் ஒட்டு மொத்தக் கருத்து. மாணவர்கள் சிலர் பல்கலைக்கழகத்திற்கு முத்துக்குமாரின் சடலத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். தலைவர்கள் அக்கோரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. அதே நேரத்தில் வழக்கறிஞர்கள் சிலர், பூவிருந்தவல்லி சாலையில் உள்ள பேங்க் ஆஃப் சிலோனை அடித்து நொறுக்கிவிட்டு நேராக மார்ச்சுவரி முன் வந்து கூடினர். அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கிட்டதட்ட கைகலப்பு ஏற்படும் சூழல் உருவான போது திரு.வை.கோ தலையிட்டு சமாதானம் செய்தார். தலைவர்கள் இது போன்ற சமாதனங்கள் செய்ததோடு மற்றுமின்றி ஆங்கில செய்தி ஊடகங்களுக்கு பெரும் விருப்பத்துடன் பேட்டிகளை உணர்ச்சி பொங்க கொடுத்தார்கள். ஆனால் இதே ஆங்கில செய்தி ஊடகங்கள் முத்துக்குமாரின் தியாகத்தைக் கொச்சைப் படுத்தியதை அறிந்த மாணவர்களும் மற்றும் சில தமிழ் ஆர்வலர்களும் அச் செய்தி ஊடகங்களை அவ்விடத்தை விட்டு விரட்டி அடித்தனர்.
மாலை 3 மணிக்கு மேலாக பிரேத பரிசோதனை முடிந்து முத்துக்குமாரனின் சடலம் ஒப்படைக்கப்பட்டது. ஏறக்குறைய மாணவர்கள் வக்கீல்கள் திரைப்பட உதவி இயக்குநர்கள் மற்ற தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் என சுமார் 300 பேர் கூடியிருந்தனர். தலைவர்கள் முத்துக் குமாரனின் சடலத்தை வண்டியில் போக்குவரத்துக்கு இடையூறின்றி விரைவாகக் கொண்டு செல்லலாம் என்று முடிவெடுத்தனர்.ஆனால் இந்த 300 சொச்சம் பேரும் அதை ஏற்றுக் கொள்வதாய் இல்லை. கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி வாசலில் இருந்து ஈகா திரையரங்கம் வரை முத்துக்குமாரனின் சடலம் இருந்த வண்டி நகர ஏறக்குறைய 45 நிமிடங்கள் ஆனது. திரு.வை.கோவும் திரு.நெடுமாறனும் மாணவர்களிடம் விரைவாகச் செல்வோம் அனுமதி இல்லாமல் ஊர்வலம் போக முடியாது, நாம் ட்ராஃபிக்கை இடைஞ்சல் செய்கிறோம் என்றெல்லாம் கெஞ்சிப் பார்த்தார்கள். மாணவர்களும் மற்றவர்களும் கேட்காமல் போக வேறு வழியின்றி அவர்களும் நடந்தே வந்தார்கள் கெஞ்சிக் கொண்டு. (திரு.திருமாவும் திரு.ராமதாஸும் முன்பே சென்று விட்டிருந்தார்கள்) நகர விடாமல் நடந்தே போக வேண்டும் என்று முயன்ற அந்த 300 பேரையும் காவல்துறை அடித்து கலைத்தது. பின்பு அவரவர் வசதிக்கு ஏற்ப யார் யாருடைய பைக்கிலோ ஏறிக்கொண்டு தலைவர்கள் போன வேகத்திற்கு முத்துக்குமாரனின் சடலத்தை பின் தொடர்ந்தார்கள். சென்னையின் பிராதன வீதிகளில் முத்துக்குமாரனின் சடலம் 40 கி.மீ வேகத்திற்கும் கூடுதலாகக் கொண்டு செல்லப்பட்டது. மாணவர்கள் மற்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் வழக்கறிஞர்கள் திரைப்பட உதவி இயக்குநர்கள் என எவருக்கும் அந்த வேகத்தில் உடன்பாடில்லை. ஏனெனில் சென்னையின் பிரதான வீதிகளைச் சில மணி நேரமாவது முடக்குவது என்பது செய்திகளில் ஒரு விதமான பாதிப்பை உண்டாக்கும் என நினைத்தனர். ஆனால் தலைவர்கள் ஏனோ இதைப் புரிந்து கொள்ளவில்லை.பார்வைக்காக வைக்கப்பட்டது. அந்தச் சாலை பிரதான சாலை அல்ல. அச்சாலையை மறிப்பது சென்னையின் ஜீவனை எந்த வகையிலும் பாதிக்காது. வணிகர் சங்க கட்டிடம் என்பது 16 க்கு 10 அடி அளவுள்ள ஒரு அறை. மாலை 7 மணி வாக்கில் தலைவர்கள் அவ்வறையினுள் கலந்தாலோசித்தார்கள். நாங்கள் முத்துக்குமாரனின் சடலத்திற்கு அருகே நின்று கொண்டிருந்தோம். 8 மணி வாக்கில் தலைவர்கள் கிளம்பிப் போக திரு.வெள்ளையன் வெளியே வந்தார். திரு.வெள்ளையன் அறிமுகம் எனக்குக் கிடையாது. அவருடைய தம்பி இயக்குநர் திரு.புகழேந்தி(காற்றுக் கென்ன வேலி) மூலம் அவரிடம் பேசினேன். நாளை மதியத்திற்குள் முத்துக்குமாரனின் அடக்கம் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடுகாட்டில் என்று தலைவர்கள் எடுத்த முடிவைக்கூறினார்.நாங்கள் முத்துக்குமாரனின் கடிதத்தைக் கொண்டு அவரிடம் வாதம் செய்தோம்.

”1.தமிழகத்தில் இருந்து பலரும் செய்தி அறிந்து வந்து சேர ஒரு நாள் போதாது.
2.முத்துக்குமார் அவருடைய சடலத்தை ஆயுதமாக வைத்து போராடும் படி வேண்டி இருக்கிறார். எனவே போர் நிறுத்தம் வரும் வரை முத்துக்குமார் சடலத்தைப் பாதுகாக்க வேண்டும்.
3.முத்துக்குமார் சடலத்தை அருகில் உள்ள மயானத்திற்குக்கொண்டு செல்லாமல் சென்னையில் பிரதான மயானத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அம்மயானம் குறைந்த பட்சம் 15 கி மீ தூரத்திலாவது இருக்க வேண்டும்
4.அல்லது முத்துக்குமாரின் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அப்படி எடுத்துச் சென்றால் தென் தமிழகம் முழுவதும் ஒரு எழுச்சியை ஏற்படுத்த முடியும்.
திரு.வெள்ளையன் அனைத்துக் கருத்துக்களையும் பொறுமையாய்க் கேட்டுக் கொண்டார். தலைவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டுமே என்றார். நாளை காலை தலைவர்களிடம் கேட்டுப் பார்ப்போம் என்றார். கூட்டம் வெகு குறைவாய் இருக்கிறதே? நாளை யாரும் வரவில்லை எனில் என்ன செய்ய முடியும் என்றார். இன்னமும் செய்தி பரவவில்லை என்றோம். வாகனம் ஏற்பாடு செய்து தந்தால் கல்லூரி விடுதிகளூக்கு செல்ல முடியும் என்றோம். மாணவர் நகலகம் அருணாச்சலத்தின் மகன் திரு செளரி ராஜன் வண்டிகளுக்கான பணம் கொடுத்தார். மாணவர்களோடு இயக்குநர் புகழேந்தியும் கல்லூரி விடுதிகளுக்கு கிளம்பிச் சென்றார்கள்.நான் எனக்குத் தெரிந்த திரைப்பட இயக்குநர்களுக்குத் தகவல் சொன்னேன். இயக்குநர் சேரன் மறுநாள் காலை வருவதாக சொன்னார். இரவு 12 மணிக்கு மேல் கொளத்தூர் போனேன். செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் (சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர்கள்) வந்திருந்தார்கள்.முத்துக்குமாரனின் சடலத்தோடும் நாங்கள் ஒரு 20 பேர் அன்றைய இரவு விழித்திருந்தோம். விடியலில் கூட்டம் வந்து விடும் என்று நம்பினோம். தமிழகம் எப்படி இந்த இரவிலும் உறங்குகிறதென கோபித்துக் கொண்டோம்.

ஜனவரி 30வெள்ளிக் கிழமை

மெல்ல அந்த இரவு விடிந்தது. புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி, தமிழ்நாடு மார்க்சிய லெனினிய கட்சி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் புரட்சிகர இளைஞர் முன்னணி பெரியார் தி.கதமிழ் தேசிய விடுதலை இயக்கம் தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி மக்கள் கலை இலக்கியக் கழகம் திராவிட இயக்கத் தமிழர் பேரவை(ஆனால் சுப.வீ வரவில்லை)புரட்சிகர பெண்கள் விடுதலை இயக்கம், போன்ற தமிழகத்தின் அனைத்து சிறிய அரசியல் அமைப்புகளில் இருந்து வீர வணக்கம் சொன்னபடி அவரவர் கொடிகளுடன் முத்துக்குமாரனின் சடலம் இருந்த வீதியை நிறைக்கத் தொடங்கினார்கள்.கல்லூரி மாணவர்களின் கூட்டம் கூடத்தொடங்கியது. வெளியூரில் இருந்து மக்கள் வரத் தொடங்கினார்கள். குறைந்தது ஒரு 2000 பேர் முத்துக்குமாரனைச் சுற்றி நிற்கத்தொடங்கிய போது காலை 9 மணி.ம.தி.மு.க தலைவர் திரு.வை.கோ, பா.ம.க தலைவர் திரு.ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திரு.திருமாவளவன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு.பழ.நெடுமாறன், வணிகர் சங்கத் தலைவர் திரு.வெள்ளையன் ஆகியோர் வணிகர் சங்கத்தின் அச்சிறிய அறைக்குள் கூடினார்கள். அவர்களோடு பார்வையாளர்களாக இயக்குநர் சேரன், அறிவுமதி மற்றும் ஒரு 20 பேர் இருந்தனர். இவ்வாலோசனைக் கூட்டத்திற்கு வரவேற்கப்படாத மேற்சொன்ன சிறிய அரசியல் அமைப்புகள் முத்துக்குமாரனின் மேடைக்குப் பின்புறம் தங்களுக்குள்ளான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.”சனிக்கிழமை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் முதல் கூட்டரங்கம் இருப்பதால் இன்றே தகனம் செய்ய வேண்டும்” - திரு.பழ.நெடுமாறன்.திரு.வெள்ளையன் நேற்றிரவு நாங்கள் அவரிடம் சொன்னக் கருத்தைப் பதிவு செய்தார். அதற்குப் திரு.பழ. நெடுமாறன், ”சனிப் பொணம் தனியாய் போகாது, எனவே இன்றே எடுக்க வேண்டும்” என்றார்.இவரின் இந்தக் கருத்திற்கு பார்வையாளர்களாய் இருந்த நாங்கள் சிரித்தோம்.திரு.வெள்ளையன் மீண்டும் வாதம் செய்தார்.“பொனத்தை வச்சுக்கிட்டு அரசியல் பண்றோம்னு கேவலமா பேசுவாங்கப்பா, எனவே இன்றே எடுத்துடுவோம்”- பா.ம.க திரு.ராமதாஸ் ”நாம் செய்யும் தாமதம் நம்மால் சந்திக்க இயலாத பிரச்சனைகளைக் கொண்டு வரும் எனவே இப்போதே எடுக்க வேண்டும்”என்று பொருள் பட - திரு.திருமாவளவன். திரு வை.கோ வும் இதே கருத்தைத் தெரிவித்தார். வெள்ளையன் விடாமல் தன்னால் இயன்ற வரை வாதம் செய்து கொண்டிருந்தார். “உங்கள் தேர்தல் அரசியலுக்காக முத்துக்குமாரனின் தியாகத்தை வீணாக்கக்கூடாது என எச்சரித்தார்”,தலைவர்களை. இயக்குநர் சேரன் முத்துக்குமாரனின் இறுதிஊர்வலத்தை இரு நாளேனும் தள்ளிப் போட வேண்டிய அவசியத்தை தன்னால் இயன்ற வரை வாதிட்டார்.திரு.திருமாவளவன் தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் நீங்கள் அமைதியாய் இருங்கள் என அவரை பேசாமல் இருக்கச் சொன்னார். வெளியில் இருந்து மாணவர்கள் எனக்குச் செய்தி அனுப்பினார்கள் கைப்பேசிக்கு.“விடுதலைச் சிறித்தையினர் மாணவர்களை அடிக்கிறார்கள்”.நான் திரு.வன்னியரசிடம் சொல்ல அவர் அதை தடுப்பதற்காக வெளியேறினார். நானும் அவரோடு வெளியேறினேன். வெளியில் இருந்த மாணவர்களிடம் கூட்டம் நடைபெறும் விதத்தையும் தலைவர்களின் கருத்தையும் தெரிவித்தேன். மேடைக்குப் பின்புறம் இருந்த சிறிய அரசியல் கட்சிகளிடமும் தெரிவித்தேன். அனைவரின் மனநிலையும் தலைவர்களின் கருத்துக்கு எதிராய் இருந்தது. தலைவர்கள் வருமு்ன் மாணவர்கள் மேடையைக் கைப்பற்றினர். மேடையையும் மேடையைச் சுற்றியும் மாணவர்களும் சிறிய அரசியல்கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் தமிழ் ஆர்வலர்களும் இருந்தனர்.பா.ம.க, ம.தி.மு.க ஆகிய இரு பெரும் அரசியல் கட்சியிலிருந்து எந்த தொண்டனும் வந்த பாடில்லை. திரு.ராமதாஸும் திரு.வை.கோவும் தங்கள் தொண்டனையும் அழைக்காமலேயே அந்த இறுதி ஊர்வலத்தை அன்று நடத்த அறைக்குள் வாதிட்டுக் கொண்டிருந்தனர். நண்பகல் 11 மணி வாக்கில் திரு வெள்ளையன் ஒலிபெருக்கியில் தலைவர்கள் ஒன்று கூடி எடுத்த முடிவின் படி இன்னமும் 1 மணி நேரத்தில் இறுதி ஊர்வலம் தொடங்கும் என்று அறிவித்தார். மாணவர்களும் ஏனையோரும் ஏற்க முடியாது என்றனர். திரு.வெள்ளையன் பேசிக் கொண்டிருக்கையில் ஒலிபெருக்கியை அவரிடம் இருந்து வாங்கி நான் கூட்டத்தின் மனநிலையைப் பதிவு செய்தேன். வெள்ளையனுக்கு உள்ளூர சந்தோசமே.திரு.ராமதாஸு மேடைக்கு வராமலேயே கிளம்பிச் சென்றார் இதற்குப்பின் திரு.ராமதாஸ் வரவே இல்லை. திரு.வை.கோ பேச முயற்சி செய்தார். ”யாரோடு உன் தேர்தல் கூட்டணி என்று சொல்லிவிட்டுப் பேசு”, என மாணவர்கள் ஒருமையில் அவரை பேச விடாமல் தடுத்தனர்.”போதும் உன் உணர்ச்சி நாடகம்” என்று அவரை நோக்கி வசைகூட பேச்சை நிறுத்தி விட்டார். திரு.திருமாவளவனும் பேச வில்லை. தலைவர்கள் கிளம்பிச் சென்றார்கள். கிளம்பும் முன் திரு நடேசனின் அறிக்கையை திரு.வை.கோ கூட்டத்திற்கு முன் வாசித்தார். மேடை இதற்குப் பின் முழுக்க மாணவர்கள் வசமானது.மாணவர்கள் அதற்குப்பின் அரசியல் கட்சிகள் தங்கள் கொடிகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லி அதை நிறைவேற்றினார்கள். ஒலி பெருக்கி மாணவர் வசமானது. மேடை புலிக் கொடி வசமானது. கூட்டம் கூடியவாறே இருந்தது. சாலை முழுவதும் அடங்காத கூட்டம்.கையில் லத்தியுடன் இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் படைசூழ முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்த வந்த புரசை எம்.எல்.ஏ.(தி.மு,க) வி.எஸ்.பாபு செருப்பு, கற்கள் வீசி துரத்தியடிக்கப்பட்டார் தலைதெறிக்க அவர் ஓடிய காட்சி அருமையாக இருந்தது. அண்ணா திமுக மதுசூதனன் மலரஞ்சலி செலுத்தினார். இவர், “போர் என்றால் அப்பாவி மக்கள் சாகத் தான் செய்வார்கள்“ என்று முழங்கிய அம்மாவின் தொண்டன்.முத்துக்குமாரனின் சடலத்தை அன்று சூழ்ந்திருந்த மாபெரும் கூட்டம் அரசியல் கட்சி சாராதது. எந்த அரசியல் கட்சிக் கொடியையும் ஏந்தாதது.தமிழகம் முழுவதும் இருந்து கூட்டம் திரண்டிருந்தது. முத்துக்குமார் நிஜமாகவே ஒரு எழுச்சியை ஏற்படுத்திவிட்டான். எந்த பெரிய அரசியல் கட்சியும் கையில் எடுக்காமல் வகைப்படுத்தாமல் விட்டும் சாரை சாரையாய் மக்கள் அஞ்சலி செலுத்த வந்து கொண்டிருந்தனர்.வந்த கூட்டம் நம்பிக்கைக் கொடுத்தது. போர் நிறுத்தம் வரும் வரை முத்துக்குமாரனின் சடலத்தைக் கொண்டு போராட வேண்டும் என்று மாணவர்கள் மற்றவர்கள் ஏகோபித்த கருத்தைக் கொண்டிருந்தார்கள். திரு.வெள்ளையன் மருத்துவர் ஒருவரை வரவழைத்து முத்துக்குமாரனின் சடலத்தைப் பரிசோதித்தார்.ஏதேனும் மருந்துள்ளதா சடலத்தைப் பேண என வழி கேட்டார். மருத்துவர் அதிகபட்சம் இன்னும் 24 மணி நேரம் எனக் கையை விரித்தார். நேற்றே மருந்து ஏற்றியிருக்க வேண்டும் என்றார். செய்வதறியாது நின்றோம்.இரவும் வந்தது. கூட்டம் மெல்ல நகரத் தொடங்கியது. நாளையும் சடலத்தை எடுக்கக் கூடாது என்பதைத்தவிர மாணவர்களிடமும் ஏனையோரிடமும் அரசியல் ரீதியான செயல்பாடு எதுவும் இல்லை. நாளை அரசியல்வாதிகளிடமிருந்து முத்துக்குமாரின் சடலத்தை எப்படிக் காப்பாற்றுவது என்பதே அவர்கள் முன் இருந்த சவாலாக அவர்களுடைய உரையாடல்கள் அமைந்திருந்தன . இரவு திரு.வை.கோ வந்தார். மாணவர்களிடம் அமர்ந்து அவர்களின் எழுச்சியைப் பாராட்டினார், தானும் அவர்களைப் போல்தான் ஒரு காலத்தில் இருந்தேன் என்றார். மனசாட்சி உறுத்தி வந்தாரா? இல்லை காலையில் பழுதான அவரின் முகத்தைச் சரி செய்ய வந்தாரா தெரியவில்லை என மாணவர்கள் அவர் போனபின் சொல்லிச் சிரித்தார்கள். .

ஜனவரி31 ௩௧சனிக்கிழமை

மாணவர்கள் கூட்டம் நிறைந்து இருந்தது. மேடை அவர்களின் வசமே இருந்தது. கட்சிக் கொடிகள் மேடைக்கு வரக் கூடாது என்ற கோரிக்கையை மாணவர்கள் முன் வைத்தார்கள். பெரும் கட்சியிலிருந்து சிறுகட்சி வரை அக்கோரிக்கையை ஏற்று கட்சிக் கொடி இல்லாமல் மேடைக்கு வந்து மரியாதை செலுத்தினார்கள். புலிக் கொடி மேடையை அலங்கரித்தது. மதியம் வரை தலைவர்கள் யாரும் வந்தபாடில்லை. குறைந்தப் பட்சம் 10000 பேராவது அன்று மரியாதை செலுத்தினார்கள். திரைப்படத் துறையிலிருந்து இயக்குநர்கள், நடிகர்கள், உதவி இயக்குநர்கள் இன்னும் மற்றத் துறையினரும் வந்தவாறு இருந்தார்கள். இயக்குநர் சங்கத்தின் பிரதிநிதிகள் அனைவரும் வந்திருந்தார்கள்.நடிகர்களில் மன்சூர் அலிகான் வந்தது நினைவு இருக்கிறது. இயக்குநர்களில் பாரதிராஜா,அமீர், ஆர்.கே.செல்வமணி,சேரன், சுப்ரமணிய சிவா, சரவண சுப்பையா, சீமான் வந்தது என் நினைவில் இருக்கிறது. இறுதி ஊர்வலம் அன்று வேண்டாம் என்பதும் ஈழத்தில் சமாதானம் வரும் வரை போராடுவோம் முத்துக்குமாரன் தந்த அவன் உடல் என்ற ஆயுதத்தோடு என மாணவர்கள் மேடையில் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்கள் இரண்டு மணி வாக்கில் வை.கோ வந்தார். முத்துக்குமாரனின் சடலத்திற்கு முன் இருந்த பந்தலில் அமர்ந்தார். கட்சிக் கொடி கொண்டு வர வேண்டாம் என்று தன் கட்சிக் காரர்களைக் கேட்டுக் கொண்டார். மாணவர்கள்தான் முன்பிருந்து நடத்த வேண்டும் என்று ஒத்துக் கொண்டார். பொழிலனின் உறவினர் வழக்குரைஞர் அங்கயற்கன்னி என்ற கயல்தான் ஒலிபெருக்கியில் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்திப் பேசிக் கொண்டிருந்தார். மன்சூர் அலிகானின் பேச்சு மிகுந்த உத்வேகத்தை கூட்டத்தினருக்குத் தந்தது.3 மணி நெருங்கும் போது திரு.திருமாவளவன் தன் கட்சியினருடன் வந்தார். அவரது கட்சியினர் மேடையில் ஏற மேடைக் கூட்டத்தின் அளவு கொள்ளாமல் ஆடியது, வழக்குரைஞர் அங்கயற்கன்னி என்ற கயல் மாணவர்கள் தான் முன் நின்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் வைக்க, அதைப் பொருட்படுத்தாமல் ஏறக்குறைய ஒலிபெருக்கியை அவரிடம் இருந்து பிடுங்கினார். அதன் பின் மேடையும் நிகழ்வும் அவர் மற்றும் அவர் தொண்டர் வசமானது.3 மணிக்கு முத்துக்குமரனின் இறுதி ஊர்வலம் தொடங்கும் என அறிவித்தார். ஊர்வலத்தின் பாதையை இயக்குநர் புகழேந்தியும், கவிஞர் அறிவுமதியும் முன்பே எழுதி காவல் துறை வசம் ஒப்படைத்திருந்தனர். பெரம்பூரில் இருந்து ஓட்டேரி, புரசைவாக்கம், சூளை ஹை ரோட், யானை கவுளி, வால்டேக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் இடுகாட்டை அடைவது என்பதுதான் இறுதி ஊர்வலத்தின் வழி. காவல்துறையினர் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் இடுகாட்டிற்குப் போனால் போதும் என்பதே அவர்களுடையதும் அரசாங்கத்தின் மனநிலையும் என ஜனவரி 30 இரவு காவல்துறையினரிடம் பேசிய திரு.வெள்ளையன் எங்களிடம் சொன்னார்.அரசாங்கம் எந்த விதத்திலும் முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலத்தை தொல்லை செய்ய விரும்பவில்லை. இன்னும் சொல்லப் போனால் அரசாங்கம் முத்துக்குமாரனின் சடலத்திடம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. மூலக்கொத்தளம் இடுகாட்டை சிபாரிசு செய்தவர் திரு.திருமாவளவன். மொழிப்போர் தியாகிகளின் நினைவிடம் அங்கிருப்பதாலே அவர் அதனை சிபாரிசு செய்வதாய் சொல்லியிருந்தார். இக்காரணத்தினால் பெசண்ட்நகர் இடுகாடு போன்ற பரீசீலனைகள் நிராகரிக்கப்பட்டன.ஊர்வலம் தொடங்கியது. அரசியல் கட்சியைச் சேராத பலரும் மாணவர்களும் மற்ற அரசியல் கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இயக்குநர் அமீர் முத்துக்குமாரனின் சடலம் இருந்த வண்டியில் ஏறி சடலத்திற்கு அருகில் அமர்ந்து வந்தார். அவர் விளம்பரம் தேடுகிறார் இறங்க வேண்டும் என அவரிடம் கீழ் இருந்த பலரும் வாதிட்டுக் கொண்டிருந்தனர்,மாணவர் ஒருவர் அவரிடம் என்னைச் சொல்லச் சொல்லுமாறு சொன்னார். நான் இயக்குநர் சுப்ரமணிய சிவாவிடம் சொன்னேன். அவர் அமீரிடம் சொன்ன போது அமீர் தன் நோக்கம் விளம்பரம் தேடுவது அல்ல என மறுத்தார். இருட்டிய பின் வண்டியிலிருந்து இறங்கினார்.அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்த தோழர் திரு.வெள்ளையன் ஊர்வலத்தின் இறுதியில் மாட்டிக் கொள்ள முத்துக்குமாரனின் சடலம் ஊர்வலத்தின் நடுவே வர திரு.வை.கோ அதற்கு முன்னும், திரு.திருமாவளவன் ஊர்வலத்தின் தொடக்கத்தில் நின்றும் வழி நடத்திச் செல்ல கண்ணுக்கெட்டிய தூரம் வரை புலிக் கொடிகளும் தலைவன் பிரபாகரனின் உருவப்படங்களும் மனிதக் கூட்டமும் தெரிந்தது. அப்பகுதி கடைகள் வணிகர் சங்கம் கடையடைப்பு அறிவித்திருந்த காரணத்தால் மூடப்பட்டிருந்தன.பெரம்பூர் அடிப்பாலம் அருகே ஊர்வலத்திற்கு முன் சென்ற திரு.திருமாவளவன் ஒரு வேனின் மீது ஏறி நின்றவாறு ஊர்வலத்தின் பாதையை பெரம்பூர் புறவழிச் சாலைக்குத்திருப்பினார்.முன் சென்ற ஒரு அணி அப்பாதையில் திரும்பிச் சென்றது. அவர்களுக்குப் பின் வந்த மற்ற அணியில் இருந்த மாணவர்களும் அரசியல் கட்சி சாராத சிலரும் அப்பாதையில் செல்ல முடியாது,ஏற்கனவே முடிவு செய்த ஓட்டேரி ,புரசைவாக்கம் வழி செல்ல வேண்டும் என்ற கோரிக்கையுடன் சாலையில் அமர்ந்து ஊர்வலத்தை தடுத்தார்கள்.மற்றத் தலைவர்கள் யாரும் அவ்விடத்தில் இல்லை. தகவல் அறிந்து இயக்குநர் சேரன் அவர் உதவியாளர்களுடன் அவ்விடத்திற்கு விரைந்து வந்தார். அமர்ந்து இருந்தவர்களை வன்னியரசு வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினார். அதில் மூவருக்குப் பலத்த அடி. அவர்கள் பின்பு என்னிடம் முறையிட்டார்கள். இயக்குநர் சேரனுக்கு திரு.திருமாவளவன் நடந்த வாறே விளக்கம் சொன்னார், புரசைவாக்கம் பகுதியில் ஊர்வலத்தில் வன்முறையை ஏற்படுத்த சிலர் சதி செய்து உள்ளனர் அதனால்தான் தான் வேறு வழி இன்றி பாதையை மாற்றினேன் என்றார்.நடந்து வந்த திரு.வை.கோ வும் வண்டியில் வந்த திரு.பழ. நெடுமாறனும் இது குறித்து எதுவும் யாரிடமும் கேட்கவில்லை. யார் சொல்வதில் எது உண்மை என அறியாமலே நாங்கள் ஊர்வலத்தில் நின்றோம். மாற்றி விடப்பட்ட புற வழிச் சாலையில் வீடுகளோ கடைகளோ இல்லை. ஒரு புறம் பெரிய மதில் சுவர், மறுபுறம் ரயிலடி. 3 கிலோமீட்டர்கள் யாரும் இல்லாத அச்சாலையில் ஊர்வலம் நகர்ந்தது. சாலையின் எதிர் புறத்தில் இருந்து ஒரு வண்டியும் வந்த பாடில்லை.காவல் துறையினர் ஊர்வலம் திரும்பிய உடனேயே வண்டிகளின் போக்குவரத்தை தடுத்திருக்கலாம். அல்லது கூட்டத்தின் பெரும்பான்மைக்குத் தெரியாத ஊர்வலப்பாதை அவர்களுக்கு முன்பே தெரிந்தும் இருக்கலாம். புறவழிச் சாலையில் நகரத்தொடங்கிய சிரிது நேரத்திற்கெல்லாம் மின்சாரம் போனது.அதற்குப் பின் மூலக்கொத்தளம் போக ஆன அந்த 6 மணி நேரத்திலும் மின்சாரம் ஊர்வலம் போன எந்தப் பாதையிலும் இல்லை. அங்கங்கே மக்கள் மெழுகு வர்த்தியுடன் நின்றார்கள். கூட்டத்தின் பின்புறம் இருந்து எப்படியோ ஒரு M80 யில் தொற்றி முன் செல்ல முயன்று கொண்டிருந்த திரு.வெள்ளையன் எங்களைக் கடந்தார்.அவரிடம் இயக்குநர் சேரன் திரு.திருமாவளவன் பாதையை மாற்றுவதற்காய் சொன்ன காரணத்தைச் சொன்னார். அதற்கு திரு.வெள்ளையன் ”புரசைவாக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு கடையும் வணிகர் சங்கத்திற்கு உட்பட்டது, புரசைவாக்கம் எங்களுடைய கோட்டை, அங்கு அப்படி நடக்க வழியில்லை, ஏன் மாற்றினார் பாதையை என்பது எனக்கு விளங்கவில்லை” என்று சொல்லிப் போனார்.அவரின் சகோதரர் புகழேந்தி பாதை மாறிய வருத்தத்தில் ”முத்துக்குமாரனின் ஊர்வலம் ஆளற்ற மின்சாரம் அற்ற பாதையில் பொகிறதே, அவன் தியாகம் இருட்டடிக்கப்பட்டதே”என்று உணர்ச்சிவசப்பட்டுக் கண் கலங்கினார். யார் என்று தெரியாத ஒருவர் சொன்னார், ”இப்பகுதி விடுதலைச் சிறுத்தை” கட்சியின் உறுப்பினர்கள் அதிகமாய் உள்ளப் பகுதி, அவர்களிடம் தன் முக்கியத்துவத்தை உணர்த்த திருமாவளவன் பாதையை இப்பக்கம் திருப்பி இருக்கலாம், மூலக் கொத்தளத்தை தேர்வு செய்யவும் இதே காரணமாய் இருந்திருக்கலாம் என்று அவருடைய கருத்தைச் சொன்னார். எது எப்படியோ மின்சாரம் இல்லாத தெருக்களின் வழியாய் முத்துக்குமாரும் அவனுடைய தியாகமும் இருள் வீதிகளில் போனது ஊர்வலத்தின் முன் பகுதி இடுகாட்டினுள் சென்றுவிட முத்துக்குமாரனின் சடலம் அவன் வார்த்தையில் சொல்வதாய் இருந்தால் அவன் நமக்குத் தந்த ஆயுதம் இடுகாட்டினுள் வந்த பாடில்லை. மாணவர்களும் மற்றவர்களும் பாலத்தில் அமர்ந்து மறியல் செய்கின்றனர் சடலத்தை விட மறுக்கிறார்கள் என்று தகவல் வர தலைவர்கள் தங்களால் வந்து பேச இயலாது, அளவுக்கு மீறிப் போகிறார்கள் என்றார்கள். இயக்குநர் சேரனுடன் பாலத்திற்குச் சென்றேன். செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள்(சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர்கள்), மூன்று நாட்களாய் முத்துக்குமாரனோடு இருந்தவர்கள், சில மணி நேரத்திற்கு முன் வன்னியரசால் வலுக்கட்டாயமாக சாலை மாறிய போது தள்ளப்பட்டவர்கள் அரசியல் கட்சி சாராதோர் சிலர் என ஒரு 300 பேர் முத்துக்குமாரனின் உடல் இருந்த வண்டி முன் மறியல் செய்து கொண்டிருந்தார்கள் தமிழகம் முழுவது கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறையை அரசாங்கம் அறிவித்தது அப்போதுதான் அவர்கள் வாயிலாக எங்களுக்குத் தெரிந்தது. கல்லூரி விடுமுறையானால் மாணவர்கள் ஒன்று சேர இயலாது ,போராட்டங்களை முன்னெடுக்க முடியாது, முத்துக்குமாரின் தியாகம் விழலுக்கு இரைத்த நீராகிவிடும் எனவே கலைஞர் இல்லத்திற்கோ தலைமைச் செயலகத்திற்கோ முத்துக்குமாரனின் சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. எங்களால் பதில் சொல்ல இயலாமல் நாங்கள் திகைத்தோம். அவர்களின் பார்வையும் புரிதலும் சரியாகவே இருந்தது. வன்னியரசும் பேசிப்பார்த்தார்.இறுதியில் வலுக்கட்டாயமாக ஊர்வலத்தை இடுகாட்டிற்குள் திருப்பினார்கள்.நானும் சேரனும் முன் சென்றோம். தலைவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்தோம். தலைவர்கள் மிகுந்த எரிச்சலில் இருந்தார்கள். திரு.பழ. நெடுமாறன் ”இவங்கல்லாம் மாணவங்களே இல்லை” என்றார். திரு.வை.கோ அரஜாகவாதிகள் எனப் பொருள் படச் சொன்னார். முத்துக்குமார் நமக்கு தந்த ஆயுதம் எரியூட்டப்பட்டது. அதற்குப்பின் மேடையில் அனைவரும் வீர உரையாற்றினார்கள்.
ராம்