களப்பிறர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
களப்பிறர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19/9/17

பறையர் என்னும் பழந்தமிழர்வரலாறு





தமிழினத்தின் மூத்தகுடியான பறையர்களின் வரலாற்றை புத்தகங்களின் மூலமும் பழமொழிகளின் மூலமும் ஆதாரத்தைக் கொண்டு விவரிக்கிறார்.

தமிழர்.திரு.செல்வமணியன் அவர்கள்.

26/6/09

இருண்டகாலத் திரை கிழித்துத் தலைநிமிரும் களப்பிறர் வரலாறு! – செல்வமணியன்


1.எழுத்தில் நெளியும் வக்கிர வன்மம்
”ஏடறிந்த வரலாறெல்லாம் வகுப்புப் போராட்டத்தின் வரலாறே” என்கிறது மார்க்சியம். இது அந்த ஏடறிந்த வரலாற்றின் இண்டு இடுக்குகளில் சிக்கிச் சிதைந்து சினந்து நிற்கும் முரண்பாடுகளை எல்லாம் முச்சந்திக்கு இழுத்து வந்து தீர்வு காண்பதன் மூலம் முன்னேறுவதே வரலாற்றுப் புரட்சிகள் என்கிறது.
ஆக, புரட்சிக்கு வரலாற்றின் பார்வை மிகவும் இன்றியமையாததாகும். முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதோ புரட்சியை முன்னேற்றுவதற்குரிய வழிமுறையாகும்.

மார்க்சியம் கண்டறிந்து இண்டு இடுக்குகளிலிருந்து வெளியே இழுத்து வந்து முச்சந்தியில் நிறுத்திய, எழுதப்பட்ட வரலாற்றுக்கும் இதனுள் எழுதப்படாமல் அலை மோதும் அழிக்கப்பட்ட வரலாற்றுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கும், மோதல்களுக்கும் தமிழக வரலாறு விதிவிலக்குப் பெற்றதல்ல.

தமிழகத்தின் வரலாறும் அத்தகு வரலாற்று மறைப்புகளை – அழித்தொழிப்புகளை ஆதிக்க வெறியில் மேற்கொண்டு வளர்ந்து வந்ததுதானாகும். அப்போக்குக்கு முதலுரிமையும் உடையதுமாகும்.
இது தம்மால் அழிக்கப்பட்ட மக்களின் வாழ்வு உண்மைகளை-உரிமைகளைப் பறித்தெடுத்தும்,வேரறுத்தும், திரித்துப் புரட்டியும், இருட்டிப்புச் செய்தும், சமரசப் படுத்தியும், தன்வயப்படுத்தியும் தனக்குரிமையுடையது என்று சொல்லிக் கொண்டும் வளர்ந்தது தானாகும். அறிவுக் களவாடல் – இலக்கியக் களவாடல் செய்தது தானாகும். ஆனால் இப்போக்குகளும், மறைப்பு முயற்சிகளும் மற்ற நாடுகளின் வரலாற்றைப் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு துகள்களாக்கப்பட்டு மறைந்து கிடக்கவில்லை. மாறாக, வெளிப்படையாகவே ஒரு மூட்டைக் கட்டி மூடி மறைக்கப்பட்ட நிலையில் தேங்கியும், திட்டுத் திட்டாக முட்டிக் கொண்டும் கிடக்கிறது.
தமிழக வரலாறெழுதிகளோ தேங்கிக் கிடக்கும் அவ்வரலாற்றை ”முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயல்வது போல்” என மக்கள் தம் வழக்கு மொழியில் சொல்வார்களே, அதனைப் போல் தங்களால் அழிக்கப்பட்டோரின் வரலாற்றைத் “தமிழ்“ என்ற மொழிச் சொல்லுக்குள் அடைத்து மறைத்து இருட்டிப்பு செய்ய முயன்று வருகின்றனர். தமிழகத்தின் வரலாறு முழுவதிலும் அவ்வாறே செய்து வந்துள்ளனர்.
அறிவியல் ஆய்வுகள் பெருத்துப் போயுள்ள தற்காலத்திலும் கூட, இதில் தமிழ் மொழியின் இலக்கிய-இலக்கணப் “பெருமை“ பேசும் புலவர்கள் தொடங்கி, மார்க்சியத்தால் தமிழரை விடுதலை செய்ய “ஆய்வு“ நடத்தும் ஆய்வாளர்கள் வரை இம்மறைப்புப் பணியில் தங்களுக்குள் கைகுலுக்கிக் கொண்டு ஒற்றுமையாய் ஓர் அணியாய் நிற்கின்றனர்.
அவர்களின் எழுத்துக்களில் அழிக்கப்பட்டோர் மீதான வக்கிர வன்மம் நெளிந்து நிமிர்ந்து வளைந்து குழைந்து கிடக்கின்றது.

எழுத்தில் கட்டமைக்கப்பட்ட தமிழகத்தின் வரலாறு “சங்க காலம்” எனச் சொல்லப்படும் காலம் தொடங்கி தமிழகத்தின் மீது அய்ரோப்பிய பிரித்தானியர் ஆட்சி செலுத்திய காலம் வரையிலான நெடியதும் பல்வேறு காலப் பகுப்புகளைத் தனக்குள் கொண்டதுமாகும்.
வரலாறெழுதிகள் பலரும் அவற்றைப் பல்வேறு வகைகளில் வகைப்படுத்தியுள்ளனர். அவற்றுள் பொதுவானதாகக் கொள்ளப்படும் வரிசை முறையை நாம் இங்கு பார்வைக்காகப் பின்வருமாறு முன்வைக்கலாம்.
1.சங்க காலம். 2.சங்கம் மருவிய அல்லது அழிந்த காலம் அல்லது களப்பிறர் காலம் அல்லது இருண்ட காலம். 3.பல்லவர்கள் மற்றும் பக்தி இயக்கத் தொடக்கக் காலம். 4.பிற்காலச் சோழர்கள் எழுச்சி மற்றும் பக்தி இயக்க உச்ச காலம். 5.பிற்காலப் பாண்டியப் பேரரசு மற்றும் பக்தி இயக்க முடிவு காலம். 6.முகமதியர் படையெடுப்புக் காலம். 7.இந்து எழுச்சி விசயநகரப் பேரரசு மற்றும் பக்தி இயக்கப் பெருஞ் சமரசக் காலம். 8.நாயக்கர் மற்றும் பாளையக்காரர் காலம். 9.அய்ரோப்பியர் மற்றும் விடுதலைக் காலம். 10.தற்காலத் தமிழ் மாநிலக் காலம்.
இவைதாம் நமக்கு அறிய வந்துள்ள தமிழக வரலாற்றின் உள்ளடக்கம்.

இப்படி வகைப்பட்டுள்ள காலப் பகுப்புகளில் தமிழக வரலாற்றியலின் தொடக்கமாக வைக்கப் பெற்றுள்ள சங்க காலம் என்பது அது குறிப்பிடும் தன்மையில் நீண்ட நெடியதும் தனக்கென தனித்த இலக்கிய – இலக்கண எழுத்துப் பதிவுருக்களைக் கொணடதாகும்.
அவ்விலக்கிய இலக்கணங்கள் நமக்கு தமிழ் கொண்டு வளர்ந்தெழுந்த தமிழரின் வரலாற்றில் வளர்ந்தோங்கிய சேர, சோழ, பாண்டியர் எனும் மூன்று தனித்தனி அரசுக் குடிகளை தனித்தனிப் பாடல்கள் மூலம் பேரரசுகள் வடிவில் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன.
அப்பேரரசுக் குடிகள் போர் வெறியோடு நாடு பிடி வேட்டையாடிய பெருமைகளை அவை வானளாவப் புகழ்கின்றன. பல்வேறு பழங்குடிகள் மற்றும் சிற்றரசுகள் மீது அப்பேரரசுகள் நடத்திய நாடு பிடி வேட்டை வெறியாட்டத்தை “அரச வாகை“ என்னும் “பார்ப்பன வாகை“ என்றும் வழிதுறை பிரித்து விதந்தோதுகின்றன.
இவ்வெற்றிகளைக் கொண்டு அப்பேரரசு மன்னர்களும் பெருமைக்குரியோரும் தங்கள் வெற்றிக்கு உதவியோர்க்கும், பார்ப்பனர்களுக்கும் பரிசுகள், நிலக்கொடைகள், வளக்கொடைகள் வழங்கி புகழ்ந்து புரக்கும் காட்சிகள் நல்ல தமிழில் நயப்பட விளக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் இம்மூன்று தமிழ்ப் பேரரசுகளின் பின்னணியிலும், பெருந்தமிழ் நாட்டின் பொது மக்களும், பிறரும் “வரிசைக்கு வருந்தும் பரிசிலர் வாழ்க்கை“ வாழ்ந்து, பேரரசுகளின் பெருவாயிற் புரங்களில் இரந்து புகழ்ப்பாட்டுக்கள் பாடிப் பரிசுகள் கேட்டுக் கிடைக்காமல், காடு மேடு என அலைந்து திரிந்து, கானக காடுகளின் சுனைகளில் நீரருந்திக் களைப்பாறி, கடையேழு வள்ளல்களின் இருப்பிடம் தேடிச் சென்று மலர்ந்த முகத்தோடு கையேந்திய நிலையையும் இரங்கற் குரலில் எடுத்துரைத்தும் நிற்கின்றன.
இப்படி இருவகை நிலைகளை எழுத்துப் பதிவில் முன்வைக்கும் சங்க கால இலக்கியங்களின் கட்டமைப்புகளின் இண்டு இடுக்குகள் எல்லாம் தமிழ்ப் பழங்குடி மக்களின் மரண ஒலிகளும், புலவர்களின் வறுமைக் கண்ணீரும், பெண்களின் ஓலமும் எங்கும் நிறைந்து நிற்கின்றன.

அவை தங்கள் வாழ்வின் மேல் நடத்தப்பட்ட அரசவாகை, பார்ப்பன வாகை வெறியாட்டங்களைச் சொல்லாமல் சொல்லி, நம் நெஞ்சைப் பிளக்கும் அளவுக்கு விண்ணுயர்ந்து நின்று, இலக்கிய உச்சியில் “ஓங்கார ஓலம்“ எழுப்புகின்றன.
தமிழக வரலாற்றியலின் தொடக்க காலம் இப்படியிருக்க, அதைத் தொடர்ந்து வரும் இரண்டாம் காலப் பகுப்பாகிய சங்கம் மருவிய அல்லது களப்பிறர் அல்லது இருண்ட காலம் எனப்படும் பகுப்போ, அச்சங்க காலத் தமிழர் வாழ்க்கையையே தலை கீழாகப் புரட்டிப் போட்டு நம் முன் நிறுத்துகிறது.
(தொடரும்)

1/6/09

மீண்டும் எழட்டும் “ஆ“ பத்து - தமிழின் களப்பிற மரபு புதிய களத்தை உருவாக்கட்டும் - செல்வமணியன்


அறக்கண் பத்துக்கட்டுப் பறை உயர்த்தி

எழுகிறது தமிழ் ஆதனிய ‘’ஆ’’ பத்து!

மீண்டும் மக்கள் உள்ளத்தில் பாயட்டும் ஆசீகவ அக்கப்போர்!

மக்கள் வாழ்வில் மலரட்டும் மார்க்சிய மக்கள் போர்!


மிழகம் தனித்த வரலாற்று மரபுரிமையும் அதனை வளப்படுத்திய தனித்தத் தத்துவச் செறிவையும் கொண்டு வாழ்ந்து வரும் ஒரு சமுதாயமாகும்.

இதன் வரலாற்று நெடுகிலும் மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான தத்துவப் போராட்டங்களும் களப் போரிடல்களும் நிறைந்தே கிடைக்கின்றன. அவை நன்மைகளை உயர்த்திப் பிடித்தும் தீமைகளை எதிர்த்துப் போராடியுமே முன்னேறியுள்ளன.


இன்றைக்குத் தமிழராய் அறியப்படும் பழந் தமிழ்ச் சமுதாயம் அது உருண்டு திரண்டெழுந்த வரலாற்றில் அதன் வாழ்க்கைப் பட்டறிவுகளில் உயர்த்திப் பிடித்திருந்த பெருங் கோட்பாடு “அறம்” எனும் ஒற்றைச் சொல்லாகும். அது வரைமுறை மிகுந்த வாழ்க்கைச் செழுமையின் வரையறுப்பாகும்.


பழந்தமிழ்ச் சமுதாயம் தன் தொடக்க கால ஆட்சிமுறையின் உருத்திரட்சிகளிலும் மலர்ச்சிகளிலும் அந்த அறத்தையே கண்ணாக நிறுத்தி அதனைக் கண்போல் காத்து வந்தது.

அந்த "அறக்கண்" ஆட்சி மூலமே மக்கள் வாழ்வுக்குரிய அகம் – புறம் எனும் பிரிக்கவியலா உளத்தியல் – ஊரியல் செழுமைகளை வரையறுத்துக் காத்து வளர்த்தது.

ஒரு குடிக்குள் எழுபிறப்பு – மூவாழ்க்கை முறை எள ஒரு பட்டுக்கட்டுப் பண்பாட்டை வடித்தெடுத்து தன் வழி மரபில் தொடர்ந்து நிலை நிறுத்தி வந்தது.

குடி குதிரும் இடம் எங்கெங்கும் ஏழ்குடிக் கூட்டுக் குடியாட்சிகளை நிறுவி அவற்றின் எளிமையில் அறத்தின் பெருமையைப் புறத்தில் நிறுத்திப் பறையமாய் உயர்ந்து நின்றது.

மக்களின் அகப்புற வாழ்க்கை முறைகளில் ‘ஆதனியப் – பூதனியப்’ பண்புகளைப் பூத்துக் குலுங்க வைத்தது. புன்னகை மொழியில் பெண்மையின் பெருமை பேசி நின்றது.

பூத்துக் குலுங்கிய தமிழ்ப் பறைமுறை வாழ்க்கையில் ‘வாழைக்கு தன் கன்றே கூற்றாகும்’ என்பதைப் போல் பறைமுறை பிரித்து வளர்த்து வந்த பார்ப்பனியமே அப்பறையத்தின் ஆதனிய – பூதனிய வரைமுறைகளுக்கு எதிரியாய் எழுந்து நின்றது. பறையத்தின் எழுபிறப்பில் அடிப்பிறப்பே எதிர்க்கோலம் பூண்டது.

அப்பார்ப்பனியம் ஆதனியத்தை எரித்து முடிக்கும் ஆரியத்தைக் கையில் தூக்கிக் கொண்டு தீமையைத் தூக்கிப் பிடித்து தீ ஏவும் தேவத்தேரோட்டத்தை நடத்தி அறக்கண் தமிழ்ப் பறையத்திற்கு முடிவு கட்டியது.

தமிழ்ப் பறையம் கட்டி வளர்த்த ஏழ்குடிக் கூட்டாச்சிகளை எரித்து முடித்து அதன் மூவாட்சி முறையைத் தனித்தனியே பிரித்து நிறுத்தி முப்பேரரசு வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது அப்பார்ப்பனியம்.

ஆதனிய – பூதனிய வாழ்க்கைப் பண்புகளுக்கு முடிவு கட்டி பார்ப்பனிய ஆடவக் கொள்கைகளின் மூலம் பேரரசு வெறியாட்டம் ஆடியது.

பார்ப்பு ஆரியத்தை ஆட்சியிலாகக் கொலுவேற்றி வைத்து அறத்தைப்
புறத்தில் நிறுத்தி ஆண்டோரை அப்புறப்படுத்தி வெளியேற்றி வைத்தது.
அவர்களின் குடையறுத்தும் உடை அறுத்தும் கொலை வெறியாடி நின்றது.

இப்படி பார்ப்பாரியம் ஆடிய ஆட்டத்திற்கு எதிராக அது அறுத்தெறிந்த ஆதனிய – பூதனிய வாழ்க்கை முறையை மீட்டு நிலை நிறுத்தப் பிறந்தது ஒரு மரபு.

அது பார்ப்பாரியம் அப்புறப்படுத்தி வெளியேற்றிய பறை அறக் கூட்டத்திலேயே வேர் பிடித்துக் காழ்த்து வளர்ந்தது. பார்ப்பாரித்தை எதிர்த்துக் களமாடும் புதிய களப்பிற மரபை (களம் காணப் பிறக்கும் மரபை) அப்பார்ப்பாரியத்தின் தமிழ்ப் பேரரசுகளுக்கு வெளிநின்று வளர்த்தெடுத்தது.

களப்போரிடும் அம்மரபின் அருவைக் கருவில் நிறுத்தி, கருவை உருவில் நிறுத்தி, உருவைத் திருவில் நிறுத்தி, திருவைத் தெருவில் கொண்டு வந்து நிறுத்திக் களமாடியது.


அந்த களப்பிற மரபு கட்டி வளர்த்து நின்ற போர் முறையே ஆசீவக அக்கப்போர். அது ஆதனியத்தை மீண்டும் வாழவைத்து அதில் பூதனியத்தை பூத்துக் குலுங்க வைக்க மக்கள் உளத்தியலை வலுப்படுத்தும் தத்துவக் களப்போர். அந்தக் களப்போராட பிறந்தவர்களே களப்பிறர்கள்.

அந்தக் களப்பிறக் களப்போரில் பார்ப்பாரிய ஆடவக் கொள்கைளுக்கு எதிராக முகிழ்த்தெழுந்த அக்கால அரசியல் இயக்கங்களே படை அணிவகுப்புகளே சமணமும் புத்தமும்.

”ஆசீவக மனனம், ஆமனச் சமணம், ஆபுத்த அமிழ்தம்” எனும் முக்கூட்டுப் பறை முறையில் புதிதாய் முகிழ்தெழுந்த முப்புள்ளிப் (ஃ) போர் முறைதான் ஆசீவக அக்கப்போர். (இதன் வழி தான் தமிழில் ஃ எனும் குறியீடு ஆய்த எழுத்தாக உலா வருகின்றது)

அந்த ஆசீவக அக்கப்போரை வளர்த்து உருப்படுத்திய ஆட்சியியல் கோட்பாடே உள்ளத்தில் வன்மை வளர்த்து பெண்மை மண வெள்ளத்தில் ஆண்மை நிறுத்தி உரிமையில் ”அறம் – பொருள் – இன்பம்” பிரித்து முப்பால் ”அமிழ்த” ஆட்சி நடத்திய வள்ளுவம்.

வள்ளுவம் அது வாழ்வின் கனவுக் கோர்வையல்ல! களப்பிற மரபின் ”அறக்கண்” ஆட்சியியலின் கைப்போர்வாள்! பார்பாரியத்தை எதிர்த்துக் களமாடிய களப்பிறர்களின் அரசியல் அமைப்பு யாப்பு!

அந்தக் களப்பிற வள்ளுவத்தை அறுத்தெறிந்து அப்புறப்படுத்தி மீண்டும் தன் ஆரிய மரபு நிறுவ எதிர்க்களமாடிய பார்ப்பரியத்தின் புதிய பரம்பரை ஆட்சிப் பெருமைகளே எழுதப்பட்ட தமிழ்நாட்டின் வரலாறு. வரலாற்றில் எழுந்தாடி வரும் இந்து மதவெறியாட்டங்கள்.

இவற்றால் அழிக்கப்பட்ட நந்தன் ஆட்சி ஆறுந்த வீழ்ந்த தன் ‘’ஆ’’முறை மீட்க ஒரு சபதம் இட்டதாம். ஆமாம்! தொடரும் என் சந்ததிகளின் கால்களிலிருந்து மீண்டும் மீண்டும் களப்பிற மரபு பிறக்கும் எனச் சபதம் இட்டதாம்! காலில் தங்கி களம் காணும் மரபு ஒன்று பிறக்கும் எனச் சபதமிட்டதாம்!

அதை ஆசீவகம் மீட்கும் ‘’ஆ’’ பத்து மறைப்பு எனக் கட்டியுரைத்து ஊரெங்கும் உலகெங்கும் உலவ விட்டதாம். ஆமாம் ஆதனிய ஆன்மீக அலறலாக உலவ விட்டதாம்!

என் ‘’ஆ’’ பத்து மீண்டும் எழுந்தால் உனக்கு ஆபத்து என அந்த பார்ப்பரியத்திடம் உறுதியிட்டு உரைத்ததாம்! உனக்கு இறுதி செய்வேன் எனச் சபதமிட்டு இறந்ததாம்.

ஆமாம்! அது தன் மன வெளியை எங்கெங்கும் திறந்து நிறுத்தி விட்டு ‘’ஆ’’ என மண்ணுக்குள் கண்மூடி மறைந்ததாம்! அது இறக்கவில்லை. மறைந்து நிற்கின்றதாம்.

இப்படிப் சொல்கிறது தமிழகப் பறையர்களிடம் வாழ்ந்து செத்து வீழ்ந்துக்கிடக்கும் ஆரியம் கொலைவெறியாடி அறுத்து முடித்த

பறைக்கூத்துப் பாடல்.

”ஆ” பத்தாய் எழுகின்றது... பறைக் கூத்தில்

தனை எரித்த சிவனுக்கு நந்தன் இட்ட இறுதிச் சூளுரை

இறுதியாய் அறுதியிட்டு உறுதியாய்
உரைக்கிறேன்; வேலில் தீ தூக்கி நீயாடும்
வேதிய ஆட்டம் முடிக்க...
நீ அறுத்தெறிந்து எரித்து முடித்த – என்
“அறக்கண்” பத்துக்கட்டுப் பறை தூக்கி
மீண்டும் எழுந்து வருவேன்...

வாழ்ந்த என் முகம் மூடி
முட்டி நிற்கும் இச்சாம்பலிலிருந்து
சாவைக் கொன்றெழும் சனியனாய்
சந்ததியில் அந்தாதிக் கால் பிடித்து
மீண்டும் பிறந்து வருவேன்...

அந்தாதிச் சந்ததியின் கண்ணிரண்டில்
அந்தரத்து ஆதி நீர் மின்னல்
பூப் பூக்கப் புதிதாய் பிறந்து வருவேன்
நெடுவானம் கீறி நிலம் விழும் நீராய்
அவர் தலைக்குள் புகுந்து வருவேன்...

நான் இட்ட வடுவைத்
தீக்கண்ணாய் நிறுத்தி நீயாடி வரும்
தீச்சித்த வேதியக் கொடுமை வீழ்த்த
அந்தாதிச் சந்ததியின் நெற்றியில் – அறுந்த
ஆதித் தமிழ்நீரன் கொள்கை
தூக்கி வருவேன்..

அப்போது....
”நீற்றுப் போனவன் நந்தன்” என்றே
வெற்றியின் வெறியில் நின்று
எனை எரித்த சாம்பலை
நெற்றியில் நீராய்ப் பூசி
சுரிய – ஆரிய – காரிய –
வாரியங் கட்டியாடும் – உன்
“சு” ப்ரமணியக் கொடுமைக்கு
இறுதி செய்வேன்.


உறுதியாய் உரைக்கிறேன்;
இறுதி செய்வேன்... என்
அந்தாதிச் சந்ததியின் நெற்றியில்
வந்தன – சந்தன – நந்தன – அந்தண
“மூ” ஆதித் தமிழ் நீரன் கொள்கை தூக்கி வந்து
உனக்கு உறுதியாய் இறுதி செய்வேன்

என் சாம்பலின் சாவை மிதித்தெழும்
சந்ததி காலில் அறுந்து வீழா இச்சபதம் கட்டி
அங்கை கூப்பி அருவை வணங்கும்
அருந்ததிச் சத்தம் எங்கும் ஒலிக்க...
சதங்கைக் கட்டி உன் முன் ஆட விடுவேன்...

எனைக் கொன்ற நினைப்பில் நீ பூசும்
உன் எரிநெற்றிச் சாநீற்றை –
ஆடும் என் சந்ததி நெடுங்காலில் பூசி
உனக்குப் பரகாலனாய் வந்து நிற்கும்
“தண் கால் – தங்களான்” தலைமை
கட்டி ஆட விடுவேன்...

என் சந்ததி ஆடும் ஆட்டத்தில் நான் நின்று –
நின்றாடுவேன்; உன் முன் நின்றாடுவேன்
நிமிர்ந்தாடுவேன்; தலை நிமிர்ந்தாடுவேன்
வென்றாடுவேன்; நான் வென்றாடுவேன்
சாப்பறையில் சங்கப்பறை தட்டி
வென்றாடுவேன்.

கொன்றாடுவேன் நான் கொன்றாடுவேன்
தீய உன் தீக் கொள்கைக் கொன்றாடுவேன்
வீழா என் சந்ததியின் தலையில்
நீ பறித்த மயிற் பீலி மீண்டும் சுட்டிக்
கொண்டாடுவேன்
நீ அறுத்த ஆதிச் சுற்றம் கூட்டி விழாக்
கொண்டாடுவேன்.வீழாப் பறையம் கட்டி
விழாக் கொண்டாடுவேன்...


மறைந்து நிற்கும் அந்த “ஆ” பத்தை மீட்டும் தட்டியெழுப்ப வேண்டிய தேவை வந்து விட்டது. மீண்டும் களப்பிற மரபைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது.

ஆம்! தமிழகம் இன்றைக்கு “இந்திய” வல்லரசின் வெறியாட்டத்தின் கீழ் ஒரு புறம் சாதியத்தாலும் மறுபுறம் வல்லரசியக் கொடுமைகளாலும் அழிக்கப்பட்டு வருகின்றது.

அதன் வளங்களும் உரிமைகளும் எல்லையற்ற வல்லரசியக் கொள்ளைக்கு இலக்காகிக் கிடக்கின்றன. அவற்றை மீட்க எரிக்கும் சாதியத்துக்கும், அழிக்கும் வல்லரசியத்திற்கும் முடிவு கட்டும் ஒரு புதிய களப்பிற மரபை உருவாக்க வேண்டும்.

மக்கள் உளத்தியலில் நன்மையைப்படைக்கும், ஆசீவக அக்கப்போரையும், உரிமையியலில் நாடு மீட்கும் மார்க்சிய மக்கள் போரையும் கட்டி எழுப்பி புதிய களப்போரை இனி நாம் நடத்தவேண்டும்.


தமிழகத்தின் செழுமையான வரலாற்றுத் தத்துவ மரபில் ஊறியெழும் புதிய கம்யூனிசக் களப்பிற மரபைத் தடடியெழுப்புவோம்! ஆதிக்க வெறியாடும் சாதியப் பார்பாரியத்தையும், வல்லரசிய இந்தியத்தையும் வெட்டி வீழ்த்துவோம்!